09. தவமின்றி கிடைத்த வரமே - லேகா
“ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போய்விட்டேன். பர்சனல் கமிட்மென்ட்ஸ் ஒரு காரணம் என்றாலும், இந்த எபிசோடையாவது நீளமாக கொடுக்கலாம் என்ற ஆவல் இன்னொரு காரணம். அது முடியாது போய்விட்டது. என்னால் 4 பக்கம் தான் எழுத முடிந்தது. அடுத்த அத்தியாயமாவது பெரியதாக கொடுக்க முயற்சிக்கிறேன். ரியலி சாரி மக்களே!! படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க…!!”
வெளிச்சம் மட்டுமா அழகு? காரிருளும் கண்ணைக் கவரும் அழகாகவே தெரியும் சில சமயங்களில். அதுவும் இரவு நேரப் பயணம்? விவரிக்க முடியாத அழகு. அந்த அம்சமான அழகுக்கு அடித்தளம் இடும் மென்மையான மாலைப் பொழுது. கடந்து போகும் இயற்கைக் காட்சிகளை கண்கள் அதன் பாட்டிற்கு நோக்கிக்கொண்டிருக்க, ஏதோ நினைவில் இருந்தாள் வர்ஷினி. அவள் அருகே கார் ஓட்டிக்கொண்டிருந்தான் யாதவ்.
வர்ஷினியின் நினைவில் ஓடிக்கொண்டிருந்தவள் ப்ரியா. ‘இவ ஏன் இப்படி செய்யறா? இவளைப் பற்றியே யோசிக்கிறவங்க இவளோட அம்மா. அவங்களே இந்த இடம் ஓகேன்னு சொல்லும்போதும் இப்படி செய்யறாளே! கேட்டா கரியர் முக்கியம், கேரியர் முக்கியம்னு ஒரு டயலாக் வேற. நானும் பல வருஷமா சொல்றேன். அடமெண்ட்டா நின்னா என்ன பண்றது? அம்மாவேற ஃபோன்லயே புலம்பறாங்க. இந்த லூசுக்கு எதனால இப்படி யோசிக்க முடியுதோ! ரெண்டையும் பேலன்ஸ் செய்றவங்க எத்தனையோ பேர் இருக்க, இவ அனாவசியமா பயப்படறா’ என தனக்குள்ளேயே தோழியை நினைத்து கவலைப்பட்டாள் வர்ஷினி.
“அம்மு, இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் வரும். அங்கேயே ப்ரனிஷுக்காக வைட் செய்யலாம். அப்படியே ரிஃப்ரெஷும் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான் யாதவ். ஆனால், அது அருகே இருந்தவளின் செவிகளில் விழுந்தால் அல்லவோ அவள் பதில் கூறுவதற்கு?
“அம்மு… அம்மு…” என இருமுறை விளித்தபின்பே இவ்வுலகத்திற்கு வந்தாள் வர்ஷினி. “கூப்டீங்களா?” என்று வர்ஷினி கேட்க, “கரெக்ஷன். கத்துனேன்” என்று யாதவ் சொல்ல, தோழியை நினைத்துக்கொண்டு அருகில் இருக்கும் காதலனையே மறந்துவிட்டோமே என மிகவும் வருத்தமானாள் வர்ஷினி.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“சாரி யது… ப்ரியாவையே நினைச்சுட்டு இருந்ததாலே நான்…” என்று மெய்யாலுமே மனம் வருந்திக் கேட்டவளைக் கண்ட யாதவின் இதயமும் கனிந்துதான் போனது. வர்ஷினியின் மேல் கோபம் இருந்தாலே அவளிடம் அதனைக் காட்டுவதென்பது இயலாத காரியம் அவனுக்கு. இதில் இப்போது எப்படி அவளை வருத்தமுற வைப்பான்? ‘இவள் இருக்கும் நிலைமை தெரியாமல் பேசிவிட்டோமோ?’ என்றிருந்தது.
“என்னைப் பாரு அம்மு… நீ இப்போ என்னைப் பத்தி நினைக்காம ப்ரியாவைப் பத்தி நினைக்கிறதாலே எந்த தப்பும் இல்லைடா. நான் உன் பக்கத்துலேயே தான் இருக்கேன். ஆனால், ப்ரியா, என்ன செய்யறான்னு உனக்கு ஒன்னும் தெரியாது இப்போ. சோ, நீ அவளைப் பத்தி யோசிக்கிறது தப்பே இல்லைம்மா…” என சமாதானப் படுத்தினான் யாதவ்.
“எப்படி இவன் எப்போதுமே என் மனம் அறிந்து அதற்கு ஏற்றவாறு நடக்கிறான்? ‘நண்பனாய், மந்திரியாய், நல்ல ஆசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான்… இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்?’ என்ற வரிகள் அவள் மனத்தில் மூலையில் உதயமானது. ஆம்ம்…. அவன் இவ்வாறுதான் என வியந்துகொண்டே அவனையே பார்த்திருந்தாள் வர்ஷினி.
அதேநேரம் வர்ஷினியை பார்த்திருந்த யாதவ் கண்களாலேயே வினவினான் என்னவென்று. அவன் பார்வையைக் கண்ட வர்ஷினிக்கு உள்ளுக்குள் வெட்கம் பூத்தது. மௌனமாக தலையசைத்து மறுத்து குனிந்து கொண்டாள். ஒரு சின்ன சிரிப்புடன் இசைத் தட்டை ஆன் செய்துவிட்டு சாலையில் வாகனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
அது வர்ஷினிக்கு பிடித்த பாடல். பாதியில் கேட்டு நிறுத்தியதால் அந்த இடத்திலிருந்து தொடங்கியது, அதுவும் பிற்பாதி. ஆவலுடன் கேட்க நினைத்து திரும்பிய வர்ஷினி, பாடல் முடிந்ததைக் கண்டு நஸ்ரியாவை நியாபகப்படுத்துமாறு உதட்டை சுழித்துவிட்டு மீண்டும் இருட்டினுள் காட்சியைத் தேடி பார்வையை திருப்பினாள்.
வர்ஷினியின் கபடி விளையாடும் கண்களைப் பார்த்துக்கொண்டே அதே பாட்டை மீண்டும் ஒலிபரப்ப விட்டான் யாதவ். அவனது அப்போதைய மனநிலையை படம் பிடித்து காட்டியது அந்த பாடல். அதோடு தானும் பாட ஆரம்பித்தான். யாதவ் திடீரென்று பாட ஆரம்பித்ததும் ஆச்சரியமாக திரும்பினாள் வர்ஷினி. ஏனென்றால், இதுவரை யாரேனும் கேட்டாலேயொழிய யாதவ் பாடியதில்லை.
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
.சின்னச் சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
யாதவின் குரலிலும், அவன் காட்டிய பாவங்களிலும் தன்னையே மறந்து அவனோடு ஒன்றிப்போனாள் வர்ஷினி. இருவரும் பழகத் தொடங்கிய காலம் அவள் கண்முன் தோன்றியது. அப்போது அவனோடு பேசுவதற்கு தயங்கித் தயங்கி அவள் நின்றதை நினைத்துக்கொண்டே அதற்கடுத்த வரிகளைப் பாடலானாள்.
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே