(Reading time: 2 - 4 minutes)

குட்டிக் கதைகள் – 82. நரியும், வாலும்

ரு காட்டில் பல நரிகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன.

  

அதில் ஒரு நரி ஒரு முறை வலையில் சிக்கிக் கொண்டது. பல மணி நேரம் கடுமையாகேப் போராடியப் பிறகு தான் நரியால் வலையில் இருந்து தப்பிக்க முடிந்தது. ஆனாலும் அப்படி தப்பிக்கும் போது நரியின் வால் வெட்டுப் பட்டு வலையிலேயே சிக்கிக் கொண்டது.

  

“வால் இல்லாத என்னைப் பார்த்து மற்ற நரிகள் சிரிக்காதா?” என்று நரி வருந்தியது.

  

என்ன செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.

  

காட்டில் உள்ள அனைத்து நரிகளையும் ஒரே இடத்தில் கூட்டமாக கூட்டி,

  

"சகோதரர்களே! நாம் ஏன் இந்த நீண்ட வால்களை சுமக்கிறோம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த வால்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வாலினால் தொல்லை மட்டும் தான்.  நாம் நம் வாலை துண்டித்து அதன் தொல்லைகளிலிருந்து விடுபடுவோம். " என்று சத்தமாக பேசியது வாலை இழந்த நரி.

  

மற்ற நரிகள் அதற்குள் பேசும் நரிக்கு வால் இல்லாததை கவனித்து விட்டன.

  

அதனால் சிரித்துக் கொண்டே,

  

“உன் வால் இருந்தப்போது அது உனக்கு தொல்லையாக இல்லை. இப்போது மட்டும் அது தொல்லையாகி விட்டதா வாலில்லாத நரியே?” என்றுச் சொல்லி கேலியாக சிரித்தன!

  

தன் திட்டம் பொய்த்து போனது புரிந்துக் கொண்டு வாலில்லாத நரி வெட்கத்துடன் ஓடிப் போனது.

  

கருத்து:

  

தங்களைப் போலவே மற்றவர்களையும் தாழ்த்த நினைக்கும் மனிதர்களின் ஆலோசனைகளை காது கொடுத்தே கேட்காதீர்கள்!

  

 

  

அறிவியல் உண்மை:

  

நரிக்கு இயற்கை வால் கொடுத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது.

  

நரிகள் ஓடும் போது அதன் வால் காரின் ஸ்டியரிங்கைப் போல நரிகளுக்கு உதவுகின்றன. அதாவது எந்தப் பக்கம் செல்வது, எப்போது திரும்புவது என்பன போன்றவற்றுக்கு வால் உதவுகிறது.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.