35. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி
மதிய நேரம் கடந்து மாலையாகியிருந்தது. காலையில் சர்ச்சில் பார்த்திருந்த ரூபனை மறுபடி காண அனிக்காவின் மனம் வெகுவாக ஏங்கியது. களைத்துப் போய் வந்திருப்பான் தூங்கட்டும் என்று மதியம் வரை பொறுத்திருந்தாள். நேரம் கடந்துச் செல்லவே வேறெங்கே சென்றிருப்பான்? ஃபேக்டரிக்குத்தான் சென்றிருக்க வேண்டும், அவனுக்கு அவன் வேலைதான் ரொம்ப முக்கியம், என்னையும் விட முக்கியம் என தன் மனதிற்குள்ளாக பொருமிக் கொண்டிருந்தாள். ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
முன்பு போல இருந்தால் மனதிற்குள்ளாக எண்ணியவுடனே அவளே அவன் வீட்டிற்கு எல்லோரையும் பார்ப்பதாகச் சொல்லி சென்று அவனைப் பார்த்திருக்கலாம். இப்போது நிச்சயம் ஆகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேயும் போக கூடாதாம். …….ம்ப்ச்ச்…போகட்டும் பரவாயில்லை… திருமணத்திற்கு இன்னும் 29 நாட்கள் தான் என்று மனதிற்குள்ளாக ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்.
ரூபன் மதியம் கடந்து சற்று நேரம் தாழும் போதே அவளை சந்திக்க வந்துச் சேர்ந்தான், அவன் கையில் பெரியதொரு பை…. என்ன கையில எப்ப பார்த்தாலும் எதையாவது கொண்டு வருவது……இப்போது மறுபடியுமா? என போன தடவை கேட்ட கேள்வியை இப்போதும் கேட்கதான் போகிறாள் என்று எண்ணி தன் மனதிற்குள்ளாக சிரித்துக் கொண்டான்.
காலையில் அவள் முறைத்த முறைப்பு கண்களுக்குள்ளாக நிழலாடியது. யப்பா…….என்னவொரு கோபம்…..ரசனையாய் அவள் கோபத்தையும் ரசிக்கச் சொல்லியது காதல் கொண்டிருந்த அவனது மனது.
காரை பார்க் செய்தவன் அனிக்காவின் வீட்டின் வாசலில் வந்துவிட்டிருந்தான், உள்ளே நுழையுமுன்னே அவள் குரல் கேட்கவும் சட்டென்று முன் சென்று அவளுக்கு அதிர்ச்சிகள் கொடுக்க எண்ணாமல் ஹாலிலிருப்பவருக்கு தெரியாதவண்ணம் அமைந்திருந்த முன் வாயில் பகுதியில் நின்றுக் கொண்டு கள்ளத்தனமாய் அவளைப் பார்க்க உள்ளே தன் கண்களால் துழாவினான்.
அவன் காலையில் உடுத்திருந்த உடையில் தோற்றம் நலுங்கிப் போய் வந்திருக்க, அவளோ புது சேலை ஒன்றை அணிந்து பிங்க் நிறத்தில் பெரிய ரோஜாப் பூவாகவே மலர்ச்சியாக இருந்தாள். அவளைச் சுற்றி குட்டிக் குட்டி பூக்கள் பூத்திருந்தன. ஆம், ஹனியும் அவள் குட்டி நண்பர்களும் அவர்கள் உயிர்ப்பூட்டும் நிஜ பூக்கள் தானே…..
சுற்றிக் குழந்தைகள் அமர்ந்திருக்க ஏதோ கதை ஒன்றை அபிநயம் பிடித்து அவள் சொன்ன விதத்தில், கதையில் அரக்கன் வரும் போதெல்லாம் இருப்பதிலே குட்டி மனுஷனொருவன் அந்த கூட்டத்தை விட்டு பயந்து ஓடுவதும், அவனை போக விடாமல் அனியும் மற்ற சிறார்களும் இழுத்து பிடித்து தங்களோடு சேர்ப்பதுவுமாக கலகலத்துக் கொண்டிருந்தது வீடு.
“வா ரூபன்”, அத்தையின் அன்பான அழைப்பில் உள்ளே நுழைந்தான் ரூபன். வாண்டுகள் அனைத்தும் அவளிடமிருந்து இவனிடம் பாய,
“இடு எங்க மாமா” என்று ஹனி தன் வாண்டுகள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்த , அவனும் குழந்தைகளோடு கதை பேசிக் கொண்டு தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளை கொடுத்து அவர்களோடு சிறிது நேரம் ஐக்கியமானான். அதோடு கூடஎதிரில் இருந்தவளை வெகு நாளாக காண இயலாத காரணத்தால் விழி இமைக்காமல் அவன் கணவன் பார்வை அதான் காதல் பார்வை பார்த்து வைக்க,
அவளும் விழிகள் நோவதை பொருட்படுத்தாமல் அவனை மனைவி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அதாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.
வந்திட்டான் எப்ப பாரு கைல ஒரு பார்சல் இல்லாம வரவே தெரியாது. இன்னிக்கு குரியர் பாய் பார்சல் கொஞ்சம் பெரிசா இருக்கும் போலியே…என்று எண்ணினாலும் அதைக் கண்டுக் கொள்ளவில்லை
அம்மாவும் அண்ணியும் என்ன இது இன்றைக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு என்ன ஆச்சு? மாப்பிள்ளையை பார்த்ததும் காலில சக்கரம் கட்டிக்கிட்டு ஓடி ஓடி உபசரிக்குமே…. இன்றைக்கு பார்த்து எல்லாமே மறந்திட்டுதா என்று புரியாத தோரணையில் அவளுக்கு பதிலாக தாங்கள் ரூபனை வந்து வந்து உபசரித்துப் போக அவளோ இப்போது தான் அவன் அவளைப் பெண்பார்க்க வந்த மாதிரி பாவித்து அவனுக்கெதிரில் அசையாதவளாக அமர்ந்திருந்தாள்.
காஃபி குடித்து முடித்ததும் க்ளாஸை திரும்ப வைக்க கையில் எடுத்தவனாக கிச்சன் பக்கம் அவன் செல்ல ,
“இதெல்லாம் எதுக்கு எடுத்துக்கிட்டு ரூபன், நான் எடுத்திருப்பேன்ல” அவனைக் கடிந்தவராக சாரா அவன் கையினின்று க்ளாஸை வாங்கிக் கொள்ள, அதனைத் தொடர்ந்து அவன் அவரிடம் ஏதோ பேசுவதும், அவரோ
அதெல்லாம் அவளுக்கு பிடிச்சா போதும்பா………நான் எதுக்கு பார்த்துக்கிட்டு என்றவராய் ஏதோ பேச முழுதாக இவள் காதில் எதுவும் விழாத நிலை.
அனிம்மா அத்தானை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ என்றார். அவர் தோரணையே மறுக்கமுடியாததாக இருக்க அவள் அவனோடு மாடியிலிருக்கும் தன் அறைக்குச் சென்றாள்.
அத்தான் ரிஃப்ரெஷ் ஆகிக்கோங்க என தன் அறையிலிருந்த அட்டாச்ட் பாத்ரூமைக் காட்ட, பரவாயில்லை நம்மளை கவனிக்காத மாதிரி இருந்தாலும் இவளுக்கு நம்ம டயர்டா இருக்கிறது புரியுது என்று எண்ணிக் கொண்டான். ரிஃப்ரெஷ் ஆகி திரும்ப வரும் போது அவள் தன் அறையின் ஏசி டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் செய்துக் கொண்டிருந்தாள். இன்னும் அவனைப் பார்க்காதது போலவே ஒரு அடம்,