கருத்துக் கதைகள் – 40. ஊடலும், கூடலும் காதலுக்கழகு... - தங்கமணி சுவாமினாதன்
சட்..எத்தன நேரம் காத்திருப்பது..?வரேன்னு சொல்லிட்டு இப்பிடியா வராமல் இருப்பது..கோவத்தோடு அருகில் கிடந்த சிறிய கல் ஒன்றைப் பொறுக்கி குளத்துத் தண்ணீரில் எறிந்தான் சர்வேஷ்.கோவம் வராதா பின்னே?
காதலனுக்காக காதலியும் காதலிக்காக காதலனும் காத்திருப்பது இனிமைதான் என்றாலும் வெகு நேரம் காத்திருப்பது எரிச்சலைத் தானே ஏற்படுத்தும்.அப்படித்தான் தன் காதலி ஷ்ரேயாவுக்காகக் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தான் சர்வேஷ்.கடசி வரை ஷ்ரேயா வராமல் போகவே உட்ச பட்ச கோவத்தோடு எழுந்து போனான்.
மறு நாள் தன் நண்பனோடு கோவிலுக்குப் போனவன் ஷ்ரேயாவும் தன் தாயோடு கோயிலுக்கு வந்திருப்பதைப் பார்த்தான்.முதல் நாள் அவள் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் ஏமாற்றியது நினைவுக்கு வரவே அவளைப் பார்த்தும் பார்க்காதது போலவே முகத்தைத்திருப்பிக்கொண்டான். அவளுக்கு அவனின் கோவம் புரிந்தது.மனம் சங்கடப்பட்டது.உடன் தாய் இருக்கையில் அவனிடம் பேசவும் முடியவில்லை.என்ன செய்வது என்று புரியவில்லை.திடீரென அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது.
தன் தாயிடம் விடுகதை சொல்வது போல் தன் காதலனுக்கு விஷயம் சொன்னாள் கொஞ்ச சப்தமாக அவன் காதில் விழும்படி.
அம்மா எங்கே என் விடுகதைக்கு பதில் சொல்லேன் பார்க்கலாம்...
வெட்டியதால் சாகவில்லை--வெட்டாவிட்டால் செத்திருப்பேன்...
செத்ததால் சாகவில்லை--சாகாவிட்டால் செத்திருப்பேன்...
வந்ததால் வரவில்லை--வராவிட்டால் வந்திருப்பேன்....
தாய்க்கு ஒன்றும் புரியவில்லை...போடி எனக்கு ஒண்ணும் புரியவில்லை என்று சொல்லிவிட்டாள்.
காதலன் சர்வேஷுக்குப் புரிந்து விட்டது அவள் ஏன் முதல் நாள் வராமல் இருந்தாள் என்று.அவன் கோவம் போய்விட்டது.அவளின் தாய் அறியாதவாறு அவளைப் பார்த்து புன்னகை செய்தான்.அவள் நிம்மதியானாள்.
சர்வேஷின் நண்பனுக்கு ஒன்று புரியவில்லை.என்னடா உன் ஆளு ஏதோ விடுகதை போட உனக்கு புரிந்தது போல சிரிக்கிறாயே என்றான்.
ஆம் எனக்கு அவள் போட்ட விடுகதையின் அர்த்தம் புரிந்தது.உனக்கும் சொல்கிறேன் கேள்.நேற்று அவள் என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னாள் ஆனால் வரவில்லை.எனக்கு அவள் மீது கோபம்.என் கோபத்தை அறிந்த அவள் தன் தாய்க்குத் தெரியாமல் விடுகதை மூலம் அவள் வராமல் இருந்ததற்கான காரணத்தை எனக்குச் சொல்லிவிட்டாள்.அவ்விடுகதையின் பொருளை உனக்குச் சொல்கிறேன் கேள் என சொல்ல ஆரம்பித்தான்....
ஷ்ரேயா போட்ட விடுகதையின் பொருள் உங்களுக்கு விளங்கியதென்றால் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இல்லாவிடில் நானே நாளை சொல்கிறேன்..ப்ளீஸ்..நாளை வரை காத்திருங்களேன்..காத்திருப்பீர்கள்தானே?
நன்றி....
கதை சொல்லும் கருத்து:
ஊடலும்..கூடலும் காதலுக்கழகு....