கருத்துக் கதைகள் – 14. மூன்றுக் குடுவைகள் - ஜான்சி
ஹாய் சில்ஜீ பிரெண்ட்ஸ் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். இன்றைக்கு நான் பகிர்ந்துக் கொள்ளப் போவது ரொம்ப நாள் முன்பாக நான் படித்த ஒரு கதை.
ஒரு துறவு மடத்தில் புதுமையான ஆராய்ச்சி ஒன்றைச் செய்ய தீர்மானித்தார்கள். அதன் படி மூன்றுக் கண்ணாடிக் குடுவைகளில் தண்ணீர் ஊற்றி நிரப்பி மூன்று வெவ்வேறு அறைகளில் வைத்தனர்
ஆராய்ச்சியின் முதல் கட்டமாக முதலாவது அறைக்கு சென்ற ஒரு துறவி அக்குடுவைக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து உற்சாகமான குரலில் பல நல்ல நல்ல விஷயங்களைப் பேசவும், மகிழ்ச்சியால் பாடவுமாக இருந்தார்.சில மணித்துளிகள் அவ்வாறு செய்த பின்னர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.அந்தக் குடுவைக்கு "உற்சாகக் குடுவை" என்று பெயரிடப்பட்டது.
பிறகு, இரண்டாம் அறைக்குச் சென்று குடுவைக்கு முன் அமர்ந்து மிக சோகமானவற்றைப் பேசவும், உலகிலுள்ள துயரங்களை நினைவுக் கூறவும், தோல்விகள், இழப்புக்கள் குறித்து மிகவும் வருத்தமான மெலிந்த குரலில் பேசிக் கொள்வதும், அழுவதுமாக இருந்தார்.அந்தக் குடுவைக்கு "சோகக் குடுவை" என்று பெயரிடப்பட்டது.
அடுத்ததாக மூன்றாம் அறைக்குச் சென்று குடுவைக்கு முன் நின்று உரத்தக் குரலில் திட்டவும், மரியாதைக் குறைவான வார்த்தைகளை ஆத்திரமாகப் பேசவும் செய்தார்.அந்தக் குடுவைக்கு "ஆத்திரக் குடுவை" என்று பெயரிடப்பட்டது.
இவ்வாறு இரண்டு வார காலம் தொடர்ந்து செய்து வந்த பின் அந்த மூன்றுக் குடுவைகளும் குளிர்பதனப் பெட்டியில் உறை நிலையில் வைக்கப் பட்டன.பரிசோதனையின் முடிவை அறிந்துக் கொள்ள மடத்திலிருந்த அனைவரும் ஒன்றுக் கூடினர்.
3 கண்ணாடிக் குடுவைகளும் குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டன.முதலில் "உற்சாகக் குடுவை"யை அனைவரும் பார்வையிட்டனர் அதில் மிக அழகழகான வரி வடிவங்கள் தோன்றியிருந்தன.
இரண்டாவதான "சோகக் குடுவை"யில் தெளிவற்ற ,அழுத்தமற்ற வரிவடிவங்கள் தோன்றியிருந்தன.
மூன்றாவதான " ஆத்திரக் குடுவை"யில் மிகவும் பயங்கரமான விதமாக வரிவடிவங்கள் தோன்றியிருந்தன.
பார்வையிடல் நிறைவுற்றதும் அந்த மடத்தின் தலைவர் உரையாற்றத் தொடங்கினார்.
"அன்பார்ந்த சீடர்களே, இந்த மூன்றுக் குடுவைகளை வைத்து சில நாட்களாக நாம் செய்து வந்த ஆராய்ச்சியின் முடிவை நாம் இன்று கண்டோம். இதன் மூலம் நாம் இன்று அறிய வந்த கருத்து என்னவென்றால் ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கும் தண்ணீரானது மனிதனின் பல்வேறு விதமான பேச்சுக்களுக்கு ஏற்ப உணர்வுகளை பிரதிபலித்து உள்ளது.அப்படியென்றால், தனது உடலில் பெரும்பான்மையான பகுதி ( 50 முதல் 75 சதவிகிதம் வரை) நீராக அமைந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தாம் கேட்கும், சொல்லும் வார்த்தைகள் ஏற்படுத்தும் மாற்றம் எத்தன்மையானதாக இருக்கும்?!
ஆகவே நாம் ஒரு போதும் பிறருக்கு துன்பம் விளைவிக்கும் விதமாக பேசக் கூடாது என்று பல நல்லக் கருத்துக்கள் கூறி நிறைவு செய்தார்.
கதை சொல்லும் கருத்து:
நமது வார்த்தைகள் பிறருக்கு வாழ்வளிக்கும் விதமாக இருக்க வேண்டுமே அன்றி, பிறரின் வாழ்வை அழிக்கும் விதமாக இருக்கக் கூடாது.