அடுத்த நொடி யாருமே எதிர்ப்பார்க்காத விதமாக தூக்கி எறிந்தான் அந்த மோதிரத்தை. அது தரையில் விழுந்து எகிறி சுவற்றில் மோதி எங்கோ சென்று விழுந்தது. விக்கித்து போயினர் அனைவரும்.
'எப்படி இருக்கும் அபர்ணாவுக்கு. எப்படி உணர்வாள் அவள் பாவம். அப்படி என்ன தன்னை மீறிய ஒரு கோபம்...' கொதித்து போனவனாக அவனையே பார்த்திருந்தான் பரத்.
'அருண் என்னடா இப்படி பண்றே??? எழுந்தே விட்டார் அவன் அம்மா.
'இவனை முதல்லே இங்கே இருந்து போக சொல்லுங்க...' என்றான் பரத்தை பார்த்துக்கொண்டே..
'அருண்!!!' அவன் அருகிலேயே வந்துவிட்டார் அம்மா.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
'இவன் கைப்பட்ட மோதிரத்தை நான் அவளுக்கு போட தயாரா இல்லை. முதல்லே இவன் இங்கிருந்து போகணும். அப்போதான் இந்த கல்யாணத்தை மேலே பேச முடியும்..' ஆத்திரம் கண்களை மறைக்க உச்சக்கட்ட தொனியில் கத்தினான் அருண்.
'ஓ!!! நான் போகா விட்டால் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவானாமா???? கனலான பார்வையுடன் அவனையே பார்த்திருந்தான் பரத்.
'இவர் எதுக்கு வெளியே போகணும்???' கேட்கும் எண்ணத்துடன் அஸ்வினி எழ.
அதற்குள் தன்னையும் மீறி வெளிவந்தது அபர்ணாவின் குரல்.
'அவர் எதுக்கு போகணும்??? பாவம் அருண் பரத். அவர் எங்க அப்பாவை பார்க்க வந்திருக்கார்,. அவர் இருக்கட்டுமே..' அவன் அவமானப்படுவதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை அவளுக்கு. சடாரென திரும்பி அவள் முகம் பார்த்தான் பரத்.
'இன்னும் பல நாட்களுக்கு இந்த வார்த்தைகளை பிடித்துக்கொண்டே வாழந்து விடுவேனடி பெண்ணே!!! சின்னதாய் ஒரு புன்னகை அவன் முகத்தில்
'என்னது பாவமா??? யார் இவனா??? அது சரி!!! நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்குறது உனக்கு நல்லது..' என்ற அருண் பார்வையால் அவளை எரிக்க அதற்கு மேல் அங்க நிற்கவே விரும்பவில்லை பரத்.
அருண் அவளை ஏதாவது சொல்ல, அதை பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்க தன்னால் முடியாது என நன்றாக உணர்ந்திருந்தான் அவன். சூழ்நிலையை இன்னமும் நாராசமாக ஆக்க விரும்பவில்லை அவன். அபர்ணாவை பார்த்து தலை அசைத்துவிட்டு.
'வரேன் அங்கிள்...' என்று அவளது அப்பாவை பார்த்து தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் பரத்.
'நீங்க ஏன் கிளம்பறீங்க...' என்றபடி அஷோக் அவனருகில் வர,
'இல்ல அஷோக் இன்னொரு நாள் வரேன்..' விறுவிறுவென நகர்ந்தான் பரத். அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமலே பார்த்திருந்தார் அபர்ணாவின் அப்பா.
அவனுக்காக காத்திருந்த காரின் அருகில் வந்து நின்றான் பரத். நடந்த நிகழ்வுகளில் உள்ளம் எரிமலையாய் இருக்க, அன்றொரு நாள் அவனுக்குள்ளே தோன்றிய புயல் சின்னம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற துவங்கி இருந்தது. மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் காரில் ஏறி அமர விமான நிலையம் நோக்கி பறந்தது கார்.
அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் அஷோக்கும், அஸ்வினியும் உள்ளே சென்றுவிட, ரொம்பவுமே இறுக்கமான சூழ்நிலை அங்கே நிலவிக்கிடந்தது.
பரத்துக்கும், அபர்ணாவுக்கும் என்ன சம்மந்தம்??? ஒரு கேள்வி நெருடிக்கொண்டிருந்தது அப்பாவை. ஆனால் தனது மகளின் மீது ஒரு நம்பிக்கை. தனது வாழ்க்கையையை சரியாக தேர்ந்தெடுக்கும் பக்குவம் அவளுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை. அதுவே அவரை மௌனமாக்கி இருந்தது.
யாருமே பேசிக்கொள்ளவில்லை. சில நிமிடங்கள் கரைய சுதாரித்துக்கொண்டு அபர்ணாவே தான் மௌனத்தை கிழித்தாள்.
'அம்மா எல்லாருக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வாயேன்...' அம்மா உள்ளே நகர இயல்புக்கு வந்தான் அருண்.
'அங்கிள் நான் அபர்ணாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்..' என்றவன் மாடிக்கு போலாமா அபர்ணா...' என்றான் அபர்ணாவை பார்த்து.
அடுத்த சில நிமிடங்களில் மாடியில் நின்றிருந்தனர் இருவரும். வீசிக்கொண்டிருந்த மாலைக்காற்று மனதை கொஞ்சம் லேசாக்க அவள் அருகில் வந்து நின்றான் அருண்.
'என்ன அபர்ணா.. இப்போ என்ன சொல்றே??? இந்த கல்யாணம் உண்டா கிடையாதா???' அவன் வார்த்தைகளில் தோற்றுப்போன பாவம் நிறையவே கலந்திருந்தது.
'நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு எப்பவுமே சொல்லமாட்டேன் அருண். எந்த நிலையிலுமே.. இட்ஸ் எ ப்ராமிஸ். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அருண் .' அவன் முகம் பார்த்து சொன்னவளின் குரலில் நிறையவே உறுதி. ஒரு நிம்மதி புன்னகை அவனிடம்.
'உனக்கு மோதிரம் போடலைன்னு வருத்தமா??? நான்... நான் உனக்கு கல்யாணத்திலே வைர மோதிரமே போடறேன் நீ கவலை படாதே..' தான் செய்த தவறு உறுத்தியிருக்க வேண்டும் அவனுக்கு. ஒரு இதமான புன்னகை அவளிடம்.
'எனக்கு மோதிரம் எல்லாம் வேண்டாம் ,உங்க கோபத்தை நீங்க குறைச்சிட்டாலே போதும். உங்க கோபம் சில நேரத்திலே ரொம்ப வலிக்குது அருண்...'