எனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...
ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, முத்துலட்சுமி ராகவன் எழுதிய ' சந்தித்தேன்... சிந்தித்தேன்...' எனும் கதை.
ஒரு அழகிய காதல் கதையில் 'motivational factor' சேர்த்து அருமையான கதையாக கொடுத்திருக்கிறார் முத்துலட்சுமி மேம்.
கதை:
சாம்ராஜ்யமாக விரிந்திருக்கும் தன்னுடைய கம்பெனியில் ஏற்படும் சரிவை கண்டு துவண்டு போகும் ஆதித்யன் தற்கொலை செய்துக் கொள்ள கொடைக்கானல் வருகிறான்.
அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது திடுமென ஒரு பெண் அவனை சாமர்த்தியமாக காப்பாற்றுகிறாள்.
அவள் பெயர் நந்தினி, எம்.சி.ஏ மாணவி. சமயோசிதமாக பேசி ஆதித்யனை அவளின் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறாள்.
கலகலப்பான அவளின் பேச்சில் தன்னுடைய சொந்த பிரச்சனைகளை மெல்ல மறக்கிறான் ஆதித்யன்.
ஒரு வாரம் அவள் வீட்டில் தங்கி அவளின் குடும்பத்தினரோடு பழகுபவன், நந்தினியிடம் ஈர்க்கப் படுகிறான்.
அவள் வீட்டில் இருந்து அவன் கிளம்ப நினைக்கும் போது, ஆதித்யன் யார் என்று தெரிந்து வைத்திருக்கும் நந்தினி, அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசுகிறாள். அவளின் பேச்சில் கவரப்பட்டு, துவண்டு போய் ஓடி ஒளியாமல், எதிர்த்து நின்று போராட முடிவு செய்கிறான் ஆதித்யன்.
ஆதித்யன் – நந்தினி இருவரும் ஒருவரை ஒருவர் மனதினுள் விரும்பினாலும் அதை நேரே சொல்லிக் கொள்ளாமல் பிரிகிறார்கள்!
நந்தினியிடம் ஆதித்யனின் செல் போன் நம்பர் இருக்க, ஆதித்யன் அவள் தனக்காக காத்திருப்பாள் என மனம் சொல்வதை நம்பி, அவளிடம் செல்போன் நம்பரை கூட வாங்கிக் கொள்ளாமலே செல்கிறான்.
புத்துணர்ச்சியுடன் அலுவலகம் திரும்பும் ஆதித்யன் இரவும் பகலும் வேலை செய்து கம்பெனியை சரிவில் இருந்து மீட்கிறான்.
பதினைந்து மாதங்கள் ஓடி விட, நந்தினியின் வீட்டில் அவள் எத்தனை சொல்லியும் கேளாமல் திருமணம் நிச்சயிக்கிறார்கள்.
ஆதித்யன் தன்னிடம் நேராக காதலை சொல்லி இருக்காததால் குழம்பி போகும் நந்தினி, அவனின் செல்போனுக்கு அழைக்கிறாள்...
அப்போது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் ஆதித்யன் தெரியாத எண்ணில் இருந்து வரும் அந்த அழைப்பை ஏற்காததுடன், போனை ஸ்விட்ச் ஆஃப்பும் செய்து வைக்கிறான்.
திகைத்து போகும் நந்தினி, வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு சொல்லி கொள்ளாமல் கிளம்பி கன்னியாகுமரி சென்று ஒரு வேலையில் சேர்கிறாள்.
ஒருவழியாக தன் கம்பெனியை நல்ல நிலைக்கு கொண்டு வரும் ஆதித்யன், நந்தினியை தேடி கொடைக்கானல் செல்கிறான்.
அங்கே அவள் இல்லை என்பதை தெரிந்துக் கொண்டு திகைத்து போகிறான்.
அவளிடம் மனம் விட்டு பேசாததை நினைத்து அலுத்துக் கொண்டாலும், அவளை தேட தொடங்குகிறான். அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவும் செய்கிறான்.
கன்னியாகுமரியில் அவனை சந்திக்கும் நந்தினி அவன் மீதிருக்கும் கோபத்தில் பேசவும் மறுக்கிறாள்.
ஆதித்யன் எப்படி அவளை சமாதானம் செய்து திருமணம் செய்துக் கொள்கிறான் என்பது மீதிக் கதை!
முதல் பாதி கலகலப்பாக செல்கிறது என்றால் பிற்பாதி காதல் & ஊடலில் செல்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நன்றி!
நந்தினி
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:1141}