தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 11 - லதா சரவணன்
அந்த நாட்களின் எண்ணிக்கைக்கு குந்தகம் வராதபடி என் கணக்குப் புத்தகத்தில் பாராக்களை மாற்றிக்கொண்டே வந்தேன். கூட்டலும் கழித்தலும் சரிவிகிதத்தின் அடிப்படையில் வராதபடி என்னை திருத்திக்கொண்டிருக்கும் ஆசிரியர் நீ என்பதை நினைவில் கொள்ளாமல் !
பண்ணை வீடு சொன்னாற்போலவே கல்பனாவும் இரண்டு நாட்களுக்குள் வந்துவிட தனிமை பயம் விலகி ஓடியது சுப்ரியாவிற்கு ரவியுடன் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களை கல்பனாவே அவர்களுக்குத் தந்தாள். குப்பயைில் இருந்த எனக்கு கோபுரத்தின வாசலைக் காட்டியிருக்கிறாள் கல்பனா சில நேரங்களில் நாசூக்காக ஒதுங்கவும் செய்தாள். என்னையும் ஒரு மனுஷியாய் மதித்து என் உணர்களுக்கும் மதிப்பளித்து புனிதமான ஒரு வாழ்க்கை வாழ வகை செய்திருக்கிறார்களே ! சுப்ரியாவின் நெஞ்சம் அவர்கள் நீடுழி வாழ வேண்டும் என்று பிராத்தனை செய்தது. கல்பனாவின் செயல்பாடுகள் அவளின் மேல் அளவற்ற மதிப்பைக் கொண்டு வந்தது சுப்ரியாவிற்கு தன்னுடைய கடந்த காலத்தின் பாதிப்புகளை சொல்லும் அளவிற்கு !
கல்பனா அவளின் பெற்றோரிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்,
எனக்கு எந்தக் குறையும் இல்லை உங்க மாப்பிள்ளை அப்படித் தாங்குறார், வைச்சிடட்டுமா ?
என்னவாம் ?
நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு சுப்ரியா அப்பா அம்மா செல்லம் குழந்தையின்மை ஒரு பெரிய குறையா இருந்தது இப்போ ஒரு பத்து நாள் தள்ளிப் போயிருக்கு டாக்டர் என்னை ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்க சொல்லியிருக்கார்ன்னு சொன்னேன். உடனே எல்லாரும் நாங்களும் பண்ணை வீட்டுக்கு வந்து உனக்கு ஒத்தாசையா இருக்கோம்மின்னு ஆரம்பிச்சாங்க. அப்பறம் ரவி யாரோ ஒரு ஜோசியரைக் கூட்டி வந்து கொஞ்சநாள் இரண்டு தரப்பு பெரியவங்களையும் பார்க்காம அவங்க வேலையை அதாவது யாரும் இல்லாம அவங்க வனவாசம் போல இருந்தா சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்குன்னு சொல்லியிருக்காங்க, எங்க அத்தைக்கு அதாவது ரவியோட அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம் உடனே நாங்க தனியா கிளம்ப வழி செய்திட்டாங்க. ஆனா எங்கம்மா ஒரு நாளைக்கு நாலு போன் பண்ணாலும் திருப்தி அடையாதவங்க. சரி நீ டிபன் சாப்பிட்டியா வாக் போனியா ?!
ம். ஆச்சு.
இப்படி அன்பைப் பரிமாறிக்கிற உறவுகள் கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்கணும், சுப்ரியா ஏக்கமாய் தெரிவித்தாள்
நானே உன்கிட்டே கேக்கனுமின்னு நினைச்சேன் சுப்ரியா நீ இப்படி... மனசுக்கு வருத்தமா இருந்தா சொல்லவேண்டாம்.
வருத்தம் எல்லாம் எப்போ சுண்டிப்போச்சு, இதுவரையில் என் உடம்புகிட்டேதான் மனுஷங்க பேசிட்டு இருந்தாங்க இப்பத்தான் உதடுகிட்டேயும், மனசுகிட்டேயும் ஆதரவா பேச நீங்க இரண்டு பேரும் இருக்கீங்களே உங்ககிட்டே சொல்லாம யார் கிட்டே சொல்லப் போறேன். அப்பா அம்மா இறந்தபிறகு நான் என் பெரியம்மா மகள் கூட வளர்ந்தேன், அக்கா என்னவோ நல்லவங்கதான் ஆனா மாமாவுக்கு முப்பத்திரெண்டு வயது வியாதியான அக்காவை விட பதிமூணு வயதில இளமையா இருந்த என் உடம்பு தேவைப்பட்டது எத்தனையோ முறை அசிங்கமா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான் அக்காகிட்டே சொன்னா அவளைக் கொன்னுடுவேன்னு மிரட்டி வைச்சிருந்தான். உலமின்னா என்னன்னு புரியாத வயது பெத்தவங்களுங்களையும் பறிகொடுத்திட்டு ஒரே ஆதரவா இருக்கிற அக்காவும் போயிடுவாளோங்கிற பயத்திலே வேற வழியில்லாம அக்கா வீட்டுலே இல்லாத நேரம் எல்லாம் அவன் கூட உறவு வைச்சிக்க வேண்டியதா போச்சு நரகம் கல்பனா அது காசுக்கு வர்ற காமவெறியன் கூட அத்தனை மோசமா என்கிட்டே நடந்துகிட்டது இல்லை, அவனோட வக்கிர உணர்வுகளுக்கு அந்த சின்ன உடல் வடிகால இருந்தது. என் வயிறும் நிறைஞ்சிடுச்சி என்னை யாருடனோ சேர்ந்து தப்பு பண்ணிட்டதாகவும் அதனால அவனோட மரியாதை கெட்டுப்போயிட்டதாகவும் வெளியே பேசினான். நாலு பேரு முன்னாடி அடிச்சான்.
அக்காவால எதுவும் செய்ய முடியலை, அந்த நாள்ல நானே ஒரு குழந்தையா இருந்த நாள்ல என் வயிற்றில் வளர்ந்த சிசுவை கலைக்க மருத்துவச்சி மூலமா மருந்து தரப்பட்டது எனக்கே அறியாம அந்த வலியும் வேதனையோடு என்னை ....அதைப் பார்த்த அக்கா என்ன நினைச்சாளோ மறுநாள் காலையிலே எழுந்திருக்கவே இல்லை அவளோடு மனசாட்சியோ எதுவோ அவளை உறக்கத்திலேயே கொண்டு போயிடுச்சு அதுக்கும் நான் தான் காரணம் சென்னையிலே ஒரு காப்பகத்திலே சேர்த்துவிட்டுடறேன்னு ஈமக்காரியங்கள் நடக்கும் போது எல்லாரிடமும் சொன்னான் அந்த மிருகம். சென்னையிலே எனக்குன்னு விரிக்கப்பட்ட வலை தெரியாம இருந்தது.
ஒரு லாட்ஜில் ரூம் போட்டு எனக்கு மயக்க மருந்து தந்து அவனும் அவனுடைய நண்பர்களும் மூன்று நாட்கள் என்னை சீரழிச்சாங்க மூணாவது நாள் காலையிலே நான் எங்கோ ஒரு கசங்கிய படுக்கையில் அரைகுறை ஆடையில் ! இடம் என்ன ஏது எதுவுமே தெரியத நிலையில் ! அப்போ போலீஸ் ரைடு வந்தது அங்கே, நான் உட்பட நிறைய பெண்கள் அரஸ்ட் ஆனாங்க. கோர்ட்ல அபராதம் கட்டு இல்லைன்னா ஜெயில் தண்டனைன்னு சொன்னப்போ எங்கிருந்தோ என் மாமன் வந்து நான் பணம் கட்டுறேன்னான். அவன்கிட்டே இருந்து தப்பிக்கிறதுக்கு நான் ஜெயிலுக்கே போனேன்.