01. நறுமீன் காதல் - அனு.ஆர்
வரலாற்றில் காணப்படும் ஸெர்ஸெக்ஸ் மன்னனின் கதையை என்பார்வையில் எழுதும் ஆவலில் பிறந்தது இது. (பெர்ஷிய மொழியில் இருந்து இப்பெயர் ஷெஷாங்க், ஷாயின்ஷா என்றெல்லாம் வழங்கப்படுகிறது) இப்பெயரின் பொருள் மன்னாதி மன்னன். அதனால் பல பேரரசர்கள் இதே வார்த்தையால் குறிக்க பட்டிருக்கலாம் என்றெல்லாம் பல கருத்து நிலவுகிறது. நான் வரலாற்றை சொல்ல எழுதவில்லை நறுமீன் காதல். தலையங்கம் குறிப்பதுபோல் இது காதல் கதை.
மௌனம் யான் விரும்பிலேன்
மயக்கம் எதன் மீதும் கொண்டிலேன் என்பாள்; அணங்கிவள்
பற்றும் பாசமும் பைந்தொடி கைக்காகி வந்ததை
பிடி பலத்துடன் பிழையின்றி புரிவதிலன்றோ?
எஃகிணையது மடந்தை இவள் மென் மனம்.
ஒழுக்கம் ஓம்பும் இவள் தலைவி!
திருநாமம் ஆதஷை. (1)
கருநீள கயல்கள், வளைந்த விற்கள்
மேலாக கார்மேகம் இவை தீட்டி
ஒளி உமிழும் ஆடி பெட்டகத்தை
முகம் என்றே செப்பினான் செய்தவன்.
வான்மேகத்துடன் ஊடியதோ பருவ நிலா
தரை மேலே இவள் வாசம்.
காண்போர் இதயம் இக்கேள்வியின் வசம். (2)
அன்றமைந்த மதுரை பாண்டிய பெருநகர்
ஆதித்த கரிகாலன் அமர்ந்தாண்ட காஞ்சி
எதிராளன் நுழை புகா பூம்புகார்
போன்றதொரு தரணி போற்றும் தலைநரம்
சுகஸ்தானம், பெயருண்டே காரணத்தால்.
சுகம்குறையா காத்து கோலேச்சியவன், கொற்றவன், தலைவன்!
அவன் நாமம் ஷெஷாங்கன். (3)
நின்றால் இமயம்; நேர் சென்றால் அம்பு
முகம் அவிர் கனலி; முழு உடல் செங்கனலி.
இருள் கண்டது அலை சிகை;
நடை குருளையின் முன்னோர்,
நெடுந்தேகம் தந்தது தேக்கு
கற்புடை மகளிர், ஊண் கண் குருடர்,
ஏனையர் பார்வைக்கு இவன் விருந்து. (3)
கால்பட்ட இடம் இவனுக்கு சொந்தம்;
கை பட்டவுடன் அது ஆகி விடும் சொர்க்கம்.
தோல்வி அறியான்; மக்கள் நலம் நன்கறிவான்.
தேசம் இவன் சுவாசம்; அது உண்டு
நூற்று இருபத்து ஏழு இவன் வசம்.
வேறு வேறு காலாச்சாரம், அதை
புரிந்து தந்தையாகும் இவன் அதிகாரம். (4)
ஷெஷாங்கன் பாதி வசந்த ஒய்யாரி வஸ்தி
வசமிழந்தே மணந்தவனை, மன்னனாகி நின்றவனை
மதியாமல் சொல்மீறி அரச குற்றம் புரிந்தாள்.
அதன் தண்டணை அரசுக்குள் அவள் நிழல்கூட நுழைய தடை.
அது ஆங்கு சட்டம் அதன் நிமித்தம் முறிந்தது அவள் விவாகம்
அரசவை முடிவை அரசனே மீறுவது அங்கு மீகுற்றம்.
திரும்பா பயணம் அவள் போனாள். தண்டணை உபயம். (5)
இவன் துடித்திருந்தான், தனித்திருக்க தான் விளைந்தான். உண்மை!
நல்லரசி நாட்டிற்கு வேண்டும் நாடி அடைதல் உன் கடமை
புதுமனையாள் இன்றே கொள்க! இது அரசவை ஆலோசனை
என்பதாய் ஒரு ஆணை தேடிக் கொன்றது அவனை.
கோமகனே வரிசட்டம் வரிந்துடைத்தால் வாராது நன்மை
ஆங்கின் கொணர்க! அரசவை அதின்ஆணை காக்கும் பெண்மை
துயர் கடலில் துடித்தாலும், செப்பினான், சட்டத்திற்கு நான் அடிமை. (6)
தொடரும்
{kunena_discuss:789}