01. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி
அந்த திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. ப்ரத்யுஷா வெட்ஸ் ஆதர்ஷ் என்ற பெயர் பலகை வாசலில் வரவேற்றது.
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே ...
பாட்டு நாதஸ்வரத்தில் இசைக்க வந்திருந்த அனைவரின் ஆசியுடன் மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டினான். பிறகு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர் மணமக்கள். தொடர்ந்து சடங்குகள் நடைபெற ஒருபுறம் பந்தி பரிமாறப்பட்டது. ஓரளவு கூட்டம் கலைந்தபின் மதிய விருந்து முடிந்து மணமக்கள் ஓய்வெடுக்க மாலை வரவேற்பும் முடிந்தது. இரவிற்கான ஏற்பாடுகள் மணமகளின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் இருவரின் அறிமுகம் பார்த்து விடலாம்.
ஆதர்ஷ் 28 வயது. தந்தை சிறு வயதிலேயே இறந்து விட தாய் கமலா வளர்த்து ஆளாக்கினார். படிப்பு B.E. MBA .. MNC ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறான். ஒரு தங்கை வித்யா. சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.
ப்ரத்யுஷா வயது 2. படிப்பு B.S.C , ஹாஸ்பிடல் நிர்வாகம் பற்றி டிப்ளோமா முடித்து ஒரு மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் அட்மின் பிரவில் பணிபுரிகிறாள். இரு தங்கைகள். ஒருத்தி யு.ஜி கடைசி வருடமும், சின்னவள் இரண்டாம் வருடமும் படித்து வருகிறார்கள்.
ப்ரத்யுஷா ஆதர்ஷ் திருமணம் திடீரென்று 15 நாட்களில் முடிவானது. தீடிர் திருமணம் ஆனாலும் எந்த விதத்திலும் குறையில்லாமல் நடந்தது. இவர்கள் நல்ல நேரம் ஒரு கட்சி மீடிங்கிற்காக புக் செய்த மண்டபம், தீடீரென்று ரத்து ஆகவே, இவர்களுக்கு கிடைத்தது. ஒரளவு சற்று பெரிய மண்டபமே.
மற்ற ஏற்பாடுகள் கான்ட்ராக்ட்டில் விடப்பட்டதால், தங்கள் ஷாப்பிங் வேலை மட்டுமே இவர்கள் பொறுப்பாக இருந்தது.
நிற்க நேரம் இல்லாமல் ஓடி , இதோ திருமணமும் நல்லபடியாக முடிந்தது.
மணமக்கள் தனிமையில் சந்திக்கும் நேரம் வர, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஆதர்ஷ் முதலில்,
“ப்ரத்யுஷா .. உன்னை ப்ரயு என்று அழைக்கலாமா?”
அவள் சரி எனவும், “உன்னிடம் நான் சில விஷயங்கள் பேச வேண்டும். நீ முதலில் உட்கார்” என்று வசதியாக அவளை கட்டிலில் அமர வைத்தவன், தானும் அவளருகில் அமர்ந்து,
“நம் திருமணம் திடிரென்று நடந்தது. அதனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நான் முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று கூறியவன், தந்தை சிறு வயதிலேயே இறந்தது தன் தாய் தன்னையும், தங்கையையும் வளர்த்தது, தன்னுடைய படிப்பு, வேலை, சமீபத்தில் நடந்த தன் தங்கையின் திருமணம் வரை சொல்லியவன்,
“ப்ரயு நான் இப்போது திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை. ஆனால் எங்கள் கம்பெனி என்னை வெளிநாடு நார்வே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள். முதலில் அம்மாவையும் அங்கே அழைத்துச் செல்லலாம் என்று தான் எண்ணினேன். அங்கே உள்ள என் சக அலுவலர்கள் குடும்பத்தினரை அங்கே அழைத்து வர வேண்டாம் என்றும் அங்கு உள்ள தட்பவெப்ப நிலையை நம் இந்தியர்கள் அதிலும் வயதானவர்களால் சமாளிக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
என் தங்கைக்கு திருமணம் ஆகி நிறைய நாட்கள் ஆகியிருந்தால் கூட நான் அம்மாவை அங்கே பார்த்துக் கொள்ள சொல்லி அனுப்பியிருப்பேன். ஆனால் அவளே இப்போதுதான் திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்றுள்ளாள். அவள் பழகவே இன்னும் நாளாகும் எனும் போது அம்மாவை அங்கே விடுவது கஷ்டம்.
அதனால்தான் இப்போது நான் திருமணம் முடித்து உன்னையும் அம்மாவையும் இங்கேயே விட்டுச் செல்கிறேன். எனக்கும் புரிகிறது உன் மனநிலைமை. ஆனால் என்னால் இது பதவி உயர்வோடு மட்டுமில்லை .. என் திறமைக்கும் ஒரு சவால் போல. அதனால் இதை நான் ஒத்துக் கொண்டு போயாக வேண்டிய சூழ்நிலை. ஒரு மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆகும் நான் திரும்பி வர. இதெல்லாம் உன் அப்பாவிடம் சொல்லித் தான் பெண் கேட்டேன். உனக்கும் சம்மதம் என்றார்.
உன்னிடம் விளக்க வேண்டியது என் கடமை. அதனால்தான் சொல்லி விட்டேன். இனி உனக்கு என்னிடம் கேட்க வேண்டியதை நீ கேளு.”
“இதெல்லாம் என்னிடம் ஏற்கனவே சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு வேலைக்குப் போக விருப்பம். உங்கள் அம்மா தனியாக இருப்பதால் அது முடியுமா என்று உங்களிடம் கேட்கிறேன்.
அது பிரச்சினையில்லை ப்ரத்யு. நாங்கள் இங்கே இருந்தாலும் பகலில் அம்மா தனியாகத் தானே இருப்பார்கள். மேலும் நான் கூறுவது அம்மாவை பொறுப்பாக பார்த்துக் கொள்ளத்தானே தவிர நீ முழுமையாக அம்மாவோடே இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அல்ல. உன்னால் முடிந்தால் அம்மாவை இரவுகளில் தனியாக விடாமல் பார்த்துக் கொள் .. அது போதும் .”. என்றவன், “வேறு..?”