மூங்கில் குழலானதே – 13 - புவனேஸ்வரி
“ப்லேக் அண்ட் வைட்டு காலம் முதல்
உன்னை போல ஹீரோயினா?
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் ஹேரோயினா?”
என் ஆசை மைதிலியே என்று காரில் ஒலித்து கொண்டிருந்த பாடலுக்கு
“தன தனனானே தானானே!!” என்று அமர்ந்தபடியே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான் சகிதீபன். எல்லாம் சற்றுமுன் கடந்து வந்த மைத்ரேயியின் விழிகளைப் பார்த்த குஷிதான்!
“ஷாபா சிம்பு ரசிகனா நீ?” என்று போலி எரிச்சலுடன் தமையனை வினவினாள் விஷ்வானிகா.
“ அய்யே .. நான் ஒரு நாளைக்கு ஒவ்வொருத்தருக்கு ரசிகனாய் இருப்பேன்.. இன்னைக்கு சிம்புவுக்கு..” என்றவன் கொஞ்சம் இடைவெளியிட்டு,
“சிம்புன்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது! நீ அச்சம் என்பது மடைமையடா படம் பார்த்துட்டியா? தங்கச்சி தானே நீ! உனக்கு மஞ்சிமா மோஹன் மாதிரி கியூட்டான ப்ரண்ட்ஸ் இருந்தால் வீட்டுக்கு கூட்டிட்டு வா! “ என்றான் சகிதீபன்.
“ ப்ரண்ட்ஸ் இருக்காங்க .. ஆனா உனக்காகவெல்லாம் கூட்டிட்டு வர முடியாது!” என்றாள் அவள்.
“ஓஹோ! அப்போ உன் ப்ரண்ட்ஸும் உன்னை மாதிரி சுமார் ரகம் தானா?” என்று நக்கலாய் அவன் கேட்கவும்,
“அபிண்ணா இவனை வாயை மூட சொல்லுங்க! “ என்று மூத்தவனை துணைக்கு அழைத்தாள் விஷ்வானிகா.
“ டேய் ஏன்டா ?” என்று அபிநந்தன் சகியைப் பார்க்க அவனோ,
“ அண்ணா நீங்க பேசாதீங்க! நீங்க ரொம்பவும் மோசம் !” என்றான்.
“ஏன்டா? நான் என்ன பண்ணினேன்?”
“ஹும்கும் ஒண்ணுமே பண்ணலையே அதான் பிரச்சனை! “ என்று இரு பொருளில் கூறியவன்,
“ குடும்பத்தில் மூத்த பையன், எங்களுக்கெல்லாம் முன்னோடி! சுருக்கமா சொல்லணும தல அஜித் மாதிரி!” என்றான்.
“ இப்போ எதுக்கு டா அவரை இந்த பேச்சில் இழுக்குற?”
“இருங்க, அதைத்தான் சொல்ல வரேன்! தல அஜித் எவ்வளவோ சூப்பரா வண்டி ஓட்டுவாரு? நீங்க என்னடான்னா கரகாட்டக்காரன் படத்துல வண்டிய தள்ளிட்டு போகுற ஸ்பீட்ல வண்டிய ஓட்டுறீங்க! பாருங்க என் பச்சை கிளி ஸ்கூட்டியில் பறந்து போயிட்டா!” என்றான் இளையவன் சோகமாய்.
“ அண்ணா எனக்கொரு டவுட் .. ஸ்கூட்டி எப்படி பறக்கும்?” என்று மீண்டும் சகியை வம்பிழுப்பதற்காக அபியிடம் கேட்டாள் விஷ்வானிகா. ஏற்கனவே தனது வேகத்தை தம்பி கிண்டல் செய்கிறானே என்ற சலிப்பில் இருந்த அபி,
“இதோ இப்போ கார் பறக்கும் பாரு!” என்று கூறிக் கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினான். காரினுள் பாடலின் சத்தத்தை அதிகப்படுத்தி உற்சாகமாகினான் சகிதீபன். மைத்ரேயியை பின்தொடர முடியாமல் போய்விட்டதே என்ற கவலை கொஞ்சமும் இல்லை அவனுக்கு! அவன் தேடாமலேயே கண்முன் நின்றவளை நிச்சயம் விதியே சேர்த்து வைக்கும் என்று நம்பினான் அவன். அவனது உற்சாகம் மற்ற இருவரையும் தொற்றிக்
கொள்ள அதன்பின் அந்த கார் பயணம் சூடு பிடித்தது.
இன்னொரு பக்கம், ஹாஸ்டலில் தனது அறையில் அமர்ந்திருந்தாள் மைத்ரேயி. சகிதீபனை நேரில் பார்த்த அதிர்ச்சி இன்னமும் அவளை விட்டு அகலவில்லை. தனது பிரம்மையோ இது என்று பலமுறை கேட்டுக் கொண்டாள் அவள். அண்மையில் அவளது ஜாதகத்தைப் பார்த்துவிட்ட வந்த அவளது தந்தை சொன்ன விஷயம் தேவை இல்லாமல் இப்போது ஞாபகத்திற்கு வந்தது.
“அம்மு, இந்த வருஷம் எப்படியும் உனக்கு கல்யாணம் நடந்திடுமாம். ஒண்ணு, மாப்பிள்ளை உன்னை தேடி வருவாராம் இல்லான்னா நீயே அவரைத் தேடி போவியாம்.. ஆனால் கண்டிப்பா கல்யாணம் நடந்திடுமாம்” என்று வரதராஜன் சந்தோஷமாய் கூறி இருந்தார். அவர் அப்படி சொன்னதுமே மைத்ரேயியிக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சி ஒரு புறம், கலவரம் ஒரு புறமென கலவை உணர்வில் இருந்தாள் அவள். அவளது தந்தை ஃபோனை வைத்த மறுநொடி, கயல்விழி ஃபோன் செய்திருந்தாள்.
“அக்கா நம்ம அப்பாவுக்கு விவரமே தெரியல. அதான் அன்னைக்கே கதிர் அத்தான் நம்ம வீட்டுக்கு வந்தார்ல? அவர்தான் உன் ஹீரோ” என்று அக்காவை வெறுப்பேற்றினாள் இளையவள். கயல்விழி விளையாட்டிற்கு சொன்னாலும் கூட மைத்ரேயியால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“ இல்லை.. இல்லை..என்னவன் யாருன்னு எனக்கு தெரியுமாக்கும்!” என சிலுப்பிக் கொண்டது அவளது உள்மனம்.
இதோ இப்போதும் அவளது உள்மனம் துள்ளி குதித்தது. “அதான் அன்னைக்கே சொன்னேன்ல? உன் ஹீரோ வருவான்னு .. இப்போ உன் கண் முன்னாடியே வந்துட்டார்” என்றது அது. சட்டென கட்டிலில் இருந்து எழுந்து விட்டுருந்தாள் மையூ.