எனக்கு பிடித்தவை - 12 - உயிர்ச் சுடர்

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, தமிழ்நிவேதா எழுதிய ' உயிர்ச் சுடர்' எனும் கதை.
வளர்ந்த முறையில் இருக்கும் வேறுபாடுகளை தாண்டி காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்கள், திருமணத்திற்கு பின் தங்களை அறியாமலே தாங்கள் வளர்ந்த முறையை விரும்புவதும், அதற்காக ஏங்குவதும் எப்படி அவர்களின் திருமண வாழ்க்கையை புரட்டி போடுகிறது?
இந்த வேறுபாடுகளை தாண்டி உண்மையான அன்பும் காதலும் ஜெயிக்க முடியுமா?
இப்படி பல பல கேள்விகளுக்கு பதிலை கொடுக்கும் கதை இது!
கதை:
வைதீகமான குடும்பத்தை சேர்ந்தவள் நந்தினி. பெற்றோர் சதாசிவம் சாஸ்திரி, சுந்தரி தம்பதிகளின் ஒரே செல்ல பெண். சாந்த சொருபியான அம்மாவிற்கு அப்படியே எதிர்மறையான நந்தினிக்கு, பொறுமை ரொம்ப குறைவு. குடும்பத்தில் இருக்கும் கட்டுபாடுகளை எதிர்த்து போர் கொடி பிடிப்பவளும் கூட!
கதாநாயகன் சார்லஸ் கெமிலோ கடவுள் பக்தி மிகுந்த கிருஸ்த்துவ குடும்பத்தை சேர்ந்தவன். அண்ணன், தங்கை என உறவினர்களுடன் ஒன்றாக வாழும் இனிய குடும்பம் அவனுடையது!
கெமியும், நந்தினியும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார்கள். இருவருக்குமே சின்ன அளவில் ஈர்ப்பு ஏற்படுகிறது.
படிப்பை முடிக்கும் நந்தினி, பெற்றோரிடம் சொல்லாமல் சிங்கப்பூரில் வேலை தேடிக் கொள்கிறாள். அவளை தடுக்க நினைக்கும் பெற்றோரை எதிர்த்து, போராடி வெளி நாட்டிற்கு கிளம்புகிறாள்.
அங்கே அலுவலகத்தில் மீண்டும் கெமியை சந்திக்க நேர்கிறது. இருவரிடையே மெல்ல பரிச்சயம் தோன்றி, அது காதலாக மலர்கிறது.
இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அங்கேயே திருமணமும் செய்துக் கொள்கிறார்கள்.
பின் பெற்றோரிடம் தங்கள் திருமணத்தை பற்றி சொல்ல, இரண்டு குடும்பமும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அந்த எதிர்ப்பை மீறி தங்களின் வாழ்க்கையை தொடங்கும் நந்தினி – கெமியின் வாழ்க்கை இனிமையாக செல்கிறது.
சந்தோஷமாக சென்றுக் கொண்டிருக்கும் அவர்களின் வாழ்வில் ஸ்பீட் ப்ரேக் போட்டது போல எதிர்பாராத விபத்தில் சிக்கி கெமியின் காலில் பிராக்ச்சர் ஏற்படுகிறது.
கெமிக்கு அடிப்பட்ட செய்தி கேட்டது முதலே நந்தினியின் மனம் அவளையும் அறியாமல் அவள் அறிந்த தெய்வங்களை வணங்க ஆரம்பிக்கிறது. அங்கே இருக்கும் பல கோவில்களுக்கு செல்பவள் கெமிக்கு சரியான உடன் அர்ச்சனை செய்வதாகவும் வேண்டிக் கொள்கிறாள். இதை எல்லாம் கெமியிடம் பகிரவும் செய்கிறாள்.
திடீரென கெமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
ஏன் என்ன என்று புரியாமல் நந்தினி குழம்ப, கெமியின் மனம் அவனின் பெற்றோர், சகோதரர்கள், அவனுக்கு பிரியமான உணவு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நினைத்து ஏங்க தொடங்குகிறது.
இதை புரிந்துக் கொள்ளாமல் கோவிலுக்கு செல்வதை தொடர்ந்து தன் வாழ்வில் அங்கமாக்கி கொள்கிறாள் நந்தினி.
சில நாட்கள் இப்படியே செல்ல, திடீரென நந்தினியிடம் சொல்லாமல் மும்பைக்கு மாற்றல் வாங்கி கொண்டு செல்கிறான் கெமி.
செல்லும் முன் அவளுக்கு அனுப்பி இருக்கும் ஈமெயிலில், அவர்கள் இருவரிடையே இப்போது வேர் விட தொடங்கி இருக்கும் வித்தியாசங்களை பற்றி சொல்பவன், இருவரும் பிரிந்து இருப்பதே சரி என்று முடிக்கிறான்.
அவனின் ஈமெயிலை படித்த பின்பே தன்னுடைய பக்திகரமான செயல்கள் கெமியை தனிமையாக உணர வைத்திருப்பதை தெரிந்துக் கொள்ளும் நந்தினி என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறாள்.
தொடர்ந்து அங்கே இருக்க மனம் வராமல், அடிப்பட்ட மனதுடன் அம்மாவின் அரவணைப்பிற்கு ஏங்குபவள், விடுப்பு எடுத்துக் கொண்டு பெற்றோரை தேடி செல்கிறாள்.
என்ன இருந்தாலும் ஒரே பெண்!, எனவே நந்தினியை அன்புடன் வரவேற்கிறார்கள் அவளின் பெற்றோர். ஒரு சில நாட்களுக்கு பின் அவளுக்கும் – கெமிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசல் பற்றி நந்தினி சொல்ல திகைத்து போனாலும் மகளின் வாழ்க்கையை சீர் செய்யும் முயற்சியில் இறங்குகிறார் சதாசிவம்.
கெமியின் வீட்டிற்கு மகளை அழைத்து செல்பவர் சிங்கப்பூரில் நடந்ததை எடுத்து சொல்லி, தன் வயதிற்கேற்ற பொறுப்பான பேச்சினால் கெமியின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்.
கெமியின் வீட்டில் தங்கும் நந்தினி அவர்களின் வாழ்க்கை முறையை, சம்பிரதாயங்களை தெரிந்துக் கொள்ள / பழகிக் கொள்ள முயற்சி செய்கிறாள். அவர்களின் அன்பை சம்பாதிக்கவும் செய்கிறாள்.
ஆனாலும் அங்கே சில சமயங்களில் அன்னியமாக, மனதளவில் தனிமையாக உணர்கிறாள்.
கெமியும் சிங்கப்பூரில் அப்படி தான் உணர்ந்திருப்பானோ என்று யோசிக்கவும் செய்கிறாள்.
இருந்தாலும், மும்பையில் இருப்பவனை தொடர்புக் கொள்ளாமலே இருக்கிறாள். அவனும் அவனின் பெற்றோரை தொடர்புக் கொள்ளாமலே இருக்கிறான்.
இப்படியே ஒரு மாதம் ஓடி விட, ஒரு நாள், சோர்த்து போய் அவனின் வீடு திரும்புகிறான் கெமி! நந்தினி அங்கே இருப்பதை சொல்லாமல் அவனை பிடி பிடி என் பிடிக்கிறார் அவனின் தந்தை.
அப்புறம் என்ன பிரிந்தவர்கள் பேசி சமாதானமாகி இணைகிறார்கள்!
இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை இவ்வளவு எளிதாக, அழகாக கையாள முடியுமா என்று நினைக்க வைக்கிறார் ஆசிரியர்.
கதையில் வரும் அனைவரும் நல்லவர்களாக இருக்க, நிஜ வாழ்கையில் இது சாத்தியமா என்ற சின்ன கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆனால் கதாநாயகியை நிறை-குறை உள்ளவளாக உருவாக்கி காட்டி இருப்பது பாராட்டுக்குரியது!
இந்த கதையை படித்த பின்பு இன்னுமொன்று புரிந்தது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் பல விதமான பார்வைகள் மற்றும் கோணங்கள்.
எத்தனை நியாயப் படுத்த முயன்றாலும் கெமி அப்படி சொல்லாமல் கொள்ளாமல் நந்தினியை விட்டு வந்தது சரியா என எனக்குள் ஒரு கேள்வி!
கதையில் கதாநாயகி அங்கே வருத்தப் பட்டாலும், கோபப் படவும் செய்வாள் என நான் எதிர்பார்க்க, அவளோ கெமியின் பார்வையில் நடந்ததை புரிந்துக் கொள்ள முயன்று அவனின் மனம் வெறுத்து போக அது தான் காரணம் என கண்டுபிடிப்பது, தெரிந்துக் கொள்வது எதிரபாராத ஒரு விஷயம்.
குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பும் பெற்றோர் அவர்களின் வாழ்வில் எத்தனை முக்கியம் என்பதையும் கதை அழகாக எடுத்து சொல்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நன்றி!
நந்தினி
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:1141}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.