10. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி
மாலை மறைந்து இருள் சூழ ஆரம்பித்தது. அனைவரின் கண்களும் வினிதாவின் அறையிலும் வீட்டுவாசலிலும் அலைப்பாய்ந்தது.
இரவு மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டியிருக்கையில் மகேனும் வினிதாவின் அண்ணனும் வீட்டினுள் நுழைந்தனர். மகேன் தலையில் சின்ன கட்டும் வினிதாவின் அண்ணனின் கையில் கட்டும் இருக்க, அவர்கள் மிகவும் சோர்வாக இருப்பதை பார்த்து பதட்டத்துடன் அனைவரும் அவர்களை சூழ்ந்துக் கொண்டனர்.
"மகேன் என்ன இது? " பதட்டத்துடன் கேட்க,
"வரும் வழியில் சின்ன ஆக்சிடண்ட்.. எங்களின் செல் வேற வேலை செய்யலை. கிளினிக் போயிட்டு வர லேட் ஆகிருச்சி... எங்களுக்கு ஒன்னுமில்லை.. பலமா அடியேதும் இல்லை” என்றான். என்னதான் அவர்கள் மற்றவர்களிடம் “ஒன்னும்இல்லை” என்று சொன்னாலும் மகேனின் குரலில் உள்ள நடுக்கத்தை அவர்கள் உணரவே செய்தனர்.
மேலும் அவர்களை தோண்டி துருவாமல், அடுத்த செய்ய வேண்டிய வேலையை பார்த்தனர். ரூபனின் அப்பா மகேனை பார்க்க, அவனோ இந்த வேலையை முதலில் பார்ப்போம் சொல்லிவிட்டான்.
அவர்கள் கொண்டு வந்த பொருட்களை ரூபனின் அப்பா அவர் உட்காரும் இடத்தில் அவரின் தேவைக்கு ஏற்ப அடுக்கினார். அவை எளிதில் எடுக்கும் வகையில் வைத்துக்கொண்டார். பின்னர் வினிதாவின் அறைக்கு வெளி சுவற்றில் வெறும் கைகளால் ஏதோ முத்திரை வரைந்தார். அதன்பின் ஒரு கிண்ணத்தில் உள்ள தண்ணீரை எடுத்து அவளின் அறை முழுவதும் தெளித்தார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
மணி நள்ளிரவை12:30 நெருங்க ஹாலில் அவர்கள் அமர்ந்து இருக்கும் பகுதி தவிர மற்ற அனைத்து விளக்குகளும் அணைக்கபட்டு இருந்தது. அங்கு எரியும் விளக்கும் சற்று மங்களான வெளிச்சமாக இருந்தது.
மற்ற அனைவரும் பயத்தில் இருக்க, ரூபன் மட்டும் சித்ராவிடம் மெல்லிய குரலில்,
“இவருக்கு தான் வேற வேலையில்லாமல் ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார்.. இப்போ நீங்களும் பைத்தியம் போல செய்யுறீங்க.. அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ண வேண்டியது தானே?” என பொரிந்துக் கொண்டு இருந்தான்.
ஒரு நொடி அவனையே உற்று பார்த்தவள் “எங்களுக்கு பழைய வினிதா வேண்டும் அவ ஏன் இப்படி இருக்காள், இன்று மதியம் கேட்ட சிரிப்பு சத்தம், அந்த கதவு எப்படி திறந்து சாத்தியதுன்னு இதுக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியுமா?” நிதானமாக அவனிடமே ஒவ்வொரு கேள்விகளாய் கேட்டாள்.
பாவம் ரூபனால் அவளை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது. அவனும்தான் இன்று காலையில் தன் பைக்கில் வந்தது யார் என தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.
சித்ரா, அனிதாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இதை பார்த்த ரூபன், “சின்ன “குழந்தை மாதிரி இப்படி பயப்படற.. கொஞ்சம் தைரியமா இருக்கணும்..எப்ப பாரு யார் பக்கத்துலயாவது இப்படி இருக்கிற!” என்றான்.
“தைரியம் என்ன கடையில் விற்கும் மருந்தா? உடம்புக்கு வைட்டமின் பத்தவில்லைன்னு வாங்கி குடிக்கிற மாதிரி, வாங்கி குடிக்க?” அவள் கேட்க
அவனோ அதிர்ச்சியில் “என்ன?” என்று கேட்டு, மனதில் “நீ என்ன லூசா?”ன்னு அவளை பார்த்தான். அவளோ இப்போது வினிதாவின் ரூமை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ரூபனின் அப்பா மீண்டும் ஒருமுறை தண்ணீரை எடுத்து அவளின் ரூமில் தெளித்து விட்டு வந்து அமர்ந்தார். அவரின் எதிரே கட்டம் போடப்பட்டு இருந்தது. அதற்கு எதிரே டீ டேபிளில் பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப் பட்டு இருந்தது. மேலும் இன்னும் சில நிலைக்கண்ணாடிகள் பல இடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
ரூபனின் அப்பா அமர்ந்து இருக்கும் இடம் சற்று இருட்டாக இருந்தது, சரியாக 12:40க்கு “டப்” என்ற சத்தத்துடன் வினிதாவின் அறைக்கதவு சாத்தியது. அனைவரின் கவனமும் அதிலே நிற்க கதவில் மட்டும் கொஞ்சமாய் வெளிச்சம் தோன்றி மறைந்தது.
முதல் தடவை அது தோன்றிய சில நிமிடங்களில் கிட்சனில் பாத்திரம் கீழே விழும் சத்தம் கேட்டது. என்னவென்று அனிதா பார்க்க எழுந்தரிக்கையில், "எந்த சத்தம் கேட்டாலும் யாரும் இருக்கும் இடத்தை விட்டு எழுந்திரிக்க வேண்டாம்" என்று எச்சரித்தார் ரூபனின் தந்தை.
அவள் குழப்பத்துடன் அமர்ந்தாள். அவளின் மனதில் “ஏன் அவ்விடத்தை விட்டு நகர கூடாது என சொல்கிறார் “ என்ற கேள்வி எழுந்தது.
அடுத்து அந்த எதிர் அறையில் இருந்து எதையோ உருட்டும் சத்தம் கேட்டது. "பட்" என அறைகதவு சாத்தும் சத்தம் கேட்டது. எங்கு இருந்து வருகிறது அந்த சத்தம் என்று தெரியவில்லை யாருக்கும். இவ்வளவு நாள் விடை தெரியாமல் இருந்த கேள்விக் கெல்லாம் இன்று பதில் கிடைக்கும் என அனைவரும் நினைத்தனர்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் கதவில் வெளிச்சம் தோன்றியது. இம்முறை சுவற்றில் அது தாவி சிலநொடிகளில் மறைந்தது.