மேகலா தன் வேலையெல்லாம் முடித்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று விளக்கினை எரிய விட்டாள். நிலா அங்கு படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். அப்பொழுது தான் அவளுக்கு அமேலியாவின் நினைவு வந்தது.
"நிலா நிலா" என அவளை எழுப்பினாள்.
"என்னம்மா"
"அக்கா எங்கே?"
"கிச்சன்ல இருப்பாங்க"
மேகலா பீரோவைத் திறந்து போர்வையையும் தலையணையையும் எடுத்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
"நிலா எழும்பு"
"ஏன்மா என்ன தொந்தரவு பண்ணுற, நாளைக்கு ஸ்கூல் இருக்கு"
"நீ ஹால்ல அக்கா கூட படுத்துக்க"
"அக்காவை இங்க வந்து படுக்க சொல்லும்மா"
"இது சின்ன பெட் செல்லம். அதான் ஹாலுக்கு போ சொல்றேன்"
"அக்கா தனியா படுக்கமாட்டாங்களா என்ன?" என்று சலித்தபடி, நிலா போர்வையை எடுத்துக்கொண்டு ஹாலை நோக்கி தூக்கக் கலக்கத்தில் நடந்தாள். ஹாலில் போர்வையை அலங்கோலமாக போட்டுவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
அமேலியா சுவற்றில் சாய்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள். "அக்கா" என அவளை மெல்ல உலுக்கினாள் நிலா. அமேலியா சிறு அதிர்வோடு விழித்தாள்.
"வாங்க, அங்க தூங்கலாம்" என்று அமேலியாவிடம் கூறி விட்டு ஹாலில் வந்து படுத்தாள் நிலா.
அமேலியாவிற்கு பசி உருவானது. தனக்கான உணவு ஏதேனும் இருக்கிறதா என்று அவள் பாத்திரங்களை திறந்து பார்த்தாள். உணவு ஏதும் இல்லை. வேறு வழியில்லாமல் நிலாவின் அருகில் படுத்துக்கொண்டாள். நிலா அவளை கட்டிக்கொண்டு தூங்கினாள். அமேலியாவிற்கு நிலாவை மிகவும் பிடித்துப்போனது. நிலாவின் முதுகை மெதுவாக வருடி தூங்கச் செய்தாள். தானும் பசியோடு தூங்கினாள்.
வசந்திற்கு உறக்கமே வரவில்லை. அமேலியாவின் மேல் கோபம் இருந்தாலும், தான் செய்தது தவறோ என அவன் எண்ணினான். ஆனால், உணவை எதற்காக எடுத்துக்கொண்டு வந்தோம் என்ற காரணம் அவனுக்கு தெரியவில்லை. ஒருவழியாக, அந்த காரணத்தையும் கண்டுபிடித்தான் வசந்த். அவள் தன் முகத்தை அலங்கோலமாக வரைந்ததால், அவளைப் பழிவாங்க எண்ணி இப்படி செய்திருக்கலாம். காலையில் தான் அவளின் கையைப் பிடித்த சம்பவத்தின் கோபமான வெளிப்பாடு தான் அலங்கோலமான தன் ஓவியம் என நினைத்தான்.
அமேலியாவை அவனுக்குப் பிடிக்கவில்லை, சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால், அவள் பட்டினியாக இருப்பதற்கு, தான் தான் காரணம், ஒருவரின் பசியோடு விளையாடுவது பெரிய தவறு என்று அவன் எண்ணினான். ஷூட்டிங் நேரத்தில் சில வேளைகளில் உணவு இல்லாமல் பெரும் அவஸ்தைபட்டிருக்கிறான்.
என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். பிறகு, படுக்கையில் இருந்து எழுந்த அவன், உணவை எடுத்துக்கொண்டு கீழே வந்தான். அமேலியாவும் நிலாவும் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் அருகில் சென்ற அவன் உணவுத் தட்டினை கீழே வைத்தான்.
அமேலியா திடுக்கிட்டு விழித்தாள். வசந்த்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள். வசந்த் குற்றஉணர்ச்சியால் அவள் முகத்தை பார்க்க விரும்பாமல் மேலே சென்றான்.
நடந்ததை ஒருவாறாக ஊகித்தாள் அமேலியா. அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனாலும் அவள் சாப்பிடவில்லை. மீண்டும் பசியுடனே உறங்கினாள்.
தொடரும்...
{kunena_discuss:983}