05. எனக்கு பிடித்தவை - ஜனனம்!

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் இங்கே எடுத்துக் கொண்டுள்ள கதை வாஸந்தி அவர்கள் எழுதிய ஜனனம் எனும் கதை.
கதை:
வட இந்தியாவில் எங்கிருந்தோ கிளம்பி சுற்றுலா வந்த பேருந்து ஒன்று பலத்த மழையில் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்து போக ஒரே ஒரு பெண் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறாள்.
அவளை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அந்த மருத்துவமனையின் உரிமையாளனும், டாக்டருமான ஆனந்திற்கு அவள் மீது முதல் பார்வையிலேயே ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.
மயக்கத்தில் இருந்து கண் விழிப்பவளுக்கு அம்னீஷியாவால் பழைய நினைவுகள் மறந்து போய் இருக்கிறது. தன்னுடைய பெயரும் கூட நினைவில்லாமல் இருப்பவளுக்கு 'லாவண்யா' என பெயர் வைக்கிறான் ஆனந்த்.
நினைவில்லாமல் ஒரு அழகிய இளம் பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்துக் கொண்டு பொய்யாக அன்பு பாராட்டி வருபவர்களிடம் இருந்து காவலாக நின்று அவளை காக்கிறான் ஆனந்த்.
அதே ஊரில் தனக்கு சொந்தமாக இருக்கும் வீட்டில் அவளை தங்க வைத்து, அவனுடைய அம்மா மங்களம் நடத்தும் பள்ளியில் ஆசிரியையாக வேலையும் வாங்கி தருகிறான்.
ஆனந்தை போலவே லாவண்யாவின் மனமும் மெல்ல ஆனந்தின் பக்கம் ஈர்க்கபடுகிறது. தான் யார், கடந்த காலம் என்ன என்று எதுவும் தெரியாமல் இது போல் மனதை அலைபாய விடக் கூடாது என்று மனதை கட்டுபடுத்த முயல்கிறாள் அவள்.
ஆனந்திற்கு லாவண்யாவின் மீது இருக்கும் அன்பை புரிந்துக் கொள்ளும் மங்களம் அவனுக்கு லாவண்யாவையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். ஆனந்தும் லாவண்யாவிடம் மனம் விட்டு பேசி அவளின் சம்மதத்தையும் பெறுகிறான்.
விரும்பிய பெண்ணை மணம் முடிக்க போகும் மகிழ்ச்சியில் வானத்தில் பறக்கிறான் ஆனந்த்.
ரகுபதி தன் மனைவி உமாவை அகமதாபாத்தில் விட்டு விட்டு வேலை காரணமாக அமெரிக்கா செல்கிறான். சில மாதங்கள் கழித்து அவளும் அவனுடன் அமெரிக்காவில் வந்து இணைந்துக் கொள்வதாக திட்டம்! ஆனால் தென்னிந்திய சுற்று பயணம் சென்ற உமா வீடு திரும்பவில்லை, எந்த செய்தியும் இல்லை என்பதை அறிந்துக் கொண்டு பதறி போய் இந்தியா திரும்புகிறான் ரகுபதி.
எத்தனை முயன்றும் உமாவை பற்றிய செய்தி எதுவும் கிடைக்காமல் கலங்கி இருப்பவனுக்கு, ஆனந்தின் ஊரில் நடந்த விபத்தை பற்றியும் அதில் ஒரே ஒரு பெண் பிழைத்திருப்பதை பற்றியும் தெரிய வருகிறது. அந்த பெண்ணுக்கு அம்னீஷியா இருப்பதை தெரிந்துக் கொண்டு அது ஒருவேளை உமாவாக இருக்குமோ என்ற நப்பாசையில் ஆனந்திற்கு கடிதம் அனுப்புகிறான்.
ரகுபதியின் கடிதத்தை படிக்கும் ஆனந்த் திகைத்து போகிறான்! கடிதத்தில் ரகுபதி வர்ணித்திருப்பது அவனுடைய லாவண்யாவையே தான் என அவனின் உள் மனம் சொல்கிறது!
திகைத்து போகும் ஆனந்த், லாவண்யாவின் மீது அவனுக்கு இருக்கும் காதலால், ரகுபதிக்கு பதில் சொல்லாமல் விட்டுவிடலாமா என தோன்றும் எண்ணத்தை கஷ்டப் பட்டு அடக்கி, ரகுபதியை தன்னுடைய ஊருக்கு வந்து லாவண்யாவை பார்த்து அடையாளம் தெரிந்துக் கொள்ள அழைக்கிறான்.
லாவண்யா இருக்கும் ஊருக்கு வரும் ரகுபதி, வழியில் காதில் விழும் உரையாடல்களின் மூலம் டாக்டர் ஆனந்திற்கும், அம்னீஷியாவில் இருக்கும் லாவண்யாவிற்கும் திருமணம் நடக்க போவதாக ஊரில் பேச்சு பரவி இருப்பதை அறிகிறான்.
மனதில் சலனத்துடனே லாவண்யா தங்கி இருக்கும் வீட்டை அடைபவன், அங்கே இருப்பவள் தன் மனைவி உமாவே தான் என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறான்.
ஆனால், லாவண்யா அவனை யாரென்று தெரிந்துக் கொள்ளாமல், 'மிஸ்டர் ரகுபதி' என்று மூன்றாம் மனிதனாக அழைக்கிறாள்.
ரகுபதி திகைத்து போகிறான்!
லாவண்யாவிற்கு ஆனந்தின் மீது இருக்கும் அன்பை அவளின் பேச்சின் மூலம் அறிந்துக் கொண்டு மேலும் திகைத்து போகிறான்!
லாவண்யா, தான் உமா என்பதை அறிந்துக் கொண்டு ரகுபதியுடன் சென்றாளா இல்லை தற்போது தன் மனதில் இருக்கும் ஆனந்தை திருமணம் செய்துக் கொண்டாளா என்பதை தெரிந்துக் கொள்ள ஜனனம் கதையை படியுங்கள்.
சற்றே சிக்கலான கதையை ஒருவரின் மனமும் நோகாத வண்ணம் இதை விட மென்மையாக ஆனால் அழுத்தமாக சொல்ல இயலுமா என்று தெரியவில்லை.
வாஸந்தியின் அழகிய நடையில், ஆனந்த், லாவண்யா, ரகுபதி, மங்களம் என அனைவரும் நம் மனதில் நிஜ வாழ்வில் காணும் பாத்திரங்களை போல் பதிந்து விடுகிறார்கள்!
கதையின் முடிவும் அதை தொடர்ந்து வரும் கேள்விகளும் நம் மனதில் மேலும் பல நாட்கள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த கதையில் நிறைய இடங்களில் எடுத்துரைக்கக் கூடிய நல்ல கருத்துகளை சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்...
எனக்கு பிடித்த சில வரிகள் இதோ...
* தியாகம் செய்ய தெரிஞ்சவாளுக்கு தான் அன்பு செலுத்தவும் தெரியும்
* ஒரு ரோஜாவை எப்படி கூப்பிட்டா என்ன! அதோட அழகு குறைஞ்சு போயிடுமா...........
* நம் மனசு தான் நமக்கு ஊன்றுகோல்
* ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்குன்னு தோணித்துன்னா அதைச் சமாளிக்குற வழியைப் பார்க்கனும்....
இந்த கதையை இத்தனை அழகாக எந்த விதமான தவறான பார்வையும் இல்லாமல் நேர் நோக்குடன் வாஸந்தியை தவிர வேறு யாரேலேனும் எழுத முடியுமா தெரியவில்லை!
மனதை தொடும் காதல் கதை! வாய்ப்புக் கிடைத்தால் படித்து பாருங்கள்!
மீண்டும், வேறு ஒரு கதையுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்...
நன்றி!
நந்தினி
*Image is used for illustration purpose only! Chillzee.in doesn't claim any rights on this image.
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.