18. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி
வெற்றியின் திடீர் வருகை விஹாஷினி நிச்சயம் இன்ப அதிர்ச்சித்தான். பல மாதங்களுக்கு பிறகு அவனைக் காண்கிறாள். அவளுடைய தந்தை அங்கே இருந்ததினால் தைரியமாய் அவனது முகத்தை பார்த்திட முடியவில்லை அவளால்.
ஆனால் அது மட்டுமே அவளின் தயக்கத்திற்கு காரணமில்லை. குற்ற உணர்வு! முதன்முறையாய் தன்னவனிடம் பொய் உரைத்ததால் வந்த தயக்கம். எங்கே ? அவனைப் பார்த்ததுமே துள்ளி குதிக்கும் உள்ளம் எங்கே? ஏன் நீதிபதியின் முன் நிற்கும் கைதியை போல நடுங்கி போகிறது உள்ளம்?
காதல் கொண்ட உள்ளம்தெய்வீகமானது!இறைவன் வாசம் செய்வது போல புனிதமானது.அவன் மனம் கொஞ்சமும் மாசுறாமல் தெய்வீகமாய் இருக்க, அவள் உள்ளத்தில் கபடம் ஏன் புகுந்தது.? இதுவரை அவனிடம் பொய்யாக இருக்க வேண்டிய அவசியம் அவளுக்கு வந்ததே இல்லை. அவளும் அவனை ஏமாற்ற நினைத்ததில்லை.
சொல்லிவிட வேண்டும் அவனிடம். அவன் கோபமே தண்டனையானலும் பரவாயில்லை.
“முடியாது என்னால் இனியும் முடியாது!”என்று அவள் வாய்விட்டு சொல்லிவிட வெற்றி, விஹாஷினியின் தந்தை இருவருமே அவளையே பார்த்தனர்.
“என்னம்மா முடியாது?”
“ஆங்.,. அப்பா அது வந்து?”
“ நீ உள்ள போ .. நான் வெற்றிக்கிட்ட பேசிக்கிறேன்!” . தவித்தாள் அவள். என்ன செய்வாள் ? அவனை தன் தந்தை எதுவும் சொல்லி விடுவாரோ? இந்த முறை அவன் அவளிடம் எந்த சமிக்ஞையும் செய்யவில்லை.மீண்டும் அவளது தந்தை கோபமாகிவிட்டால் என்ன செய்வது?
“ வெற்றி”
“சொல்லுங்க சார்”
“ உங்களுக்கு சில விஷயங்களை நான் எடுத்து சொல்லனும்னு விரும்புறேன்.. பேசலாம் தானே?”
“தாராளமா பேசலாம்.. நான் வந்ததே இதுக்காகத்தானே?”
“ ம்ம்ம்” என்று தொண்டையை செருமிக் கொண்டார் அவர். கொலைப்பசியில் இருந்த வெற்றிக்கு விஹாஷினி கொடுத்த காஃபி அமுதமாய் தொண்டையில் இறங்கியது.
“மனுஷன் வேற ரொம்ப பில்ட் அப் கொடுக்குறாரு..எத்தனை பேஜ்கு ஸ்க்ரிப்ட் வெச்சுருக்காரோ!” என்று அவனது டைரக்டர்மனசாட்சி கேலி செய்தது.
“நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் இல்லை! வாழ்க்கை எந்த விதத்திலும் எனக்கு சுலபமாக இருந்தது இல்லை! எல்லாமே உழைச்சு வாங்கினது தான்!”
“..”
“கரடுமுரடான என் வாழ்க்கையில எனக்கு கிடைச்ச பொக்கிஷம்தான் என் பொண்ணு”
“..”
“அவ பிறந்தவுடந்தான் நான் வாழவே ஆரம்பிச்சேன்.. அவ பயந்த சுபாவமாகவும், பல நேரத்துல சுயமாய் முடிவெடுக்க முடியாதவளாகவும் இருக்க, நானும் ஒரு காரணம்! என் அன்பும் என் கண்டிப்பும் தான் அதுக்கு காரணம்”
“..”
“நான் பார்த்து பார்த்து செதுக்கி வைச்ச என் பொண்ணு வாழ்க்கையில இன்னொரு ஆண் வரான்னு தெரிஞ்சதும் சந்தோச படுற அளவு எனக்கு பெரிய மனசு இல்லை.. கோவம் வந்துச்சு தான்!”
“..”
“ஆனால் நான் வில்லன் இல்லை!”
“..”
“காதல்ன்னு வந்துட்டா மட்டும் பொண்ணுங்க அப்பா வில்லன் ஆகிடுறோம்னு நினைக்காதிங்க.. நாங்களும் எங்கள் மனைவிகளை நேசிக்கிறவங்கதான்! “
“வாவ் ..செம்ம மாம்ஸ் நீங்க”என்று சொல்ல நினைத்தான் வெற்றி. ஆனால் சொல்லவில்லை..
“ என் பொண்ணு சந்தோசமா இருக்கனும்..பாதுகாப்பாக வாழனும்னு நான் நினைக்கிறதில் தப்பு இருக்கா?”
“ நிச்சயம் இல்லை அங்கிள்!”
“ தியேட்டரும், பத்திரிக்கைகளும் எனக்கு கத்து கொடுத்ததை மட்டும்தான் நான் சினிமாவாக பார்க்கிறேன்.. அந்த உலகம் எப்படி இருக்கும்?அங்க உள்ள மனுஷங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு நான் யோசிச்சதே இல்லை! யோசிக்க வேண்டிய அவசியமில்லை..”
“நான் சினிமாக்காரனாக மாறி விஹாஷினியை நேசிக்கல அங்கிள்.”
“தெரியும்! அதே நேரம் சினிமா வேண்டாம்னு நீங்க சொன்னவர் இல்லையே! உங்க வாழ்க்கை அதுதான்னு நீங்க தெளிவா இருந்தீங்க!”
“அது தப்பா?”
“என் கண்ணு தப்பாகத்தான் தெரிஞ்சது அப்போ!”
“அப்போ இப்போ?”