சந்நிதியில் நின்று தனக்காக வேண்டிக்கொள்ளாமல், ராம் என்று தன்னவனின் பெயருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டிருந்தவள் அவனின் குரல் தனக்கு அருகாமையில் கேட்க விழி திறந்து பார்த்தாள்…
அவளின் மன்னவன் தான்…. அவள் இரவுகளின் ரகசிய கனவு நாயகன் தான்… சீதை என்ற பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லிக்கொண்டிருந்தான் அவன்….
காண்பது நனவு தான் என்றாலும் நம்ப மறுத்தது அவள் மனது… நான் இன்று வரப்போவதாக தகவல் சொல்லவில்லையே என்றெண்ணியவளுக்கு சட்டென்று தினேஷ் நினைவு வர, அனைத்தும் விளங்கியது நொடிப்பொழுதில்…
மந்தகாசம் மாறாத புன்னகையுடன் தனது அருகில் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவளை கனிவுடன் பார்த்தவன், அவளிடம் ஒரு பரிசை கொடுத்தான்… அவள் என்ன என்று கேட்க, பிரித்துப்பார் என்று கண் இமைத்தான்…
நந்து சித்துவுடன் வீட்டிற்கு போக வேண்டும்… நான் லேட்டாக போனால் என்ன சொல்வார்கள் அண்ணா என்றபடி அவள் அவனைப் பார்க்க, நான் பார்த்துக்கொள்கிறேன், நீ இப்போது பிரிடா… ப்ளீஸ் என்றபடி கெஞ்ச, சரி என்று அவள் தலை அசைத்த வண்ணம் பிரித்தாள்…
நீல நிறத்தில் பரந்திருந்த வானத்தில், ஆங்காங்கே சூரியனின் செந்நிறக்கதிர்கள் போல சில கோடுகள், மேலும், நங்கையின் வெட்கம் போல சிவந்த முந்தானை… கொடி போன்று வெள்ளைக்கற்கள் உடல் முழுவதும் பதிக்கப்பட்டு ஜொலித்தது அந்த அழகிய புடவை…
அவள் இதுவரை புடவை அணிந்ததில்லை… முதன் முறையாக தன்னவன் கொடுத்த பரிசு… அதுவும் அவனின் கையால் எடுத்து கொடுத்த புடவை…. அவனே தேர்வு செய்த புடவை…
மகிழ்ச்சி பொங்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், ரொம்ப அழகா இருக்கு உங்களை மாதிரி என்றாள்… ஹ்ம்ம்ம் ஹூம்…. என் சகிக்காக வாங்கினதால தான் ரொம்ப அழகா தெரியுது என்றான்…
சகியா?... என்று விழி விரிக்க, ஆமாடா… நீதான்… உன் மேல ரொம்ப காதலா ஆகிட்டேன்னா, நான் உன்னை சகின்னு தான் சொல்லுவேன்… சீதைன்னு சொல்லுறதும் அதீத காதலினால் தான்… உன் பெயரே சாகரி தானே… ஹ்ம்ம்… அதோட செல்ல பேரு தான் இந்த சகி…. நாம மட்டும் இருக்கும்போது உன்னை நான் கூப்பிடுற செல்லப்பெயரில் இதுவும் ஒன்று…
அவன் சொன்னதை கேட்டு வெட்கத்துடன் புன்னகை ஒன்று சிந்தியவளிடம், ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு வந்து அவளின் முன் நின்றான் கையில் ஒரு சிலையுடன்…
இது என்று அவள் யோசிக்கையிலே, ரொம்ப யோசிக்காதேடா… இது நீ எனக்கு கொடுத்த பரிசு தான்… அதை தான் சிலையாக வடிக்க சொல்லியிருந்தேன்…. உன் பிறந்த நாள் அன்று உன்னிடம் காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தேன்… நான் நினைத்தது போலவே நடந்து விட்டது…. எப்படி இருக்குடா சீதை?...
என்ன சொல்லுவாள் அவள்… தன்னவனை எண்ணி அவள் வரைந்திருந்த ஓவியத்திற்கு அவன் உயிர் கொடுத்ததற்கு நன்றி சொல்வாளா?... இதை பூஜையறையில் வைத்து இனி அணுதினமும் பார்த்து ரசிப்பேனென்று கூறும் அவனிடம் தஞ்சம் புகுவாளா?...
உண்மையில் அது தெய்வ உருவத்துடன் தான் காட்சியளித்தது…. ஆனால் அந்த சீதா-ராமனின் காதல் மட்டும் இவர்களது காதலை பிரதிபலித்தது…
விழிகளால் அவனை அழைத்தாள்… அவள் சொன்ன சேதி புரிந்தவன், மெல்ல அவள் விழிகளுக்குள் கட்டுண்டான்… நிமிடங்கள் கரைய, நேரங்கள் கழிய, ஒருவரை ஒருவர் இமை ஆடாத பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தனர்…
கனவு தான் மயக்கம் கொடுக்குமா?.... காதலர்களின் பார்வைகள் மயக்கம் தராதா?... தரும் என்று சொல்லியது அந்த நான்கு விழிகளும்…. விழி காட்டிய காதல் நதியில் அவர்கள் இமைக்காமல் பயணித்தனர்…
அவளின் விழி சொன்ன பாஷையில் அது உரைத்த செய்தியில் தன்னை மறந்திருந்தான் ஆதர்ஷ்….
மயங்கிய மனதை தட்டி எழுப்பி சுயநிலைக்கு அழைத்து வந்தான் ஆதர்ஷ்…. ப்ளீஸ்டா… குட்டிமா… போதும்…. இப்படி விழியால் என்னை புரட்டி போடாதே…. ப்ளீஸ்… உனது அபிநயத்தில் நான் ஏற்கனவே என்னை தொலைத்தவனாவேன்…. மீண்டும் என்னை உன்னில் இப்போது தொலைக்க செய்யாதே சீதை…
அவன் வாய்மொழி கேட்டு பிரமித்தவளிடம், ஹ்ம்ம்… அன்று மும்பை செல்வதற்கு அனுமதி கேட்டு தினேஷிடம் பேச வந்த போது, அவர் இல்லை… சரி என்று நான் திரும்ப போகையில், உன் குரல் கேட்டது… நந்துவிற்கு பரத நாட்டியம் ஆட சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாய்…. அப்படியே மெய்மறந்து போய் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மனமில்லாமல் வீட்டிற்கு சென்றேண்டா.... எப்படிடா… இப்படி அபிநயத்தை முகத்தில் காட்டுற…. அந்த நேரத்தில் நிஜமாவே உன்னை அதிகம் காதலித்தேண்டி…. என் சீதையின் அபிநயமும் என்னை வெகுவாய் கவர்ந்துவிட்டது… ஹ்ம்ம்…. என்னோட அபிநயா…. என் அபிநயா…..
ஆதர்ஷின் வார்த்தைகள் அவளுக்கு நிறைவு தந்ததா இல்லை அவனின் அளவில்லாத காதல் அவளுக்குள் பூத்து குலுங்கியதா?... அவள் அறியாள்… இவனுடனான இந்த பந்தம், சொந்தம், பிணைப்பு ஏழேழு ஜென்மங்கள் தொடர வேண்டும் என அவள் கடவுளிடம் விண்ணப்பம் போட்டாள்…
தன்னை இந்த அளவு காதலிக்கும் தன்னவனுக்கு நான் என்ன செய்ய போகிறேன்???.... எப்படி என் அன்பை புரிய வைப்பேன்???... என்ன உரைத்து என் காதலை வெளிக்கொணர முடியும்???...
கண்களில் பொங்கி வழியும் காதலுடன் அவனைப் பார்த்திருந்தாள் அவள்… கூடவே கண்ணீரும் வழிந்தது…. வேண்டாம்டா…. அழாதே…. என்று அவன் தலை ஆட்ட,
என் ராம்…. என் தர்ஷ்….. என்று அவள் உதடுகள் முணுமுணுக்க, அவனோ ஆகாயத்தில் பறந்தான் அவள் சொன்ன பெயரைக்கேட்டு….
வளர்ந்துவிட்ட காதலில் வளராத பிள்ளைகள் போல் செல்லப்பெயர் வைத்து அழைத்துக்கொள்கின்றனர் இருவரும்… காதலின் சாரம்சங்களில் இதுவும் ஒன்று தானோ???!!!...
கார்கால மழைக்கூந்தல் தான் அவளுடையது… ஆனால் அதில் ஏதோ குறைவது போன்று அவனுக்கு தோன்றியது…
என்ன என்று யோசித்து பார்க்கையில் அவனுக்கு அந்த உண்மை விளங்கியது….
அவளிடம் சில நிமிட அவகாசம் கேட்டு விட்டு வந்து செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்து விட்டு வரும்போது, சாகரி இருவரோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்…
அந்த கோவிலின் குருக்கள், மற்றும் இன்னுமொரு பெரியவர், சரியாக சொல்லவேண்டுமானால் கடவுளின் பிரதிபலிப்பாக தேஜஸ் நிறைந்த கண்களுடன், கருணையே வடிவாக இதழ்களில் நிறைந்திருந்த புன்னகையுடன் இருந்தார் அவர்…
இன்னைக்கு சாகரி பிறந்தநாள் சுவாமி…. அவளை ஆசீர்வாதம் பண்ணுங்கோ… சாகரி பெரியவா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ என்றவரை அப்போது அங்கே வந்த இன்னொரு நபர் கூப்பிட குருக்கள் சென்று விட்டார்…
அவள் ஆசீர்வாதம் பண்ணுங்க சுவாமி என்று அவர் காலில் விழப்போகையில் அவர் அவளிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு, திரும்பிப்பார்த்தார்… தொலைவில் இருந்த ஆதர்ஷை அருகே அழைத்தார்… அவனும் ஒன்றும் புரியாமல் அவரை நோக்கி வர, அவளும் என்ன செய்வதென்று எண்ணினாள்…
அவன் அவள் அருகே வந்து நிற்க, அவள் சற்று தள்ளி நின்றாள்… அதைப் பார்த்த சுவாமியின் இதழ்கள் வெற்றுப்புன்னகை ஒன்று சிந்தியது… கருவறையில் உள்ள அந்த ஸ்ரீராமனையும் சீதா பிராட்டியையும் கண் முன் கண்டவர், வாழ்வாங்கு வாழ்வாய் ராம்… உன் பக்கத்தில் இருப்பவள் அந்த மகாலஷ்மியின் அவதாரம்…. அவளை நீ என்னதான் கண்ணின் மணி போல் பாதுகாத்தாலும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்… உதவி செய்ததன் பலன், பிரதிபலிப்பு விரைவில் உன்னை வந்து சேரும்… எது நடந்த போதிலும் மனம் தளராதே… வருடங்கள் கடந்தாலும் உன் இணை இவள் தான்… என்று அவனை அருகழைத்து கூறியவர்,
துணிவோடு நீ இருக்கவேண்டும் தாயே, சொல்பவர்கள் சொல்லெல்லாம் கருத்தில் பதிய வைக்கக்கூடாது… அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள் அம்மா… என்றவர் சிறிது இடைவெளி விட்டு வலியுடன் கண் மூடி, நடப்பவைகளை ஏற்றுக்கொள்ள சித்தமாயிரு தேவி… உன் ஸ்ரீராமனின் நிழல் விட்டு அகலாதே… காலம் காட்டும் பாதையில் நீ சென்றாலும் மீண்டும் நீ உன்னவனின் நிழலில் தான் தஞ்சமடைவாய்.. தைரியமாக இரு…. மற்றவை எல்லாம் அந்த பள்ளிகொண்ட பெருமான் பார்த்துப்பான்…. என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்….
அவரது வார்த்தைகளே இருவரின் காதுக்குள்ளும் மீண்டும் மீண்டும் ஒலிக்க, ஒருவருக்கொருவர் அதை தெரியப்படுத்தி அவளை அவனும், அவனை அவளும் கஷ்டப்படுத்திக்கொள்ள விரும்பாது மௌனமாகினர்… பிறகு சித்துவும் நந்துவும் வர, அந்த இடம் மீண்டும் கலகலப்பானது….
அவளிடம் கெஞ்சி, காரில் அழைத்து சென்றான் வீட்டிற்கு… சித்துவும் நந்துவும் வீட்டிற்குள் சென்றுவிட, அவன் அவளிடம் மல்லிகைப்பூவை நீட்டினான்… அவள் வியந்து பார்க்கையிலே, நீ இன்னைக்கு பூ வைக்கலைடா… என்னவோ போல இருக்கு எனக்கு…. இதை வச்சிக்கோடா சகி… ப்ளீஸ்…. நான் உன்னை பார்க்கும்போதெல்லாம் நீ பூவோட தான் இருக்கணும்… இந்தாடா வாங்கிக்கோ…. என்று அவன் நீட்ட… அவள் எதும் சொல்லாமல் முகம் திருப்பிக்கொண்டாள்…