சதி வருவதைக் கண்ட பின்னரே, அவர்கள் தங்கள் தவிப்பிலிருந்து விடுபட, சதியோடு இசைக்கலைஞர்களும் வருவதைக் கண்டு புன்னகைத்தவர்கள், அவர்களை வரவேற்றனர்…. அவர்களும், பதிலுக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்துவிட்டு, “வசந்த விழா வைபவங்களில் எங்கு பங்கு கொள்ள அழைத்தமைக்கு நன்றி… தேவி சதி எங்களை கானகம் வரை வந்து அழைத்து வந்தார்கள்…” என கூற,
“சதி கானகம் வந்தாளா?...!!!!... சதி நீ சென்றது நீர் எடுக்கத்தானே… உன்னிடம் நீர்க்குடமும் தென்படவில்லையே… எனில் நீர் எடுத்து வரவில்லையா?.. ” அதிதி சதியிடம் வினவ,
“ஆம்… சதி… நீ சரஸ்வதி நதியிலிருந்து நீரெடுக்கத்தானே சென்றாய்?... பின் கானகம் எப்படி சென்றாய்?.. சதி என்ன் நேர்ந்தது உனக்கு?... உன்னிடம் தானே கேட்கின்றேன்….”
கியாத்தி சதியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,
“இது மகாதேவரின் சங்கீதத்தின் தாக்கம்.. அதிலிருந்து உடனேயே வெளிவருவது அவ்வளவு எளிதல்ல…” என்றான் இசைக்கலைஞர்களில் ஒருவன்…
“யாருடைய சங்கீதம் என்று கூறினீர்கள்?...”
கியாத்தியும், அதிதியும் அதிர்ந்து போய் கேட்க, “தேவாதி தேவர் மகாதேவரது சங்கீதம்…” என்றாள் ஒருத்தி…
“மகாதேவரது சங்கீதமா?.. எனக்கு எதுவும் புரியவில்லை…” அதிதி குழப்பத்துடன் கூற, நாரத மகரிஷியை சந்தித்தது முதல் நடந்த நிகழ்வுகளை அப்படியே கூறினர் அனைவரும்…
“மகாதேவரை தரிசனம் செய்ததும் அதீத மாயை சூழ்ந்தது… வேண்டுமென்றால் சதி தேவியிடமும் கேட்டுப்பாருங்கள்…”
நடந்ததைக் கேட்டு, கியாத்தி சதியினை முறைக்க, அதிதியோ, இசைக்கலைஞர்களுக்கு விருந்தினர் மாளிகை தயாராக உள்ளதாகவும், அங்கு சென்று ஓய்வெடுக்கும்படியும் கூற, அவர்கள் அனைவரும் சென்றனர் நிறைவுடன்….
அவர்கள் செல்லும் வரை காத்திருந்த கியாத்தி, அதன் பின், “நீ என்னுடன் வா…” என சதியின் கரத்தினை பிடித்து வேகமாக இழுத்து வந்தாள் சதியின் அறைக்கு…
“என்ன நேர்ந்தது சதி உனக்கு?... சுயநினைவு, சுயபுத்தி, சுயசிந்தனை, சுயக்கட்டுப்பாடு அனைத்தையும் இழந்தாயா?... எத்தனை முறை உனக்கு எடுத்து கூறுவது?... ஏன் கேட்க மறுக்கிறாய்?... அந்த மகாதேவர் உன்னை பிரம்மையில் ஆழ்த்தி, அவர் தன் நோக்கத்தை நிறைவேற்ற துடிக்கிறார்.. நீயும் அதற்கு உடன்பட்டு ஒத்துழைக்கிறாய்… அவர் நம் தந்தைக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவரை தோற்கடிக்க முயலுகிறார்… நீயும் அதனை மறந்து அந்த கபடவேடதாரிக்கு உன்னையும் அறியாமல் உதவுகிறாய்… ஏன் இன்னும் மௌனம் காக்கிறாய்?.. வாய் திறந்து பதில் கூறு எனக்கு… நம் தந்தைக்கு மேலும் அவமதிப்பை ஏற்படுத்தி கொடுக்காமல் ஓயமாட்டாயா நீ?.. மகாதேவரின் சூழ்ச்சி நாடகத்தை அறியாது நீ நம் தந்தைக்கே துரோகம் இளைக்கிறாய் சதி… நம் தந்தையே உன்னை எண்ணியே தவித்திருக்கிறார் எக்கணமும்… நடக்கும் நிகழ்வுகள் யாவும், உன்னை சுற்றி பின்னப்படும் சதி வலை என்று ஏன் உனக்கு புரிய மறுக்கிறது சதி?...”
“கபடம்… நாடகம்…. இதில் எது சூழ்ச்சி அக்கா?... இதில் எது சதி?... கூறுங்கள் அக்கா?.. நான் ஏதும் அறியாதவள் அல்ல… என் புத்தி தெளிவாக தான் இருக்கின்றது… அதே நேரத்தில் நம் தந்தைக்கு நான் துரோகம் இளைப்பவளும் அல்ல… நான் நதியிலிருந்து நீரெடுக்கத்தான் சென்றேன்… அப்பொழுது இனிமையான பாடல் ஒன்று என் செவியில் கேட்க அதனைப் பின் தொடர்ந்தேன்… அங்கு தான் நான் அவரினைக் கண்டேன்… அதுதான் நிஜம்… எனினும் அந்த பாடலிருந்து நான் வெளிவர இயலாது தவித்திருந்தேன்… விலகிச்செல்லவோ தப்பிச்செல்லவோ மனம் இடமளிக்கவில்லை.. அவரின் அமிர்தம் போன்ற குரல், அந்த இசை இரண்டையும் விட்டு பிரிய மறுத்து அங்கேயே நின்றேன்… அவரின் மீது விழி பதித்து பித்து பிடித்தவளாய் நின்றிருந்தேன்… நீங்கள் அனைவரும் கூறுவது போல் அவர் கபடவேடதாரியாக இருந்திருந்தால், அந்த நேரத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருப்பார்… ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை… என் மீது அவர் கவனம் செல்லுத்திடவே இல்லை.. நான் என்ற ஒருத்தி அங்கே இருந்தேன் என்பதனையே அவர் அறிந்திருக்கவில்லை… அவர் ஏன் என்னைப் பார்க்கவில்லை?... என் மீது தன் கவனத்தை செலுத்திடவில்லை?.. ஏனெனில், நான் அவருக்கு ஒரு பொருட்டே கிடையாது… அவருக்கு நான் பிரியமானவளும் அல்ல… விரோதியும் அல்ல… அவரைப் பொருத்தமட்டில் நான் தட்சப்பிரஜாபதியின் மகள்… அவ்வளவே… அதைத் தவிர வேறொன்றுமே இல்லை… நான் அவர் பாடலால் ஈர்க்கப்பட்டு அங்கே சென்றேன்… ஆனால் அவரோ என் மீது கவனமே செலுத்தாது என்னை உதாசீனப்படுத்தினார்… மனதில் தீய எண்ணங்கள் இருப்பின், அவர் அதனை அப்போது நிறைவேற்றியிருக்கலாமே?.. ஏன் அவர் அதனை செய்யவில்லை?.. அவரின் கானத்தால் என்னை கவர நினைத்திருந்தால், என்னை அப்படி கண்டு கொள்ளாது உதாசீனம் செய்திடுவாரா?.. அவர் இசையில் வசியம் செய்தது போல் அவரை நோக்கி நான் ஓடினேன்… எனினும் அவர் என்னைப் பார்க்க கூட இல்லை… நான் என்ற ஒருத்தி அங்கே இருந்தேன் என்று கூட அவர் உணரவில்லை… ஒரு சிறு புன்முறுவல் கூட அவர் சிந்திடவில்லை… அக்கா… சிந்திடவில்லை…”
சதி தனது நிலை கூறி கண்ணீரினை சிந்த, சகோதரிகள் இருவரும் கண்கள் கலங்கியபடி அவளருகில் வந்தனர்…
அப்போது, ரோகிணியும் அங்கே வந்து பிரஜாபதி சதியிற்காக காத்திருக்கிறார் என கூற, நீ முன்னே செல், நாங்கள் பின்னே வருகிறோம் என அவளை அனுப்பி வைத்தாள் கியாத்தி…
பின் சதியிடம் திரும்பியவள், “உன்னால் இந்நிலையில் எங்களோடு வர இயலுமா?.. இல்லை சற்று நேரம் ஓய்வெடுக்கிறாயா?..” எனக் கேட்க, சதியும் உடன் வருவதாகக்கூறினாள்….
பின், பிரஜாபதியின் முன் மகள்கள் அனைவரும் வந்து நிற்க,
“எங்கு சென்றாய் சதி?... சரஸ்வதி நதியிலிருந்து நீரெடுத்து வந்தாயா மகளே?...” எனக் கேட்டார் அவர்…
“சதி நீரெடுத்து வரும் வழியில், இசைக்கலைஞர்களை கானகத்தில் கண்டாள்… அவர்களையும் வரவேற்று அழைத்து வந்ததால் சற்றே தாமதம் ஏற்பட்டுவிட்டது தந்தையே…” என அதிதி சதிக்கு உதவ முன் வந்து பதிலளிக்க, பிரஜாபதியோ சிரித்தார்…