(Reading time: 11 - 21 minutes)

அதிசய நாட்டின் கதை - ஜான்சி

ஹாய் குட்டீஸ்,

எல்லோரும் நல்லாயிருக்கிரீங்களா?, 

இதோ நான் புதியதொரு கதையோடு உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

frog princessஎனக்கு ராஜா ராணி கதைகள் கேட்பது மிக பிடிக்கும், உங்களுக்கும் அப்படித்தானே.......அதனால்தான் இன்றைக்கு நான் உங்கள் எல்லோருக்கும் ஒரு ராஜா ராணி கதையை சொல்லப் போகின்றேன்.

நான் சொல்லப் போற கதை அதிசய நாடு என்கின்ற ஒரு நாட்டின் கதையாகும்.அந்த நாட்டை குலசேகரன் என்னும் ஒரு மன்னர் ஆண்டு வந்தார்.அவருடைய மனைவி பெயர் சந்தவி தேவி அவர்களுக்கு 3 மகன்கள் இருந்தார்கள்.மூத்த மகன் வீரேந்திரன், ரெண்டாவது மகன் சுரேந்திரன் & மூன்றாவது மகன் நரேந்திரன் மூன்று பேரும் பல்வேறு கலைகளிலும், வீரத்திலும் மிக சிறந்தவர்கள்.வீரேந்திரன் ,சுரேந்திரன் இரண்டு பேரும் மிகவும் சாதுர்யமானவர்கள் ஆனால் இளையவர் நரேந்திரனோ எந்த தவறான செயல்பாடுகளும் அற்ற எப்போதும் நேர்மையானவற்றையே செய்ய வேண்டும் என்று எண்ணுகின்ற நற்குணம் கொண்டவர்.

அன்றைக்கு அந்த நாட்டில் இருந்தவர்கள் எல்லோருமே ஒரு பெரிய திறந்தவெளி பகுதியில் கூடி இருந்தார்கள். அதன் நட்ட நடுவிலே ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 3 ராஜ குமாரர்களும் கண்கள் கட்டப் பட்டவர்களாகவும், தங்கள் கையில் வில்லை நாணேற்றியவர்களாக,அம்பை எய்ய சரியான நேரத்தை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஏன் அப்படி நின்றுக் கொண்டிருந்தார்கள்? அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதிசய நாட்டின் மிக முக்கியமான 2 சட்டங்களை நாம் அறிந்துக் கொள்வது மிக அவசியமாகும்.

என்னடா இது...... பாகுபலி 2 ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கிறாங்கன்னு நீங்க முனகுறது கேட்குது....பொறுமை குட்டீஸ் பொறுமை.

அந்த நாட்டின் முதல் சட்டம் இளவரசர்களுக்கு மணப்பெண் தேர்வு நடக்க வேண்டிய முறை குறித்தது. இளவரசர்.... நாட்டின் நடுவில் உள்ள பகுதியில் நின்றவராக,கண்களை துணியால் கட்டிய நிலையில், குறிப்பிட்ட அடையாளம் கொண்ட அம்பை எய்ய வேண்டும். அந்த அம்பு யார் வீட்டின் மீது விழுகின்றதோ அந்த வீட்டின் பெண்ணையே அம்பை எய்த இளவரசர் மணம் புரிய வேண்டும்.அப்போது தான் ஏழை எளியவர் வீட்டு பெண்களும் கூட நாட்டின் இளவரசியாகும் சமத்துவத்தை நாட்டில் கடை பிடிக்க முடியும்.ம்ம்.... இந்த சட்டம் நல்லாயிருக்கில்ல...

இரண்டாவது சட்டம் நாட்டின் அரசரை தேர்ந்து எடுப்பதை குறித்தது. பொதுவாக மன்னனின் முதல் மகன் நாட்டின் மன்னனாக வருகின்ற வழக்கத்தை தவிர்த்து, மன்னருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இடையே 3 வீர போட்டிகள் நடத்தி, அதில் வென்ற இளவரசரையே நாட்டின் அரசராக முடிசூட்ட வேண்டும்.இதுவும் கூட நல்ல சட்டம் தானே என்ன சொல்றீங்க குட்டீஸ்.

சரி... இப்போ சொல்லுங்க 3 இளவரசர்களும் எதற்காக அந்த மேடையில் இருந்தாங்க? ............ம்ம் கரெக்ட், அவர்கள் திருமணம் செய்யும் பெண்களை தெரிவு செய்ய காத்து இருந்தார்கள்.அதில் மூத்த 2 இளவரசர்களும் ஏற்கெனவே ரொம்ப கெட்டிக் காரத்தனமாக முன்னேற்பாடு செய்தபடி அந்நாட்டின் பெரும் செல்வந்தர்கள் வீட்டின் பக்கமாக வெகு லாவகமாக அம்பை எய்தனர், ஆனால் நரேந்திரனோ தாம் குருக்குலத்தில் கற்ற கலையை அனைவருக்கும் காட்ட எண்ணினானோ என்னவோ ?!! அவன் எய்த அம்பு "ஸ்டேடியத்தை தாண்டிச் செல்லும் சிக்ஸர் பந்து போல" உயர, உயர பறந்து கண்ணிற்க்கு தெரியாத தொலைவில் போய் விழுந்தது.

வீரேந்திரனுக்கும் பெரிய ஜவுளிவியாபாரியின் மகள் வினிதா தேவிக்கும், சுரேந்திரனுக்கும் பாத்திரங்கள் வியாபாரம் செய்யும் செல்வந்தர் மகள் மாலினி தேவிக்கும் அன்றே மிக சிறப்பாக திருமணம் நடை பெற்றது.ஆனால் பாவம் நரேந்திரன் விட்ட அம்பு எங்குப் போய் விழுந்தது என்று தெரியாத காரணத்தால் அம்பை தேடும் மிக முக்கியமான பணியில் இளவரசர் புறப்பட்டுச் சென்றார். ச்ச்சு...த்ச்சு.. ரொம்ப பாவமில்ல....

ன்னுடைய குதிரையில் பயணம் செய்து நெடும் தூரம் கடந்து வந்து நரேந்திரன் அப்படியே அம்பைத் தேடிக் கொண்டு இருந்தான்.ரெண்டு நாள் கழிந்த பின்னர் நாட்டின் எல்லைக்கு அருகில் காட்டுப் பகுதியின் ஊடே ஒரு குடிசையின் மேல் தான் எய்த அம்பைக் கண்டதும் தன்னுடைய தேடுதல் நிறைவு பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ந்தான்.அந்த வீட்டின் வாயிலில் நின்று "இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?"என கேட்டான் . உள்ளே இருந்து ஒரு பெண் குரல் கேட்கவும், "தான் அவ்வீட்டின் பெண்ணை மணம் புரிய வந்திருப்பதாகச் சொல்லி"உள்ளே நுழைந்தான். வீட்டின் உள்ளே சென்றதும் அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது ஏனென்றால் அவனுடன் அது வரை பேசியது ஒரு பெரிய பெண் தவளை.

தவளையை மணம் முடிப்பதா? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று இளவரசர் சற்று நேரம் மிக திகைப்படைந்தாலும் நாட்டின் சட்டத்தை காக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் தலைதூக்க, அந்த தவளையை உடனே திருமணம் செய்துக் கொண்டான். ஆனால், அந்த தவளையை எப்படி நாட்டிற்க்குள் கொண்டு செல்வது என்று அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.அதனால் அந்த தவளையிடம் " நான் உனக்கு துணையாக ஒரு பணிப் பெண்ணை இங்கே கூட்டிக் கொண்டு வருகின்றேன். சில நாட்கள் கழித்து நாம் நம் அரண்மனைக்கு செல்லலாம் என்றுக் கூறிச் சென்றான்.சொன்னபடியே மிகவும் விசுவாசமான பணிப் பெண் ஒருவரை அழைத்து வந்து தன் தவளை மனைவியை அறிமுகப்படுத்தியவன்,"தான் கூறும் வரை தன்னுடைய மனைவி குறித்து யாருக்கும் எதுவும் தெரியப் படுத்தக் கூடாது "என்றுச் சொல்லி துணையாகவிட்டுச் சென்றான். அடிக்கடி அக்காட்டிற்க்கு வந்து தன் தவளை மனைவியின் தேவைகளை அறிந்து நிறைவேற்றவும், நலத்தை அறிந்துக் கொள்ளவும் செய்தான்.

அரண்மனைக்குச் சென்று தன் பெற்றோரிடம், "என் மனைவி மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவளாக இருப்பதால் சில நாட்கள் கழித்து அவளை அரண்மனைக்கு அழைத்து வருகிறேன் அது வரை இங்கிருந்து யாரும் அங்கே செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டான்.

அதைக் கேட்ட அவன் அண்ணன்கள் அவன் காது படவே கிண்டல் செய்தனர். "யாரோ ஒரு காட்டுவாசி பெண்ணை திருமணம் செய்து இருப்பான் போலிருக்கு, அதனால் தான் அவள் காட்டை விட்டு நாட்டுக்கு வர கூச்சப் படுகிறாள்"என்று கூறி கெக்கலித்ததை கேட்ட நரேந்திரன் "இவர்கள் இப்போதே இப்படி பேசுகிறார்களே..... என் மனைவியோ பெண் அல்ல, காட்டின் தவளை என தெரிய வரும் போது என்னென்ன பேசுவார்களோ?" என எண்ணி மிக வருந்தினான்.

இப்படி சில பல நாட்கள் கழிந்த பின் மன்னரின் உடல் நிலை திடீரென்று மிக மோசமாகவே அடுத்த மன்னருக்கான தேர்வை நடத்த வேண்டிய முக்கியமான நேரம் வந்தது.

அந்நாட்டின் சட்ட திட்டத்தின் மேலும் ,3 போட்டிகள் குறித்தும் மூத்த இளவரசர் வீரேந்திரனுக்கு மிகவும் அதிருப்தியாக இருந்தது. மற்ற நாடுகளைப் போல இருந்திருந்தால் அவர் மூத்த மகனாக இருப்பதன் காரணமாகவே உடனே மன்னர் பதவியில் அமர்ந்து இருக்க கூடும். இப்போதோ தன் தம்பிகள் இருவரோடும் போட்டிகளில் ஜெயிக்க வேண்டிய நிர்பந்தம் , ஒருவேளை தோற்று விட்டால்......என்னும் எண்ணம் அவரை அலைக்கழித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.