விவேக் ஸ்ரீநிவாசன் - 10 - வத்ஸலா
வெளியில் மழை மேகங்கள் கூடி இதோ கொட்டப்போகிறேன், கொட்டப்போகிறேன் என அறிவிப்பு கொடுத்துக்கொண்டிருக்க அப்பாவின் அறையில் அமர்ந்துக்கொண்டு அந்த புகைப்படத்தையே குழுப்பத்துடன் பார்த்திருந்தான் விவேக்.
அந்த புகைப்படத்தில் கருநீல ஜீன்சும், டி ஷர்டும் அணிந்து ஒய்யாரமாய் நின்றிருந்தாள் ஹரிணி!!! அந்த புகைப்படத்தின் பின்னால் அவளது கைப்பேசி எண்ணும், முகவரியும் எழுதப்பட்டு இருந்தன.
இந்த ஹரிணிக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்??? தீவரமான சிந்தனையுடன் நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டான் விவேக்.
ஹரிணியின் நடை உடை பாவனைகளும், சாதாரண வேட்டி, சட்டை என இருந்த தாமோதரனும் நேரெதிராக தோன்ற, இவர் அவளது அப்பாவாக இருக்கும் என்ற எண்ணமே வரவில்லை விவேக்குக்கு.
எதுவாக இருந்தாலும், இவர் யாராக இருந்தாலும் அவளை தொடர்பு கொள்வதுதான் சரி என தோன்ற தனது கைப்பேசியில் இருந்த அவளது எண்ணை அழைத்தான் விவேக்.
சுஹாசினியின் வீட்டிலிருந்து கிளம்பி தோழிகளுடன் ஏதோ ஒரு மாலுக்கு சென்றிருந்தாள் ஹரிணி. விவேக்கின் அழைப்பை பார்த்ததும் துணுக்கென்றது அவளுக்கு.
‘இவனெதற்கு அழைக்கிறான் இப்போது??? ஒரு வேளை அப்பாவின் விஷயம் தெரிந்திருக்குமோ??? ஹாசனி சொல்லி இருப்பாளோ??? இருக்கும்!!! அப்படிதான் இருக்கும்!!!’ யோசித்தபடியே பட்டென துண்டித்தாள் அழைப்பை.
‘ஒரு வேளை அப்பா இருக்குமிடம் அவனுக்கு தெரிந்திருக்குமோ???
‘இல்லை வாய்ப்பே இல்லை. அவரென்ன இந்திய பிரதமரா அமெரிக்க ஜனாதிபதியா எல்லாரும் அவரை எளிதாக கண்டுகொள்ள??? என் உதவி இல்லாமல் அவர்களால் அப்பாவை நெருங்கவே முடியாது!!!’ சின்னதாய் ஒரு கேலி சிரிப்புடன் தலையசைத்துக்கொண்டாள் ஹரிணி.
இங்கே ஒரு பெருமூச்சுடன் தலையசைத்துக்கொண்டான் விவேக். ஆனாலும் இது அப்படியே விட்டு விடக்கூடிய விஷயம் இல்லையே!!! அவளிடம் சொல்லித்தானே ஆக வேண்டும். மறுபடி அழைத்தான் மறுபடி கட்.
‘அப்படி என்னதான் கொஞ்சம் கூட யோசனை இல்லாத அவசர புத்தியோ???’ சுறுசுறுவென ஏறத்தான் செய்தது விவேக்கின் கோபம்.
‘யார் எப்படிப்போனால் எனக்கென??? என தூக்கி எரிந்துவிட்டு போகவும் மனமில்லை. அவன் அப்பா கொஞ்சம் மனிதாபிமானத்தையும் சேர்த்து ஊட்டி அல்லவா வளர்த்து இருக்கிறார் அவனை..
இனி இவளை அழைப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவனாக மருத்துவமனையின் பெயருடன், ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியை தொகுத்து அனுப்பினான் அவளுக்கு.
‘இங்கே ஒரு வயதானவருக்கு விபத்து. அவரிடம் இருந்த உன் புகைப்படத்தை பார்த்தேன். அதனால் அவர் உனக்கு வேண்டியவராக இருக்குமென தோன்றுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். சீக்கிரமாக இங்கே வந்து சேர்.!!!’
பல நேரங்களில், ஒரு விஷயத்தை இது இப்படித்தான் என நாம் கண்மூடித்தனமாக முடிவு செய்துக்கொண்டு விடும் பொழுதுகளில் இருண்டு போய் விடுகிறது அறிவு!!!
எது நடக்ககூடாது என, யார் அவன் கண் முன்னால் வர வேண்டாம் என நினைத்தாளோ அவரே அவன் அருகில் இருக்கிறார் என தெரிந்தால் இப்படி செய்திருப்பாளா???
அவனிடமிருந்து வந்தது என்பதாலேயே அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க விரும்பாதவளாக, அதில் ஒரு வரியை கூட படிக்காமல் அந்த குறுஞ்செய்தியை அப்படியே அழித்திருந்தாள் ஹரிணி!!!
மழை கொட்ட ஆரம்பித்திருந்தது. ஜன்னலின் அருகில் சென்று மழையையே பார்த்திருந்தான் விவேக். சற்றுமுன் நடந்த அந்த விபத்து அவனை கொஞ்சம் உலுக்கி இருந்தது. தாமோதரன் அடிப்பட்டு விழுந்த அந்த காட்சி திரும்ப திரும்ப கண் முன்னே வந்து போனது.
அப்பாவுக்கும் சில வருடங்கள் முன்னால் இப்படித்தானே நடந்திருக்கும். அய்யோ!!! எப்படி எல்லாம் துடித்தாரோ??? இறைவா!!! இவரையாவது காப்பாற்று!!!
அரை மணி நேரம் கடந்திருக்க ஹரிணியிடமிருந்து பதிலோ, அழைப்போ வருமென எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே!!!
அப்போது வந்தது அந்த அழைப்பு. அவனது அலுவலகத்திலிருந்து!!! ஏதோ ஒரு விமானி அவசர விடுப்பில் சென்றிருக்க இவனை வர முடியுமா என கேட்டு அழைப்பு. இவனது வேலையில் இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.
‘அப்பாவின் நினைவு நாளில் விமானம் ஓட்டுவது எல்லாம் இயலாது’ முதலில் மறுத்திடத்தான் தோன்றியது அவனுக்கு அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தவனை தடுத்தது புகைப்படத்தில் இருந்த அப்பாவின் புன்னகை.
‘நோ... விவேக்.... லீவ் எல்லாம் கிடையாது.. கம்... ஆன்... ரன்.. ரன்.. ரன்...இட்ஸ் கெட்டிங் லேட் ... எப்பவுமே டியூட்டிதான் ஃப்ர்ஸ்ட்
.’பள்ளிக்காலங்களில் அப்பா இவனை புன்னகையுடன் பள்ளிக்கு துரத்தும் கணங்களின் ஞாபகம்.. அப்பா இருந்திருந்தால் இப்படிதான் துரத்துவார் இன்றைக்கும்!!!.