தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 85 - பிந்து வினோத்
85. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதியின் வீட்டையும், நிலங்களையும் கவனித்துக் கொள்ளும் அவளின் தூரத்து உறவினரான கிஷோரும் அவர் குடும்பமும் மட்டும் அல்லாது, அவளின் வீட்டின் அருகே இருந்த மற்ற உறவினர்களும் கூட பாரதியும் அவள் கணவனும் அங்கே வந்திருப்பதை தெரிந்து மறுநாள் வீட்டிற்கு வரவும், பாரதி சிறிது நேரம் திண்டாடிப் போனாள்.
எப்போதும் போல விவேக் அனைவருடனும் இயல்பாக பேசிப் பழகவும், பாரதியால் சில நிமிடங்களில் இயல்புக்கு திரும்ப முடிந்தது. ஆனாலும் உறவு முறை வைத்து மற்றவர்கள் பேச, பலமுறை அவள் புரியாது விழிக்க வேண்டி இருந்தது! அது மாதிரியான நேரங்களில் எல்லாம் ஏதாவது சொல்லி, விவேக் அவளை காப்பாற்றினான். அவள் விழிகளால் நன்றி சொல்லவும்,
“இதெல்லாம் பத்தாது, வட்டியோட திருப்பி தரனும்! எனக்கு பிடிச்ச மாதிரி,” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி அவளை வெட்கப் படவும் வைத்தான்.
“அக்கா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்க. நீ எப்போவும் ராணி போல் வாழ்வன்னு தான் சொல்வாங்க. இப்போ உனக்கு அதே போல வாழ்க்கையும் அமைஞ்சு இருக்கு. ரொம்ப சந்தோஷம் பாரதி! எப்போவும் இரண்டுப் பேரும் இதே போல சந்தோஷமா இருங்க,” என்று அவளுடைய அம்மாவின் தங்கை முறை கொண்ட உறவினள் வாழ்த்தி விட்டு செல்லவும், பாரதிக்கு அவளுடைய அம்மாவே நேரில் வாழ்த்தியது போல் உள்ளம் குளிர்ந்துப் போனது!
🌼🌸❀✿🌷
அடுத்து வந்த நாட்களில், பாரதியும், விவேக்கும் ஒவ்வொரு வினாடியையும் ஒன்றாக செலவிட்டார்கள்! நிறைய பேசினார்கள்! ஒருவரை பற்றி மற்றவர் அதுவரை அறிந்திராத விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்கள். கணவனுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து (சமைக்க முயற்சி செய்து) பாரதி பரிமாற, சந்தோஷமாக அதை உண்டு மகிழ்ந்தான் விவேக்.
அவர்களை வந்து சந்தித்துப் பேசிய உறவினர் வீட்டிற்கு எல்லாம் இருவரும் ஜோடியாக எதிர்பாராத பரிசுடன் சென்று ஆச்சர்யப் படுத்தினார்கள்.