அதே நேரம் சமேலி கிராமம் பள்ளத்தாக்கு
சலங்கையின் செய்தி எட்டியதோ இல்லையோ என்று நினைத்தபடியே அடிப்பட்ட காலினை மெல்ல நகர்த்தி பள்ளத்தாக்கின் அடிவாரம் நோக்கி மெல்ல அடிகள் வைத்து நகர்ந்தார் விஜயகுமார்.
சூரியன் மறைந்து வந்து நட்சத்திரங்கள் மெல்ல எட்டி பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்த வேளை ஆள் அரவமற்ற அந்த பள்ளத்தாக்கில் மற்றவர் எனில் பயத்தில் உறைந்தே போயிருப்பார்.
ஆனால் மரணவாசல் வரை சென்று மீண்டு வந்தவருக்கு யாதொரு அச்சமும் இல்லை.
அந்த இருளின் அமைதியை மீறி ஒரு சுனையின் ஒலி இப்போது அவர் காதில் தெளிவாக கேட்கவும் அந்த ஒலியைப் பின்பற்றி அவர் அச்சுனையை அடைந்தார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
அது ஒரு பெரிய நீர் ப்ரவாகமாகவே இருந்தது.
“இந்த நதியின் போக்கிலேயே பயணித்தால் விரைவில் மக்கள் வசிக்கும் ஏதேனும் ஓர் கிராமம் தென்படலாம்” மனதில் நினைத்தவர் நிலவின் ஒளியின் துணையோடு அந்த நதியோடு பயணித்தார்.
மிக அடர்த்தியான மரங்கள் கொண்ட ஓர் பகுதியை வந்தடைந்ததும் தூரத்தில் ஓர் மெல்லிய ஒளி தெரியவே அங்கிருந்து அந்த ஒளியை நோக்கிச் சென்றார்.
அருகில் செல்ல செல்ல அது ஒரு மரத்தினால் ஆன வீடு என்று தெரிந்து கொண்டார்.
அது நிலத்தில் இருந்து சற்று உயரமாக இருந்தது. வீட்டினில் செல்ல படிகள் இருந்தன. மெல்ல அந்த படிகளில் ஏறியவர் கால் காயத்தின் வலியில் துடித்தார்.
வெகு சிரமத்துடன் கதவின் அருகில் சென்றவர் கதவினை தட்ட முற்படுகையில் உள்ளிருந்து பேசுக் குரல் கேட்டது.
“வேற ஏதேனும் தகவல் வந்ததா உனக்கு” ஓர் கரகரப்பான ஆண் குரல் அந்த மலை கிராமத்தினரின் மொழியில் கேட்டது.
“வேற தகவல் ஒன்னும் இல்லை. நான் நாளைக்கு கிராமம் திரும்பனும். என் பையன் சமீர்க்கு உடம்பு சரியில்லை” மற்றோர் குரல் கேட்டது.
“ஏன் என்னாச்சு”
இரண்டு தினங்கள் முன் அவன் நதியில் விழுந்ததையும் ஓர் பெரியவர் அவனை காப்பாற்றியதையும் அந்த பெரியவர் மனநிலை சரியில்லாதவர் அவர் பள்ளத்தாக்கில் விழுந்ததும் மகன் அதிர்ச்சியில் நோயுற்றான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அவருக்கு காது கேக்கல வாய் பேசவும் முடியல” சமீரின் தாய் சொன்னது இப்போதும் நினைவல் இருந்தது விஜயகுமாருக்கு. சமீர் என்ற பெயரும் நினைவில் இருந்தது. சமீர் மாமா என்று அழைத்ததும் எதிரொலித்தது.
“எனக்கு காது கேக்கலைன்னா எப்படி சமீர் அழைத்தது, அவன் தாய் சொன்னது எல்லாம் நினைவில் இருக்கு. ஆடுகளின் சலங்கை சத்தம், இடியோசை எல்லாம் அப்போதும் கேட்டது” மனதில் நினைத்தவர் கேட்கும் திறன் அந்த சிறுவனைக் காப்பாற்ற நதியில் விழுந்த போதே சிறிது சிறிதாக மீண்டிருக்க வேண்டும் என்று யூகித்தார்.
சமீரின் தந்தை தானே உள்ளே இருப்பது உதவி கேட்போம் என நினைத்து கதவினை தட்ட முற்படுகையில் அடுத்து அவர் செவிகளில் விழுந்த செய்தியை கேட்டு அதிர்ந்தார்.
அதிர்ந்தவர் உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அங்கேயே தடால் என பெருத்த சத்தத்தோடு அந்த மரத்தினால் ஆன தரையினில் தனது சரீரத்தை சாய்த்தார்.
தொடரும்
{kunena_discuss:1080}