அமேலியா - 13 - சிவாஜிதாசன்
இரவு பத்து மணியைத் தாண்டி கடிகார முள் சென்றுகொண்டிருந்தது .வசந்தின் வீட்டில் யாரும் உறங்கவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கச் சென்றுவிடும் வழக்கம் கொண்ட அக்குடும்பம் அன்று விழித்துக்கொண்டிருந்தது,
தன் அறையில், சிந்தனையில் ஆழ்ந்தவாறே படுக்கையில் படுத்திருந்த நாராயணன், உறங்க நினைத்து கண்களை மூடினார். வசந்த் அவ்வளவு நேரம் வராமல் இருந்தது அவரின் உறக்கத்திற்கு தடையாக அமைந்தது, 'எல்லாம் இந்தப் பெண்ணால் வந்த வினை, ஏற்கனவே நிம்மதியற்று நாட்களை தள்ளிக்கொண்டிருக்கும் எனக்கு இப்படி ஒரு வேதனை வந்து சேர்ந்திருக்கிறது' என்று நினைக்க நினைக்க அமேலியாவின் மேல் கோபம் அதிகரித்தது. எழுந்து ஹாலுக்கு வந்தார்.
மேகலா தான் சமைத்த உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு வெறுமையோடு அமர்ந்திருந்தாள்.
அப்பாவைக் கண்டதும், "சாப்பிடுறீங்களா அப்பா?" என்று பரிவோடு கேட்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
நாராயணன், வேண்டாம் என்பது போல் தலையாட்டினார். அவரது கண்கள் அடுத்த நொடியே தரையில் அமர்ந்திருந்த அமேலியாவை நோக்கின. அவள், நிலாவை மடியில் அமர்த்திக்கொண்டு நிலாவின் குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்தாள். நாராயணனை அவள் கவனிக்கவில்லை. சேட்டைகளை செய்துகொண்டிருந்த நிலா தாத்தாவை நோக்கினாள்.
"தாத்தா இன்னுமா தூங்காம இருக்க?"
நாராயணன் பதில் பேசவில்லை. நாராயணனைக் கண்டதும் அமேலியாவின் சிரிப்பு மறைந்து குற்றவாளியைப் போல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
சோபாவில் அமர்ந்து படித்த புத்தகத்தையே புரட்டிக் கொண்டிருந்தார் நாராயணன். சிறிது நேரத்தில் வசந்தின் கார் ஹாரன் சப்தம் கேட்டது. மேகலா மின்னலென எழுந்து வாசலை நோக்கி ஓடி கேட்டை திறந்தாள். கார் உள்ளே வந்தது. காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி வந்தான் வசந்த்.
"வசந்த் ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"
இல்லை என்பது போல் தலையாட்டினான்.
"ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு?"
"ஜானை அவன் வீட்டுல விட்டுட்டு வந்தேன்" என்று கூறியபடி உள்ளே வந்தான் வசந்த்.
நாராயணன் அவனைப் பார்க்காமல் புத்தகம் படிப்பதைப் போல் பாசாங்கு செய்துகொண்டிருந்தார். வசந்தைக் கண்டதும் அமேலியா சமையலறைக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டாள்..வசந்தின் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு அருவெறுப்பாக இருந்தது. அவன் அழுத்திப் பிடித்த இடத்தில் கை இன்னும் வலித்துக்கொண்டிருந்தது.
"வாடா சாப்பிடலாம்" என்றழைத்தபடி மேகலா இரவு சாப்பாட்டினை திறந்து வைத்தாள்.
"எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்க"
"வெளிய சாப்டுட்டியா?"
"இல்லை, நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு தயார் ஆகணும்"
"சாப்டுட்டு செய்யலாம்டா"
"நான் தான் பசிக்கலைனு சொல்றேன்ல" என்று கூறியபடி தன் அறையை நோக்கி விரைந்தான்.
"மாமா! மாமா! நில்லு!" என்றபடி நிலா ஓடி வந்தாள்.
"என்ன?"
"இந்த ஓவியத்துல இருக்கிறது யாருனு சொல்லு பாக்கலாம்" என்று ஓவியத்தை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கிய வசந்த் சிறிது நேரம் ஓவியத்தையே வெறித்துக்கொண்டிருந்தான். "நிச்சயம் இவன் ஒரு அரக்கனா தான் இருக்கணும். பார்க்க பயங்கரமா அருவெறுப்பா இருக்கான்"
"மாமா இது நீ தான்"
"என்ன ஒளறுற"
"அந்த அக்கா தான் வரைஞ்சாங்க"
வசந்த் அந்த ஓவியத்தை மீண்டும் உற்று நோக்கினான். அது அவன் தான் என ஊர்ஜிதமாகியது. அவன் கண்கள் கோபத்தைக் கக்கி அமேலியாவைத் தேடின. இதையெல்லாம் சமையலறையில் இருந்து கவனித்தபடி இருந்த அமேலியா பயந்து தன் தலையை இழுத்துக்கொண்டாள்.
"மேகலா சாப்பாடு போடுமா" என்று நாராயணன் இருக்கையில் இருந்து எழுந்தார்.
அவருக்கு தட்டில் இரண்டு சப்பாத்திகளை எடுத்து வைத்தாள் மேகலா.
வசந்த் தன் அறைக்குள் சென்று கதவை சாத்தினான்.
"துப்பாக்கி என்ன ஆச்சு?" சப்பாத்தியை உண்டபடியே கேட்டார் நாராயணன்.
"நல்லபடியா முடிச்சிட்டானாம் அப்பா"
"ஒழுங்கா நல்ல வேலைக்கு போறது தவிர எல்லா வேலையும் நல்லா செய்றான்"
"அவனை ஒரு நாளாச்சும் திட்டாம இருக்கீங்களா?"
"பாராட்டுற போல அவன் நடந்துக்கலையேமா. அவன் பண்ணுறது சரின்னு நெனச்சி தப்பாவே செய்றான்"
"காலப்போக்குல சரி ஆய்டுவான்"
"அதுக்குள்ள என் காலம் முடிஞ்சிடும்"