எனக்கு பிடித்தவை - 17 - விசிறி வாழை
ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை சாவி அவர்கள் எழுதிய விசிறி வாழை எனும் கதை.
1990க்களில் சென்னை வானொலியில் மாலை நேரத்தில் ஒரு நாவலை தொடர்கதைப் போல சிறு சிறு அத்தியாயங்களாக தினமும் தொடர்ந்து வாசிப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் கேட்ட முதல் கதை இந்த விசிறி வாழை.
என்ன கதை, எதைப் பற்றி என்று எதுவும் தெரியாமல் கேட்டு எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒரு கதை இது.
கதை:
நாற்பத்தி ஏழு வயதாகும் பார்வதி சாரதாமணிக் கல்லூரியின் பிரின்சிபால். அவளுடைய அண்ணன் மகன் ராஜா பார்வதியின் ஆதரவில் வளர்கிறான்.
சேதுபதி மனைவியை இழந்தவர். அவருடைய மகள் பாரதி சாரதாமணிக் கல்லூரியில் படிக்கிறாள். ராஜா பாரதியை விரும்புகிறான்.
கல்லூரிக்கு நன்கொடை கேட்டு சேதுபதியை சந்திக்கும் பார்வதி அவர் வசம் ஈர்க்கப் படுகிறாள். பல வருடங்களுக்கு முன் தன்னை பெண் பார்த்து விட்டுப் போன சேதுபதி அவர் தான் என்று பார்வதி தெரிந்துக் கொள்கிறாள்.
பார்வதியைப் போலவே சேதுபதிக்கும் அவள் மீது அன்பு ஏற்படுகிறது. இத்தனை வருடங்களுக்கு பின் தன் மனதில் ஏன் இந்த சலனம் என்று யோசிக்கிறார்.
பார்வதி சேதுபதி காதல் அவரவர் மனதிலேயே ரகசியமாக வளர்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துக் கொண்டால் உலகம் என்ன பேசும் என்ற யோசனையும் அவர்களுக்குள் இருக்கிறது.
பார்வதி சேதுபதி காதல் என்ன ஆனது, அதே நேரம் பாரதி, ராஜா காதல் வெற்றிப் பெற்றதா என்பதை கதை சொல்கிறது.
ஒருவேளை கதையை கேட்பதற்கு முன் கதையின் சுருக்கம் தெரிந்திருந்தால் கதையை கேட்காமல் கூட இருந்திருப்பேன். அப்படி பட்ட ஒரு வித்தியாசமான கதையை நமக்கு பிடித்ததுப் போல எழுதி இருப்பது சாவி அவர்களின் மிகப் பெரிய வெற்றி.
ராஜா பாரதி காதலை விட சேதுபதி பார்வதி காதல் வெற்றிப் பெற வேண்டும் என்று தான் கதை கேட்கும் போது தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு சேதுபதி, பார்வதி அன்பு என்னையும் கவர்ந்தது.
கதையை கேட்டு முடித்து தோராயமாக 25 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் அது என் நினைவில் நின்று எனக்குப் பிடித்த கதையாக இருப்பது கதை நடையின் வெற்றிக்கு சான்று.
ஒவ்வொரு முறை இந்தக் கதையைப் பற்றி யோசிக்கும் போதும், முடிவை மாற்றி இருந்திருக்கலாமோ என்ற கேள்வி எனக்கு தோன்றும். அதுவும் கூட சாவி அவர்களின் பாத்திர படைப்புக்கு கிடைத்த வெற்றியே.
வித்தியாசமான மனதை கவரும் காதல் சுற்றிய கதை.
வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நன்றி!
நந்தினி
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:1141}