08. எனக்கு பிடித்தவை - உன் விழியில் நான் இருந்தேன்
ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் எழுத போவது மல்லிகா எழுதிய "உன் விழியில் நானிருந்தேன்" கதை பற்றி.
காதல் கதை பிடிக்காதவர்கள் இல்லை. அதிலும் குடும்ப பாங்கான வித்தியாசமான கதையை தவற விடவேக் கூடாது.
உன் விழியில் நானிருந்தேன் கதையும் அது போல ஒன்று.
கதை:
கதையின் நாயகி ஜனனி, ஒரு பிரபலமான டாக்டர். அவள் மிகவும் இரக்க குணமும் உள்ளவள்.
கணவனை இழந்த இளம் விதவையான அவள், கணவனின் பெற்றோருடனே வாழ்கிறாள்.
யாருமில்லாமல் அனாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்பதால் மாமனாரையும், மாமியாரையும், தன் சொந்த அம்மா அப்பாவாக நினைத்து வாழ்கிறாள். பெரியவர்களும் அவள் மீது சொந்த மகள் போலவே பாச மழை பொழிகிறார்கள்.
மருத்துவ தொழில் தவிர அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தும் ஜனனி, கிளினிக்கில் இல்லாத நேரங்களை அந்த இல்லத்திலேயே செலவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறாள்.
ஒரு நாள் அவளை தன் அம்மாவின் டாக்டர் என்ற விதத்தில் சந்திக்கும் பிரவீண் அவள் மீது கண்டதும் காதல் கொள்கிறான். அவள் விதவை என்று தெரிந்த பின்பும் அவனின் காதல் மாற்றமில்லாமல் நிலைத்திருக்கிறது.
பிரவீணின் தங்கை அமுதினியும் அம்மா மரகதமும் கூட அவனின் காதலுக்கு ஆதரவு கரம் நீட்ட, அவன் நேராக ஜனனியிடமே தன் காதலை சொல்கிறான்.
ஆனால் ஜனனி அவனின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
அமுதினி, மரகதம், அமுதினியின் காதலன் தீபக் என அனைவரும் அவளின் மனதை மாற்ற முயல, சிறிதும் அசையாமல் மனதை மாற்றாமல் இருக்கிறாள் ஜனனி.
ஆனால் பிரவீண் ஆசிரமத்திற்கு செய்யும் உதவியினாலும், மரகதத்தின் நல்ல மனதிற்காகவும் விருப்பம் இல்லாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்.
திருமணத்திற்கு பின் பிரவீணின் காதலை புரிந்துக் கொண்டு மெல்ல மனம் மாறுகிறாள்.
மிகவும் இனிமையான காதல் கதை! வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படித்து பாருங்கள்.
நன்றி!
நந்தினி
*Image is used for illustration purpose only! Chillzee.in doesn't claim any rights on this image.