09. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்
ஒருபுறம், அன்று நடந்த சம்பவங்கள் மைத்ரீயை தூங்க விடாமல் இம்சித்தால் மறுபுறம் ஜெய்யின் குறுஞ்செய்திகள் அதையே செய்தன. ப்ரியாவை சந்தித்ததிலிருந்து தோழியிடம் கண்ட இயல்புக்கு மாறான ஆழ்ந்த சிந்தனை ஜெய்யை குழப்பியிருந்தது. மாலிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும் மைத்ரீ யாரிடமும் பேசாது தன்னுடைய அறையினுள் புகுந்து கொண்டாள்.
“என்னாச்சுங்க இவளுக்கு?” வடிவு கவலையுடன் கணவனை நோக்கினார்.
“ஜெய், மைத்ரீ ஏன் ஒரு மாதிரியா இருக்கா? மாலுக்கு போகும்போது சந்தோஷமா தானே கிளம்பி போனா… அங்க ஏதாவது பிரச்சனை நடந்ததா? இல்லை அவளுக்கு ப்ரியாவை பிடிக்கலையா?”
தந்தையின் பேச்சில் அதிர்ச்சியுற்றவனாக நிமிர்ந்தான் ஆதர்ஷ். ‘இதையெப்படி நான் கவனிக்க மறந்தேன். ஆமாயில்லை… மைத்ரீ ஒரு வார்த்தை கூட ப்ரியாவை பற்றி பேசவேயில்லயே. ஒரு வேளை அப்பா சொன்ன மாதிரி இவளுக்கு ப்ரியாவை பிடிக்கலயோ? இந்த கல்யாணத்தால நான் என்னோட குடும்பத்தை பிரிய கூடாது.’
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
“மைத்ரீக்கு பிடிக்கலைனா இதை ப்ரொஸீட் பண்ண வேணாம்பா” ப்ரியாவினுடனான சந்திப்பு முடிந்து வீட்டில் இன்னும் தன் முடிவை சொல்லாதிருந்தவன் இப்படி பேசவும், இப்போது அதிர்ச்சியுறுவது ஜெய்யின் முறையானது.
காஃபி ஷாப்பில் ப்ரியாவுடன் அமர்ந்திருந்த ஆதர்ஷின் பிரகாசமான முகமும் மகிழ்ச்சி கலந்த பேச்சுமே அவனின் மனதை ஜெய்யிற்கு உணர்த்தியிருந்தன. மைத்ரீயின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்திற்காக ஆதர்ஷ் இந்த கல்யாணத்தை பற்றி பேச வேண்டாமென முடிவுக்கு வருவதும் சரியென தோன்றவில்லை.
“என்ன மச்சா?! இப்படி சொல்லிட்ட? அவசர படாத…” சந்திரசேகர் புறமாக திரும்பியவன், “அப்பா! மைத்ரீக்கு கொஞ்ச தலைவலி… நாங்க ஸ்கேரி ஹௌஸ் போயிருந்தோமா… அதுக்கப்புறமா லைட்டா தலைவலின்னு சொல்லிட்டிருந்தா… அதுதா கொஞ்ச டல்லாயிருக்கப்பா. இதை வச்சு அவளுக்கு ப்ரியாவை பிடிக்கலைன்னு நாம சொல்லமுடியாது” அங்கிருந்த மற்ற மூவரின் முகமும் சற்று தெளிந்தது.
“பயத்துலதா தலைவலி வந்ததோ?” மீண்டும் வடிவு கவலையுற்றார்.
“அப்படியெல்லா இருக்காதுமா! அவதா ஸ்கேரி ஹௌஸ் போகனும்னு சொன்னதே… நீங்க கவலை படுற அளவுக்கு ஒன்னுமில்லமா… இருங்க நான் அவளிட்ட பேசுறே” ஜெய் மைத்ரீயின் அறைக்கதவை தட்டினான். அது தாழிட படாமலிருந்ததால் திறந்து கொண்டது.
அறையின் விளக்கை கூட போடாமல் இருட்டில் அமர்ந்திருந்தாள் மைத்ரீ. வடிவின் கவலை இப்போது ஜெய்யையும் தொற்றி கொண்டது.
‘என்னாச்சு இவளுக்கு? எல்லாரையும் எதையாவது சொல்லி நான் சமாளிக்கலாம். ஆனா இவளுக்கு என்ன பிரச்சனைன்னு புரியலையே’ அன்று நடந்தவைகளை ஒரு முறை கண் முன் கொண்டுவந்தவன் ‘அம்மா சொன்னது சரியா இருக்குமோ? மைத்ரீ பயந்துட்டாளோ?’
எது எப்படியிருந்தாலும் அவளை இயல்புக்கு கொண்டுவர முடிவெடுத்தான் ஜெய்.
“குரங்கு இருட்டுல அமைதியா உக்காந்திருக்கே! பரவாயில்ல விடு… இந்த ஜெய் வந்த நேரம் குரங்குக்கு வெளிச்ச கிடைக்கட்டு” அந்த அறையின் விளக்குகளை எரியவிட்டான்.
சிந்தனையில் ஆழ்திருந்தவளின் செவியில் ஜெய்யின் பேச்சு விழந்திருக்கவில்லை. திடீர் வெளிச்சத்தில் நிமிர்ந்தவளின் முகத்தில் ஒரு புன்னகை எட்டிப்பார்த்தது தோழனை கண்டதும்.
சாதரணமாக அவளை குரங்கு என்றழைத்தால் அவன் மீது பாய்ந்திருப்பாள் இல்லையென்றால் அவனையும் குரங்கு என்றழைத்திருப்பாள். ஆனால் அவளின் அமைதியான புன்னகையை சற்றும் எதிர்பார்த்திராத ஜெய் திகைத்தாலும் நேரடியாக பேசினான்.
“மைதி! உனக்கு ப்ரியாவை பிடிக்கலையா?”
“லூசு ஜெய்! ப்ரியாவை பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னே?”
“மால்லிருந்து நானும் உன்னை கவனிச்சுட்டுதா இருக்கே, மைதி! நீ நார்மலா இல்லை..” ஜெய்யின் ஆராய்ச்சி பார்வையை கண்டு கொண்டாள் மைத்ரீ.
‘அய்யோ! இவனை எப்படி மறந்தே…’
“அது….அது… எனக்கு லேசா தலைவலிக்குது ஜெய். அதுதா கொஞ்ச டல்லாயிருந்தேன்” சமாளித்தாள் அவள்.
“இதையேதா நானும் எல்லோருக்கும் சொல்லியிருக்கே. நீ இப்படி இருந்ததால ஆதர்ஷ், உனக்கு பிடிக்கலைன்னா இந்த கல்யாணத்தை ஃப்ரொஸீட் செய்ய வேணாம்னு சொல்லிட்டா”
“என்ன சொல்ற ஜெய்?! இது உண்மையா?” அவசரமாக லிவிங்க் ரூமை நோக்கி விரைந்தாள்.
“எனக்கு அண்ணியை பிடிச்சிருக்கு. ஆதர்ஷ்கு அவங்க நல்ல மேட்ச். என்னடா அண்ணா உனக்கு அவங்களை பிடிக்கலைன்னா, பிடிக்கலைன்னு சொல்லாம… என் மேல பழி போட்டு தப்பிக்கிறயா?”