06. எனக்கு பிடித்தவை - ஆகவே செக்ஷன் 302 படி

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நான் இந்த முறை எடுத்துக் கொண்டுள்ள கதை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய ஆகவே செக்ஷன் 302 படி.
இந்த கதை கல்கி வார இதழில் தொடர்கதையாக வந்த போது ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள்.
இந்திய சட்ட பிரிவு 302 என்பது கொலை குற்றத்திற்கான பிரிவு. இந்த கதையில் கொல்ல பட போவது யார், கொலை செய்ய போவது யார் என சரியாக ஊகியுங்கள்!
நீங்களும் கதையை படிக்கும் போது இந்த கேள்விகளுக்கான பதில்களை அனுமானிக்க முயற்சி செய்யுங்கள். சரியாக அனுமானித்தீர்களா என்பதை படித்து முடித்து விட்டு உங்களின் கருத்துக்களாக பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
கதை:
நிவிதா ஒரு துடி துடிப்பான இளம் பெண். தந்தை இல்லாத தன் குடும்பத்தின் தலைவியாக இருந்து அம்மா மற்றும் தன் இரண்டு தம்பிகளின் பொறுப்பை சுமப்பவள். அக்காவிற்கு குடும்ப பொறுப்பில் இருந்து ஒய்வு தர வேண்டும் எனும் ஆசையுள்ள அவளின் பெரிய தம்பி வித்யாசாகர் நிரந்தர வேலை தேடி சென்னையில் வசிக்கிறான்.
வெளி உலகிற்கு கோபம் நிறைந்த வீரமான பெண்ணாக தன்னை காட்டிக் கொள்ளும் நிவிதா உண்மையில் மென்மையான உள்ளம் கொண்டவள். வெளியே வீரமாக பேசி விட்டு மனதினுள் சரியா தவறா என குழம்பி தவிக்கும் குணமுள்ளவள்.
அவளுடைய மனக்கட்டுபாடுகளை மீறி அவளின் மனதில் காதல் எனும் தீபம் ஏற்றுகிறான் விக்னேஷ். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை செய்யும் விக்னேஷ் வேலை நிமித்தமாக திருச்சி வரும் போது ஏற்படும் நிவிதாவுடனான எதிர்பாராத சந்திப்பு அவர்களுள் காதலை தோற்றுவிக்கிறது.
விக்னேஷ் திருமணத்திற்கு அவசரப் படும் போதும், வித்யாசாகருக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருக்க சொல்கிறாள் நிவிதா. விக்னேஷும் அவளுக்காக சம்மதிக்கிறான்.
இந்நிலையில் நிவிதா பணி புரியும் அதே நிறுவனத்தில் வேலை உயர்வுடன் அவளை சென்னைக்கு பணி மாற்றம் செய்கிறார்கள். சென்னைக்கு வரும் நிவிதாவை வித்யாசாகர், விக்னேஷ் இருவருமே மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.
சென்னையில் இருக்கும் அலுவலகத்தின் மேனேஜர் ஷ்யாமை சந்திக்கும் நிவிதா, அவன் நல்லவன் என நம்புகிறாள். ஆனால் உண்மையில் ஷ்யாம் ஒரு பெண் பித்து பிடித்தவன். பலவந்தத்தை நம்பாமல் ஆசை வார்த்தைகள் சொல்லியும், இல்லையேல் இக்கட்டான சுழலில் பெண்களை நிறுத்தியும் தன் ஆசையை நிறைவேற்றி கொள்பவன்.
நிவிதாவின் மீது தன் கண்களை பதிக்கும் ஷ்யாம், மறைகமாக விலை உயர்ந்த பரிசுகள் மூலம் அவளை கவர முயல்கிறான். நிவிதா அது போல் பொருட்களுக்கு மயங்குபவள் அல்ல என்பதையும், அவளுக்கு விக்னேஷின் மீது இருக்கும் காதலையும் தெரிந்துக் கொள்பவன், அவளை அடைய அவள் அறியாமல் அவளுக்கு பின்னே ஒரு வலையை பின்ன தொடங்குகிறான்.
தங்களின் நிறுவனத்திற்கும் வேறு ஒரு நிறுவனத்திருக்கும் இடையே இருக்கும் வழக்கில் நிவிதா திருட்டுத்தனமாக எதிராளிக்கு உதவுவது போல் சாட்சிகளை தன் நண்பன் தீபக்கின் உதவியுடன் உருவாக்குகிறான்.
திடீரென ஒருநாள் தன் பெயருக்கு வரும் பெரிய தொகைக்கான காசோலை பார்த்து என்ன எது என்று புரியாமல் குழம்பி போகிறாள் நிவிதா. என்ன செய்வது என்று புரியாமல், ஷ்யாமிடம் தனக்கு வந்திருக்கும் காசோலையை தருகிறாள். தன் திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து மனதினுள் மகிழும் ஷ்யாம், அலுவலக நேரம் முடிந்த பின் அதை பற்றி மேலும் பேசலாம் என்கிறான். ஷ்யாமின் மீது உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருக்கும் நிவிதாவும் ஏற்றுக் கொள்கிறாள்.
அலுவலக நேரம் முடிந்து நிவிதா இருக்கும் அறைக்கு வரும் ஷ்யாம், அவளிடம் பேசியபடி அவளுடைய கைப்பையினுள் அந்த காசோலையை வைத்து, அதை மேஜையினுள் வைத்து பூட்டி சாவியை எடுத்து கொள்கிறான். அவனின் செய்கைகளை புரியாமல் பார்க்கும் நிவிதாவிடம் தன் உண்மையான முகத்தை காட்டுகிறான்.
தன் ஆசைக்கு இணங்காவிட்டால் அவள் அலுவலகத்தில் பித்தலாட்டம் செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டுகிறான்.
திகைத்து நிற்கும் நிவிதாவிற்கு ஒரு மணி நேர அவகாசம் கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்கிறான்.
தன் குடும்பம், விக்னேஷ், எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாக தோன்ற மனம் உடைந்து அழுகிறாள் நிவிதா. ஷ்யாமின் ஆசைக்கு இணங்கவும் மனமில்லாமல் அதற்காக குற்றத்தை சுமக்கவும் விரும்பாமல் குழம்புகிறாள்.
குழம்பும் நிவிதாவினுள் தன்னம்பிக்கை உள்ள நிவிதா மெல்ல வெளி வருகிறாள். ஒரு கயவனின் சூழ்ச்சிக்கு தான் ஏன் பழியாக வேண்டும் என்று கொதிப்பவள், மனதை நிதானமாக்கி ஷ்யாமின் சூழ்ச்சிக்கு பதில் கண்டுபிடிக்க முயல்கிறாள். புத்திசாலியான அவளுக்கு ஒரு எண்ணமும் தோன்றுகிறது.
முன்பு ஒருமுறை தன்னுடைய மேஜை சாவியை மறந்து விட்டு வந்த போது, அலுவலக சிப்பந்தி வேறு ஒரு அறையின் சாவி கொண்டு அதை திறந்தது நினைவுக்கு வருகிறது. உடனே அந்த சாவியை கண்டுபிடித்து மேஜையை திறந்து, அதில் தன் கைப்பையினுள் இருக்கும் காசோலையை எடுத்து தன் ஜாக்கெட்டினுள் வைத்து கொண்டு மேஜையை மீண்டும் பூட்டி வைக்கிறாள்.
ஒருமணி நேரம் கழித்து வரும் ஷ்யாமிடம், தன்னால் அவன் விரும்பியது போல் நடக்க இயலாது என்று சொல்லிவிட்டு அலுவலகத்தை விட்டு செல்கிறாள்.
கொதித்து போகும் ஷ்யாம், குமுறும் எரிமலையாக காவல் நிலையத்தில் நிவிதா மீது புகார் அளிக்கிறான். விடுதியில் இருக்கும் நிவிதாவை அழைத்துக் கொண்டு அலுவலகம் வரும் இன்ஸ்பெக்டரிடம், அவளின் மேஜையில் அவள் வாங்கிய லஞ்ச காசோலை இருப்பதாக சொல்கிறான்.
மேஜை திறக்கப்பட, அதில் காசோலை இல்லை!
கேள்வியாக பார்க்கும் இன்ஸ்பெக்டரிடம், ஷ்யாம் தன்னை அசிங்கப் படுத்த வேண்டுமென்றே இப்படி புகார் அளித்ததாக சொல்கிறாள் நிவிதா. ஷ்யாம் கோபத்தை காட்ட இயலாமல் அவமானத்துடன் குமைகிறான்.
நிவிதாவின் மூலம் விபரம் அறிந்துக் கொள்ளும் விக்னேஷ் கொதித்து போகிறான். அவனை அடக்கும் நிவிதா, ஷ்யாம் தன் உடல் பலத்தை நம்பாமல், அறிவை நம்பி செய்த சதிக்கு தானும் அதே போல் பதிலளித்து விட்டதாக சொல்கிறாள்.
அரை மனதுடன் அதை ஏற்கும் விக்னேஷ், நிவிதாவின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறான். இருவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு நாள் குறிக்கிறார்கள்.
இந்நிலையில் ஷ்யாம் நிவிதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு தாடியுடன் சோகமாக அலைகிறான். ஒன்றிருமுறை அவனை பார்க்கும் விக்னேஷ் அவன் மனம் மாறி விட்டதாக நம்புகிறான். நிவிதாவிடமும் அவனை மன்னித்து விட சொல்கிறான். நிவிதாவிற்கு குழப்பமாக இருந்தாலும் விக்னேஷிற்காக ஷ்யாமை மன்னித்து கல்யாண பத்திரிக்கை அனுப்பி வைக்கிறாள்.
தனக்கு வந்திருக்கும் கல்யாண பத்திரிக்கை பார்த்து வில்லத்தனமாக சிரிக்கும் ஷ்யாமின் மனதை மாற்ற முயல்கிறான் தீபக். தான் நினைத்த எதிலும் வெற்றி பெறாமல் போனதில்லை என பொறுமும் ஷ்யாம் தன்னுடைய அடுத்த திட்டத்தை தொடங்குகிறான்.
கதையின் முடிவை தெரிந்துக் கொள்ள விரும்பாதவர்கள் கீழே உள்ள பத்தியை படிக்காமல் விட்டு விடுங்கள்! மற்றவர்கள் உங்கள் மவுஸை அதில் பதியுங்கள்.
இந்த கதையின் தனிச்சிறப்பு விறுவிறுப்பு + பட்டுகோட்டை பிரபாகரின் நடை.
குடும்பம், காதல், வில்லன் என்ற பரிச்சயப்பட்ட கதை களத்தில் விறுவிறுப்பு எனும் டானிக் கொடுத்து நம்மை கதையோடு ஒன்ற செய்து விடுகிறார் ஆசிரியர்.
குடும்பம், காதல், மர்மம், என பலவகையான ரசனையுள்ளவர்களை ஒரே கதையில் கவர்ந்திருப்பது கூடுதல் + .
கதையில் கொலை செய்யப்பட போவது யார், கொலையாளி யார் என சரியாக ஊகித்தீர்களா? கருத்துக்களில் பதிவு செய்யுங்கள்
.
நன்றி!
நந்தினி
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.