Chillzee சமையல் குறிப்புகள் - அவல் புலாவ் – நந்தினி
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
அவல் - 2 கப்.
காய்கறிகள் (உங்கள் விருப்பத்திற்கேற்ப - பச்சை பட்டாணி , குடை மிளகாய், கேரட், காலிஃபிளவர், காளான், பீன்ஸ் , முட்டைக்கோஸ், ஸ்ப்ரிங் ஆனியன்) - 1 கப்.
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி – அலங்கரிக்க
ஜீரகம் - 1/2 டீ ஸ்பூன்.
மிளகாய் - 3.
பிரிஞ்சி இலை 4.
உப்பு - உங்கள் சுவைக்கு ஏற்ப.
நெய் - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்).
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
துருவிய சீஸ் - அழகுபடுத்த 2 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்).
மசாலா:
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்.
கொத்தமல்லி தூள் - 1/2 டீ ஸ்பூன்.
மிளகாய் தூள் - உங்கள் சுவைக்கு ஏற்ப.
மிளகு - விரும்பினால்.
கரம் மசாலா - 1/2 டீ ஸ்பூன் (விரும்பினால்).
செய்முறை
அவலை தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். எண்ணெய் சூடான உடன் ஜீரகம், பிரிஞ்சி இலை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் பூண்டு சேர்த்து, சில நொடிகள் வதக்கியப் பின், வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியப் பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு காய்கறிகளைச் சேர்த்து இன்னும் சிறிது நேரம் வதக்கவும்.
இப்போது கரம் மசாலா தவிர மற்ற அனைத்து மசாலாவையும் சேர்க்கவும். காய்கறிகள் மசாலாவுடன் கலக்குமாறு நன்றாக வறுக்கவும்.
பின்னர் இறுதியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
காய்கறி நன்றாக வேகும் வரை வதக்கவும். பின் அவல் சேர்த்து, மசாலா கலவையுடன் நன்றாக கலக்கவும்.
இப்போது கரம் மசாலாவைச் சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
அவல் மென்மையாக மாறவில்லை என்றால் சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்க்கவும்.
தேவை என்றால் சிறிது நெய்யும் சேர்க்கலாம்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். விருப்பம் இருந்தால் துருவிய சீஸும் தூவலாம்.
புதினா, கொத்தமல்லி துவையல் அல்லது தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும்.