வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 14 - வத்ஸலா
மோதிரம்!!! அவள் கை சேர வேண்டிய மோதிரம் அவன் காலடியில்.!!! இதற்கு என்ன அர்த்தம்???? யோசித்தபடியே இமை தட்டாமல் சில நொடிகள் அதையே பார்த்திருந்தான் பரத்!!! அந்த இடம் முழுவதும் சில நொடிகள் நிசப்தம் வியாபித்து போனது.
அருண் பெற்றோர், அபர்ணாவின் அப்பா தவிர மற்ற எல்லாருக்குமே தெரியுமே பரத்தின் மனநிலை. எல்லார் பார்வையும் அவன் மீதே விழுந்தது.
அந்த மோதிர தவறி விழுந்தது பிடிக்கவில்லை என்பதை போன்ற பாவத்துடன் அமர்ந்திருந்தார் அருண் அப்பா.
ஒரு பூவை கையில் எடுக்கும் நிதானத்துடன் அதை கையில் எடுத்தான் பரத். அஷோக்கும் அஸ்வினியும் அவனையே பார்த்திருந்தனர், அவனே இந்த மோதிரத்தை அபர்ணாவுக்கு அணிவித்து விட்டால்தான் என்ன??? என்று தோன்றாமல் இல்லை அஸ்வினிக்கு.
அருணை அபர்ணாவுக்கு பிடித்திருக்கிறதுதான். ஆனாலும்???........... மனம் முழுவதும் ஒரு வித உறுத்தலே நிறைந்திருந்தது அவள் அம்மாவுக்கு.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
திருமண நேரத்தில் ஜாதக பொருத்தம் பார்ப்பது என்பது சமூக நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம் என்றாலும், ஒருவருக்கு ஒருவர் மனப்பொருத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்த பிறகும், அபர்ணாவை சில நிமிடங்கள் முள்ளின் மீது அமர வைத்து ஜாதகத்தை அவர்கள் அலசி ஆராய்ந்த அந்த செயல் ஏனோ பிடிக்கவில்லை அம்மாவுக்கு
'சும்மா இல்லமா ... எட்டு வருஷம்...; சில நிமிடங்கள் முன்னால் சொன்னானே பரத்!!!
அன்பு எனும் தராசில் அவனது தட்டுதான், எதையுமே எதிர்ப்பார்க்காத அவனது எட்டு வருட நேசம்தான் கீழிறங்கி நிற்கிறதோ??? அலைப்பாய்ந்தது அம்மாவின் உள்ளம்.
மோதிரத்தை கையில் எடுத்துக்கொண்டு எழுந்தான் பரத்.
'என்ன அருண். கொஞ்சம் கவனமா நிதானமா எடுக்க கூடாதா அதை??? நிச்சியதார்த்த மோதிரத்தை இப்படி கீழே போட்டுட்டு...' கேட்டார் அருண் அம்மா.
அதற்குள் அபர்ணாவின் அருகில் வந்துவிட்டிருந்தான் பரத். ஏதோ ஒரு பொக்கிஷத்தை பார்ப்பது போலவே அந்த மோதிரத்தை வருடிக்கொண்டிருந்தது அவன் பார்வை.
'சட்டென அவள் விரல்களில் சேர்த்துவிடவா இதை????' படபடக்கத்தான் செய்தது அவனது உள்ளத்தின் ஒரு பகுதி. அதை திருப்பித்தரும் எண்ணம் இல்லாதவன் போலவே அதையே பார்த்திருந்தான் பரத்.
அம்மா சொல்வது காதில் விழாதவனாக பரத்தையே நெருப்பு பார்வை பார்த்திருந்தான் அருண்.
கொஞ்சம் உறைந்து போன நிலை அபர்ணாவினுடயது!!! விருட்டென மோதிரத்திலிருந்து பார்வையை எடுத்து அவள் மீது பதித்தான் பரத்.
கண் இமைக்கும் நேரத்தில் அவள் வலக்கரம் பற்றி இழுத்து அவள் சுதாரிக்கும் முன்னே அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்து....
இப்படிதான் நடக்குமென தோன்றியது அவள் அம்மாவுக்கு. ஏன் அபர்ணாவுக்கே கூட கொஞ்சம் திடுக்கென்றது. தனிச்சையாக அவள் விரல்கள் மடங்கி கைக்குள் ஒளிந்துக்கொண்டன. ஆனால் அப்படியெல்லாம் செய்துவிட்டால் அவன் பரத்தில்லையே!!!
அவள் எண்ண அலைகளை புரிந்துக்கொண்டவனாக அவன் இதழ்களில் இதமாய் ஒரு மென்னகை. அது அபர்ணாவின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தியது. அவள் பார்வை பரத்திலிருந்து அருணுக்கும், அருணிலிருந்து பரத்துக்கும் தாவிக்கொண்டே இருந்தது.
'என்ன தோன்றியதோ??? பரத்தே எதிர்ப்பர்க்காதவாறு சட்டென அவன் கையிலிருந்து மோதிரத்தை பிடுங்கிக்கொண்டான் அருண். ஒரு முறை அருணை ஏற இறங்க பார்த்த பரத்தின் இதழ்களில் இருந்த அந்த புன்னகை இப்போது சின்ன சிரிப்பாகவே மாறி இருந்தது.
ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் இத்தனை நேரம் பொங்கிக்கொண்டிருந்த அவனது காதல் இன்னும் அழுத்தமாக உள்ளே அழுத்தி மூடப்பட்டது. அது அபர்ணாவுக்கும் புரியாமல் இல்லை.
ஆனால் எத்தனை நாட்கள் அது உள்ளேயே அடங்கி கிடக்குமாம்??? எல்லா கட்டுகளையும் உடைத்துக்கொண்டு அது வெளியே வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!! அது அவனுக்குதான் புரியவில்லை!!!
அடுத்த நொடி சற்று முன் நடந்த நிகழ்வுகள் அவன் கண் முன்னே வந்து போக, அவனது சிரிப்பு கொஞ்சம் மங்க ஒரு ஆழமான மூச்சுடனும் தீவிரமான பார்வையுடனும் அருண் விழிகளுக்குள் நேராக பார்த்து
'அபர்ணா கண்ணிலே தண்ணி எப்பவும் வராம பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்...' தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல் சொல்லியே விட்டிருந்தான் பரத்.
'இது கெஞ்சலா??? அறிவுரையா??? எச்சரிக்கையா???' இதை சொல்ல இவன் யாராம்??? சுறுசுறுவென பொங்கியது அருணின் கோபம்..
அவனுக்கு எழுந்த அந்த கோபம் நியாயமானதாக கூட இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறது என்பதை யோசிக்கவில்லை அருண்.
'அருண் அவளுக்கு போட்டு விடுப்பா மோதிரத்தை...' அம்மா மறுபடியும் சொல்ல இரண்டு மடங்கானது அவன் கோபம். ஒரு முறை அந்த மோதிரத்தை பார்த்தான் அருண்.
'இந்த பரத் கைப்பட்ட மோதிரத்தை நான் அவளுக்கு அணிவிக்க வேண்டுமா??? அதன் பிறகு அவள் விரலில் அந்த மோதிரத்தை நான் பார்க்கும் போது இவன் நினைவு தானே எனக்கு வரும்???'