32. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி
ஆட்டோவில் இருந்து இறங்கிய சங்கமித்ராவின் கண்களில் உடனே சிக்கினர் முகில்மதியும் அன்பெழிலனும் .. இருவரும் இங்கு என்ன செய்கிறார்கள் ? என்ற கேள்வியை விட அவர்களை பார்த்த சந்தோசம் தான் அவளுக்குள் முதலில் உண்டானது .. சில நாட்களே பல யுகமாகிவிட்டது போல உணர்ந்தவள் , சற்று வேகமாகவே நடந்து சென்றாள் .. அதே நேரம் , முகில்மதியிடம் ஏதோ பேசி கொண்டே எழில் அவளின் கையை பற்றவும் அதிர்ச்சியுடன் நின்றே விட்டாள் மித்ரா ..
" டேய் அன்பு என்னடா பண்ணுற ?" என்று கேட்க துடித்த இதழ்களை அடக்கியபடி அங்கேயே நின்றாள் .. " நோ , மிது ..அவசரப்படாதே ! ஒருவேளை மதிக்கு அவன் உதவி செய்றான் போலிருக்கு ..கண்ணால் பார்த்ததுமே ஒரு முடிவுக்கு வரவே கூடாது " என்று அவளின் மூளை அறிவுறுத்த , கோவில் அருகில் இருந்த பூக்கடையில் நின்றபடி அவர்களை நோக்கினாள் ..
முகில்மதியின் கைகளை விடாமல் இன்னும் பேசிக்கொண்டு இருந்தான் எழில் .. அவனை பார்த்துகொண்டிருந்த மதியின் கண்களிலும் நேசம் தேவை தெரிந்தது .. இதை உணர்ந்து கொண்டவளுக்கோ ஏமாற்றமும் அதிர்ச்சியும் எழுந்தது .. " என் நண்பன் என்கிட்ட இவ்வளவு பெரிய விஷயத்தை மறைப்பான்னு நான் நினைக்கவே இல்லை ..!" ! இதுதான் அவள் மனம் கூறிய முதல் வசனம் ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
முகில்மதியை விட எழிலின் மீது அதிக உரிமை உணர்வு வைத்திருந்தாள் சங்கமித்ரா .. சில நேரங்களில் , குடும்பத்தின் மீது இருக்கும் பிணைப்பு விட , நட்பின் மீது இருக்கும் ஈடுபாடு வலுவாய் இருப்பது சகஜம் தானே ?
சங்கமித்ராவை பொருத்தவரை , முகில்மதி ஷக்தியின் அன்பு தங்கை ..தன்னைப்போலவே அவனை அதிகமாய் நேசிப்பவள் .. சுட்டித்தனம் மிக்க தெளிவான பெண் .. தனக்கு ஒரு தங்கை இருந்தால் எப்படி இருக்குமோ , அப்படிதான் அவள் மதியை பார்த்தாள் நேசித்தாள் .. ஆனால் அன்பெழிலன் ?
மித்ராவின் நம்பிக்கையின் ஆதாரம் அவன் !
அவள் கண்ணீரை துடைப்பதில் கர்ணனை போன்ற நண்பன் அவன் !
அவளின் நிறைகளை பாராட்ட மறந்தாலும் , குறைகளை எடுத்து கூற மறக்காதவன் !
அவளை விட்டு கொடுக்காமல் பேசுவதில் இன்னொரு தந்தை அவன் !
அவளை சீண்டி சிரிப்பத்தில் ஒரு தமையன் அவன் !
அவ்வப்போது தவறான முடிவெடுத்து அவளின் அறிவுரையை நாடும்போது தம்பி அவன் !
அவளின் காதல் உணர்வுகளை மதித்து அதற்கு உதவிய நண்பன் அவன் !
இப்படி தனது சொந்த வாழ்க்கையை கூட மதிக்காமல் தனக்காகவே வாழ்பவர்களில் அவனும் ஒருவனாய்த்தான் இருக்கின்றான் ..!
மனதில் பலகோடி நன்றி கடன்கள் இருந்தாலும் , அவள் சங்கோஜப்படாமல் உரிமையாய் நாடுவது , அவனின் உதவியைத்தான் !
அவனிடம் அவள் மறைத்த விஷயங்களை விரல்விட்டு எண்ணி விடலாம் ..
" கூட்டு களவாணிகள் " என்ற பெயரை அவனுடன் சேர்ந்து பெருமையாய் பெற்றுகொண்டவள் அவள் !
இன்று அது எல்லாமே மாறி விட்டதா ?
எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து விட்டான் என் நண்பன் ? " என் நண்பன் " !! அந்த வார்த்தை தந்த நம்பிக்கையும் அன்பும் அவளை பொறுமையாய் இருக்கும்படி கட்டிப்போட்டது .. என்ன செய்யலாம் ? என்று ஒரு கணம் சிந்தித்தவளின் கண்கள் தனது போனின் மீது நிலைக்க சட்டென அன்பெழிலனை போனில் அழைத்தாள் அவள் ..
மித்ராவின் பெயரை திரையில் பார்த்ததுமே , முகில்மதியின் கைகளை விடுவித்திருந்தான் அன்பு ..
" ஹே மித்ரா "
" ம்ம்ம் .. எங்க இருக்க ?"
" என்ன டீ ? எப்படி இருக்கன்னு கேட்காமல் எங்க இருக்கன்னு கேட்குற ?"
" நீ கூடத்தான் பதில் பேசாமல் கேள்வி கேட்குற !!"
" அம்மா லாயரம்மா , நான் வீட்டுல தான் இருக்கேன் போதுமா ?" என்றான் எழில் .. கோபத்தில் கைகளை மடக்கி கொண்டாள் மித்ரா ...தன்னால் இயன்றவரை பொறுமையாய் பேச முயற்சித்தாள் ..
" அப்படியா ? நல்லதா போச்சு .. அம்மா கிட்ட போன் கொடு நான் கொஞ்சம் பேசணும் “
"அம்மா ... அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க " என்றான் அன்பெழிலன் .. கண்களை இறுக மூடி கொண்டாள் மித்ரா .. " வேணாம் .. இதுக்கு மேல கேள்வி கேட்டு, அவன் பொய் மேல பொய் சொல்லி , இருக்குற அன்பெல்லாம் கோபமாய் மாறிட வேணாம் " தனக்கு தானே அறிவுரை கூறிக் கொண்டவள் ,
" இப்போ நாம நிற்கிற கோவில் உள்ளத்தான் அம்மா இருக்காங்களா டா ?" என்றாள் .. தூக்கி வாரி போட பார்வையை இங்கும் அங்கும் சுழற்றினான் அன்பெழிலன் .." என்னாச்சு எழில் ?" என்றபடி முகில்மதி வினவ , போனை கட் பண்ணி விட்டு அவர்களின் முன் வந்து நின்றாள் மித்ரா ..