12. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது
ஓர் சராசரி மனிதனின் இதயத்தின் எடை சுமார் 300 கிராம் ஆகும்
காதல்!!!
எப்போது, யார் மீது, எப்படி இந்த அழகான உணர்வு தோன்றும் என்று ஏதாவது விதிமுறைகள் உள்ளனவா... அதுவும் யார் என்ன குணநலன்கள் எப்படி என்ற விவரம் ஏதும் அறியாமலேயே காதல் ஆழமாக வேரூன்றிரும் விடுமா...
மறுமுனையில் ரிங் போய் கொண்டிருக்க சட்டென்று கால் கட் செய்து விட்டு மொபைல் திரையில் தெரிந்த பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.
எத்தனையோ இதய அறுவை சிகிச்சைகளை திறம்பட செய்து வெற்றிக் கண்ட அந்த மருத்துவனின் கரங்கள் நடுங்கின.
பயமா!!! தயக்கமா!!! மெலிதான குற்ற உணர்வா!!! எதனால் இந்த நடுக்கம். எதனால் இந்த பதைபதைப்பு என்று அவனுக்கே புரியவில்லை.
இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனது மொபைல் இனிமையாய் இசைத்தது.
“கணேஷ்” மறுமுனையில் கேட்ட குரலில் நிம்மதி பெருமூச்சினை விட்டான்.
“பாஸ். குட் குட் ஈவனிங் பாஸ்” கணேஷ் பதில் கூற சிறிது நேரம் பொதுவாக அவர்கள் துறையை பற்றி, அவனது ப்ராக்டீஸ் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“இதோ ஹனி வந்துட்டா. குடுக்குறேன்” பாதி பேசிக் கொண்டிருக்கும் போதே யார் எவர் என்ற விவரம் ஏதும் சொல்லாமல் ஹரிணியின் கைகளில் போனை திணித்து “உனக்கு தான் கால்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
“யார் கால் ஹரி” அவள் கேட்க எத்தனிக்கும் முன்பே அவன் சென்றுவிட அவள் டிஸ்ப்ளே பார்க்காமலேயே போனை காதுக்குக் கொடுத்தாள்.
“ஹல்லோ” அவளது குரல் கேட்டதும் ராம் கண்களில் லேசாக நீர் கோர்த்துக் கொண்டது.
“செர்ரி” கரகரப்பான குரல் கேட்கவும் ஹரிணியின் கண்கள் விரிந்தன. ஓர் மகிழ்ச்சி ஊற்று உள்ளே பெருக்கெடுத்தது.
“ராம்” அவள் அழைப்பே அவளது அகத்தை கணேஷ் ராமிற்கு உணர்த்தி விட அது வரை அவன் கொண்டிருந்த பயம், தயக்கம் எல்லாம் சுவடே இல்லமால் மறைந்து விட்டிருந்தன.
“ராம் நிஜமா நீ தானா” எத்தனை நாள் கழித்து அவனது குரலை கேட்கிறாள்.
அவளது ராம் என்ற அழைப்பில் அவள் இதழ்களில் புன்னகை ஒட்டிக் கொண்டது. அவன் பாட்டிக்குப் பிறகு ராம் என்று அவனை அழைத்தது அவள் தான்.
ஒரு முறை அவன் இதை சொல்லிவிட பூர்வி ஓட்டித் தள்ளிவிட்டாள்.
“ஏய் கரம் மசாலா அப்போ நீ அக்காவை பாட்டின்னு சொல்றியா”
“மோன் செர்ரியை போய் நான் பாட்டின்னு சொல்வேனா. நீ தான் பாட்டி மாதிரி எப்போ பார்த்தாலும் லொட லொடன்னு இருக்க”
அந்த நினைவுகளில் கணேஷ் லயித்து விட “ராம்” என்ற ஹரிணியின் அழைப்பு பல முறை கேட்கவும் நனவிற்கு வந்தான்.
“செர்ரி...வந்து நான்...” வார்த்தைகள் தந்தி அடித்தன.
“ராம். நான் உன்னை ஏதும் கேட்க மாட்டேன்னு உனக்கே தெரியும். ஜஸ்ட் லீவ் இட்” அவள் சொல்லவும் அவனது மனம் முழுவதும் நிம்மதி நிறைந்தது. காலமும் சூழ்நிலையும் இடைவெளி ஒன்றை ஏற்படுத்தி விட்டதோ என்ற மாயை திரையை அவள் நீக்கிவிட்டிருந்தாள்.
“ராம். என்ன விஷயம். ஹாவ் யூ பாலன் இன் லவ் ஆர் சம்திங்” கணேஷ் பதில் ஏதும் பேசாது போகவே ஹரிணி மெதுவாய் அவனிடம் கேட்க கணேஷ் முகம் முழுவதும் செம்மையை பூசிக் கொண்டது.
அப்போதும் பதில் ஏதும் வராமல் போகவே ஹரிணிக்கு நூறு சதவீதம் நிச்சயம் ஆயிற்று.
“ராம்... ஆர் யு ப்ளஷிங்” பார்க்கமலேயே அதையும் கண்டுபிடித்து விட்டவளிடம் நன்றாக மாட்டிக் கொண்டான்.
“செர்ரி je’taime” (பிரெஞ்ச் மொழியில் ஐ லவ் யூ)
“டேய் என்னடா என்கிட்ட போய் ஐ லவ் யூ சொல்ற. சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லிட்டியா”
“செர்ரி ஹவ் டிட் யூ கெட் இட் ரைட்” கணேஷ் கேட்க மறுமுனையில் கலகலவென சிரித்தாள் ஹரிணி.
“சரி சொல்லு. யார் அந்த ஏஞ்சல் எங்க ராமை கொள்ளை கொண்டு போனது”
அவள் கேட்கவும் வர்ஷினியை முதன்முறை சந்தித்தது தொடங்கி அன்று என்கேஜ்மன்ட் பார்ட்டி வரை மேலோட்டமாய் சொல்லி முடித்தான்.
“வர்ஷினி. பேர் நல்லா இருக்கு. என்ன பண்றாங்க. எந்த ஊர்” ஹரிணி விபரங்கள் கேட்கவும் கணேஷ் திகைத்தான்.
“ஸ்டுடன்ட்ன்னு தெரியும் வேற எதுவும் தெரியலையே செர்ரி” கணேஷ் வருத்தமாய் கூறினான்.
“ராம். இட்ஸ் ஒகே. உன் காதல் உண்மையானதாக இருந்தா அதே காதல் அவளோட மனசிலும் ஆழமாய் இருந்தா தி ஹோல் யுனிவர்ஸ் வில் ஹெல்ப் யூ. வில் மேக் இட் ஹாப்பன். அவளே உன்னை தேடி வருவா”