07. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன்
மாண்டு போனவன் தன்னை எவ்வாறு அணைக்க முடியும்?அவனின் மூச்சுக்காற்று தன் கன்னத்தையும் காதினையும் தீண்டியது எவ்வாறு?அபரஞ்சிதா என அவன் காதருகே அழைத்தது இன்னும் மனதினில் ரீங்காரம் இடுகிறதே அது எப்படி?ஹம்மா..என்றானே அது நிஜமா பிரமையா என நினத்து பயத்தின் உச்சிக்கே சென்ற அபரஞ்சிதா குதிரை வீரனின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட முடியாமல் வீலென்று கத்தினாள்.அப்படி அவள் கத்தியதும் மெள்ள தனது பிடியைத் தளர்த்தினான் குதிரைவீரன்.
பட்டென்று அவன் உடல் மீதிருந்து எழுந்து மஞ்சத்தில் அமர்ந்து கொண்டாள் அபரஞ்சிதா.அப்படி உட்கார்ந்தவளின் உடல் பயத்தில் நடுங்கியது.கண்களை மூடியவாறு மூச்சை அடக்கியபடி செத்த பிணம் போல் கிடந்த குதிரைவீரன் மெதுவாய்க் கண்களைத் திறந்து அபரஞ்சிதாவைப் பார்த்து சிரித்தான்.
பயத்தால் நடுங்கியபடிஅமர்ந்திருந்த அபரஞ்சிதா அவன் கண்களை திறந்ததையும் தன்னைப் பார்த்து சிரித்ததையும் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேம்பட அப்படியே சிலையானவள் போல ஆகிப்போனாள். (அதற்குள் அறைக்கு வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த வீரர்கள் அபரஞ்சிதாவின் அலறலைக்கேட்டுவழக்கம்போல் இன்றும் முடிந்தது புது மாப்பிள்ளையின் கதை என நினைத்து விஷயத்தை ராஜாவின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார்கள்.)மஞ்சத்தில் படுத்திருந்த குதிரைவீரன் எழுந்து உட்கார்ந்தான்.சிலைபோல் அமர்ந்திருந்த அபரஞ்சிதாவின் தோள்களைப் பற்றி மெள்ள உலுக்கினான்.கூடவே அபஞ்சிதா என்று இதமாய் அழைத்தான்.அப்படியே ஆடாது அசையாது பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்த அபரஞ்சிதா அவனின் உறுதியான கைகளின் குலுக்கலாலும் அவனின் குழைவான அழைப்பினாலும் மெதுவாய் இயல்புக்கு வந்தாள்.ஆனாலும் அவளின் திகைப்பு அடங்கவே இல்லை.இது எப்படி சாத்தியம்?இவர் மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறார்?இதுவரை இந்த முதலிரவு அறையில் தினம் தினம் எனக்குக் கணவராக வரும் ஆண்கள் ஒவ்வொருவரும் இறந்துதானே போயிருக்கிறார்கள்?.அப்படியிருக்க் இவர்மட்டும் உயிரோடிருப்பது எப்படி சாத்தியமாயிற்று?என்று எண்ணினாள்.
மீண்டும் அபரஞ்சிதா..என்று அழைத்து அவளின் கரத்தினை பிடித்தான் குதிரைவீரன்.
நீ..நீ..நீங்கள்...அதற்கு மேல் பேச முடியவில்லைஅவளால்.
ஆம்.. அபரஞ்சிதா நானேதான்.இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்..
வேண்டுமானால் என்னைக் கிள்ளிப் பாரேன்..என்று சொல்லி அவளின் வலது கை உள்ளங்கையை எடுத்து தனது இடது கையில் வைத்து தனது வலது கையால்மூடினான் குதிரைவீரன்.
சிலிர்ப்பாய் இருந்தது அபரஞ்சிதாவுக்கு.அவள் வாசனையை நுகர்ந்து மஞ்சத்தில் மயங்கி வீழ்ந்த பிறகு அவ்வறையில் நடந்த அனைத்தையும்கூறி பாம்பு இளவரசன் அவளின் முற்பிறவி பற்றிக் கூறியதையும் விரிவாக அவளிடம் எடுத்துக் கூறினான் குதிரைவீரன்.அவள் பிரமித்துப் போனாள்.
பிரமிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிய அபரஞ்சிதா...குதிரை வீரனைப் பார்த்து.. அன்பரே.. என்னைப் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் பெற்றோரின் கவலையையும் தீர்த்துள்ளீர்கள்.தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி திருமணத்திற்கு முன்பே ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருப்பாள்.ஆனால் நான்? என் விதியானது என் வாழ்க்கையில் எவ்வளவு விளையாடி விட்டது..?என் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கவும் நான் அஞ்சுகிறேன்.அன்பரே...உங்களைப் பற்றி நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.அது தவறாக ஆகாது என எண்ணுகிறேன் என்றாள்.
ஆம்...அன்பே.. நானே எனைப் பற்றி உன்னிடம் கூறவே விரும்பினேன்.என்னைப் பற்றி நீ அறிந்து கொள்ள விரும்புவது எவ்விதத்திலும் தவறாகாது.இனி நீயும் நானும் பல காலம் இணைந்து வாழப்போகிறோம்.அப்படி இருக்க கணவனைப் பற்றி மனைவியும் மனைவி பற்றி கணவனும் முதல் சந்திப்பிலேயே அறிந்து கொள்ளாமல் எப்படி வாழ்க்கையை ஆரம்பிப்பது?என்னப் பற்றி சொல்கிறேன் கேள்.
நான்....நாட்டின் இளவரசன்.என் பெயர்.......என்று ஆரம்பித்து அவன் தன் கதையைச் சொல்லச் சொல்ல அப்படியே சிலையாகிப்போனாள் அபரஞ்சிதா.அவன் சொல்வதை அவளால் நம்பவே முடிய வில்லை.இப்படிக் கூட இருக்க முடியுமா..இதெல்லாம் நடக்குமா?அப்படியானால் அப்படியானால்...நம் கணவர்.. இவர்.. இவர்...பேச்சு வராமல் தவித்தாள் அபரஞ்சிதா.
என்னவாயிற்று அபி..?எதையோ கேட்க நினைக்கிறாய்..ஆனால் ஏன் தயங்குகிறாய்..?உன் தவிப்புக்குக் காரணம் யாது?சொல்வாய் என்றான்.
பார் போற்றும் மன்னாதி மன்னரின் மகனே..மாவீரரே..மதி நுட்பம் உடையவரே.. மக்கள் போற்றும் நாயகரே..உமைப் பற்றி ஈரேழு உலகமும் அறியும்.உமக்கு ஈடான ஒரு..வீரரோ..மதினுட்பம் உடையவரோ எங்கு தேடினாலும் அகப்படார்.எத்தனையோ தேசத்து இளவரசிகள் உமக்காக ஏங்கித் தவித்திட எனக்கு மணாளனாக நீங்கள் கிடைத்தது நான் செய்த பாக்கியமேயன்றி வேறென்ன?சொல்லும்போதே அவளின் நா தழுதழுத்தது..கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அவளின் கண்களில் வழிந்த கண்ணீரைத் தனது கரத்தினால் துடைத்த குதிரைவீரன்..அபி..நான் யார் என் பெயர் என்ன என்பது பற்றி உன் பெற்றொரிடம் தற்போது கூறுதல் வேண்டாம் பின்னர் ஓர் நாளில் நானே எடுத்துரைக்கிறேன் அதுவரை பொறுப்பாய் என்று சொல்லியபடியே அவளை மெள்ள தன்னிடம் இழுத்துக் கொண்டான்.பெரும் பரவசத்தோடும் நிம்மதியோடும் அவன் பரந்த மார்பில் முகம் புதைத்தாள் அபரஞ்சிதா.
இடை வேளை .....
சேவல் கூவியது.புள்ளினங்கள் பூபாளம் இசைத்தன.கீழ்த் திசையில் கதிரவன் மெள்ள சோம்பல் முறித்தான்.விடிந்தும் விடியாத இருள் பிரியாத நிலையில் களைப்பில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் குதிரைவீரன்.அப்போது அன்பரே..அன்பரே.. நான் ஆபத்தில் இருக்கிறேன் என்னைக் காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என்று அலறும் ஒரு பெண்ணின் குரல் அவன் காதருகில் ஒலித்தது..ரூப சௌந்தரீ... என்ன நேர்ந்தது உனக்கு என்று கேட்டபடியே தூக்கம் கலைய தூக்கிவாரிப் போட சட்டென எழுந்து உட்கார்ந்தான் குதிரைவீரன்.சுற்றும் முற்றும் பார்த்தபோது ரூப சௌந்தரி இல்லை.தூங்கும் போது.. ரூப சௌந்தரி அலறுவது போல்கனவு கண்டிருக்க வேண்டும் என நினத்தான்..ஒரு வேளை நிஜமாகவே அவளுக்கு ஏதும் ஆபத்து நேந்திருக்குமோ?விடிகாலைக் கனவு பலிக்கும் என்பார்களே என்று கவலை அவனுக்குள் எழுந்தது...நல்லவேளை அபரஞ்சிதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.அப்படியில்லாமல் அவள் விழித்திருந்திருப்பாளேயானால் குதிரைவீரன் ரூபசௌந்தரீ என்று இன்னொரு பெண்ணின் பெயரைக் கவலையோடு கத்தி உச்சரிப்பதைக் கேட்டிருந்தால் அவள் என்னவாகியிருப்பாள்? பிறகு குதிரை வீரனின் நிலமை என்னவாகியிருக்கும்?முதல் நாளே அவர்களின் வாழ்க்கையின் வசந்தம் வடிந்துபோயிருக்குமோ?இப்பொழுதைக்கு பிரர்ச்சனை ஒன்றுமில்லை.ஆனாலும் வந்தது பிரர்ச்சனை ரூபசௌந்தரி வடிவில் விரைவாக.
அப்போது அவ்வறைக்கு வெளியே பலபேர் ஒன்றாகச் சேர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு சாவு வீட்டில் அழுவது போல் ஒப்பாரி வைப்பதும் தாரை தப்பட்டை சப்தமும்.. மகளே மகளே என்று மன்னனும் ராணியும் தலையில் அடித்துக் கொண்டு அழும் குரலும் கேட்டது... ரூபசௌந்தரியின் நினைவில் குழப்பத்தோடு அமர்ந்திருந்த குதிரைவீரன் திடுக்கிட்டுப்போனான். ஆனால் இது தினமும் நடக்கும் சம்பவம்தான் என்பதாலோ என்னவோ அபரஞ்சிதா அலட்டிக் கொள்ளாமல் மெள்ள எழுந்து மஞ்சத்தில் அமர்ந்து கொண்டாள்.அமைதியாக இருந்தாள்.
இருவரும் மஞ்சத்திலிருந்து எழுந்து அறையின் வாசல் நோக்கி ஜோடியாய் நடந்தார்கள்.கதவைத் திறந்தான் குதிரைவீரன்.வாசலில் அவன் கண்ட காட்சி முதலில் அவனை அதிர வைத்தது.பின்னர் கண்களில் தெரியும் காட்சிக்குக் காரணம் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்ற அந்த விடிகாலை நேரத்திலேயே அவனுக்குச் சிரிப்பும் வந்தது.
குதிரைவீரனுக்கு சிரிப்பு வரும் வண்ணம் வாசலில் அவன் என்ன பார்த்தான்?அடுத்தவாரம் பார்க்கலாமா?...நன்றி....
தொடரும்...
{kunena_discuss:956}