பிரத்யுவும் முகம் சிவக்க போனை வைத்தவள், சிரித்து கொண்டே படுக்க சென்றாள்.
அங்கே போய் கொஞ்சம் வேலை செட்டில் ஆனவுடன், அங்கே காண்பவற்றை அவளோடு பகிர்ந்து கொள்பவன், சில சமயங்களில் இது போலவும் பேசுவதுண்டு.. அவள் படுத்தவுடன் அவள் போனில் ...குட் நைட் மெசேஜோடு ஒரு வீடியோ லிங்க் அனுப்பினான்.. தினமும் அவன் செய்வது .. அதுதான்.. அவனுக்கும், அவளுக்குமாய் பிடித்த பாடலை லிங்க் செய்து அவள் மொபைலுக்கு அனுப்புவான்.. இன்றைய பாடல்
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
பிரயுவிற்கு பாரதியார் பாடல் அதுவும் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் மிகவும் பிடிக்கும்.. இதை போன்ற பாடல்களை ஆதர்ஷ் அவளுக்கு அனுப்புவான்
அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள இந்த கால கட்டத்தை உபயோகபடுத்திக் கொண்டனர்.
பிரத்யுவிற்கு அவள் மனத்திலும் தன் வீட்டிற்கு பணம் கொடுக்கும் யோசனை இருந்தாலும், அவன் சீக்கிரம் வர இந்த பணம் உதவுமானால், நாம் பிறகு கூட அப்பா, அம்மாவிற்கு செய்து கொள்ளலாமே.. என்ற எண்ணமே.
என்னதான் இருவரும் தங்களை சமாதானபடுத்திக் கொண்டிருந்தாலும், சில சமயங்களில் தங்களை மீறி தங்கள் துணையை தேடுகின்றது. அதனால்தான் அவள் கேட்டாள். அவன் சொல்லிய பதில் அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு புறம் அவன் எப்படியும் அந்த கான்ட்ராக்ட் முடிந்துதான் வருவான் என்று புரிந்தது. ஒரு பெருமூச்சுடன் படுத்தாள்.
மறுநாள் காலை தன் அத்தையிடம் ஆதி பேசியதை சொல்ல, அவர் முகம் சற்று வாடினார் போல் காணப்பட்டது.
“என்ன அத்தை.. இதில் உங்களுக்கு எதுவும் பிடிக்கவில்லையா? “
“அப்படியெல்லாம் இல்லை மா.. என்னதான் பிள்ளை வெளிநாட்டில் இருப்பது பெருமை என்றாலும், அவன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று இருக்கிறது. உன்னை அங்கே அனுப்ப சொல்லலாம் என்றாலும், அவனே கூறியது போல் நான் தனியாக இருக்க வேண்டும்.
நீ சொன்னது போல் எல்லா பணத்தையும் போட்டு அவனை சீக்கிரம் வரவழைக்க முடியுமோ என்று யோசித்தேன்.. ஆனால் அவன் அப்படி முடியாது என்றது ... வருத்தம் தான்... “
“கவலை படாதீர்கள் அத்தை.. அவர் காண்ட்ராக்ட்டில் போனாலும், அவர் டார்கெட் அடிப்படையில் தான் சென்றிருக்கிறார்.. அதனால் அவர் அதை சீக்கிரம் அடைய நாம் வேண்டிக் கொள்வோம்” என்றாள் ப்ரத்யு...
“ஹ்ம்ம். சரிதான்... நீ அவன் சொன்னது போல் செய்துவிடு.. இந்த வாரம் நான் வித்யாவை பார்க்க போகும்போது, நீயும் உன் அப்பா வீட்டிற்கு சென்று வந்து விடு “ என்றார்
அவளும் மகிழ்ச்சியுடன் சரி என்றாள். மூன்று மாதங்களாக இதே போல் செய்து கொண்டிருந்தார்கள்.
மூன்றாம் மாதம் இருவரும் அவரவர் சென்று வந்தவர்கள், அந்த வாரம் கமலா தன் மகள் வீட்டிற்கு சென்று வந்தவள், முகம் முழுவதும் பூரிப்பாக இருந்தது.
ப்ரத்யு .. “என்ன அத்தை.. ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?”
“வித்யா, இன்னிக்கு நான் போன போது ஒரே வாந்தி, மயக்கமா இருந்தா... அநேகமா விசேஷமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...நாளைக்கு டாக்டர்கிட்ட போய் கன்பார்ம் பண்ண சொல்லிருக்கேன்.... நல்ல விஷயமா இருக்கணும் கடவுளே ..” என்றார்...
“நிச்சயம் நல்ல விஷயம்தான் இருக்கும் அத்தை... “ என்றபடி தங்கள் வேலையை பார்த்தனர்.
மறுநாள் காலை ..ப்ரத்யு ஹாஸ்பிடல் கிளம்பும் போது ... “ப்ரத்யுஷா ...பகல்ல ஆதிகிட்ட பேசறதுன்னா எப்படின்னு சொல்லியிருக்கனாம்மா?”
“ஆமாம் அத்தை... ஏன் பேச போறீங்களா ?”
“அதான் .. வித்யாகிட்டேர்ந்து தகவல் வந்தவுடனே பேசலாமேன்னு நினைச்சேன்..”
“சரி.. அத்தை ... இதோ அவர் போன் நம்பர் எழுதிருக்கேன் .. நீங்க நம்ம லேன்ட் லைன் லேர்ந்து போன் பண்ணுங்க.. அவர் எடுக்க மாட்டார்.. ஆனா ஒரு பத்து .. பதினைந்து நிமிஷத்திலே கூப்பிடுவார்...”
“சரிம்மா ... நீ கிளம்பு”
அவள் சென்றவுடன் .. மதியம் 12 மணி வாக்கில் வித்யாவிடமிருந்து அவள் கன்சீவ் ஆகியிருப்பதாக போன் வந்தது...