தீபாவளி சிறப்பு கீதம் சங்கீதம்....- 21 - தேவி
வணக்கம் நண்பர்களே.
இந்த தீபாவளித் திருநாளில் மீண்டும் ஒரு கீதம் சங்கீதத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
தீபாவளித் திருநாள் பற்றி தெரியாதவர்கள் இல்லை. நரகாசுரனை கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த போது தன் இறப்பை இந்த பூவுலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தான். அதனால் அறியாமை என்னும் இருள் நீங்க இறைவனின் திருவடியே கதி என்று உணர்த்தவே எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பகைவனுக்கும் அருளும் அவதாரங்கள் என்றால் அது வாமன, ராம, கிருஷ்ணா அவதராங்களே.
வாமன அவதாரத்தில் மகாபலி வதத்திற்குப் பின் அவனின் வேண்டுகோளுக்கு இணங்கி வருடம் ஒருமுறை தன் ராஜ்யத்திற்கு வந்து செல்ல கருணை செய்கிறார் மகாவிஷ்ணு. அதுவே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் அன்று பூக்கோலம் போட்டு அதில் விளக்கு ஏற்றி அந்த மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கிறார்கள் கேரள மக்கள்.
அடுத்து ராம அவதாரத்தில் இராவண வதம் நடந்தாகக் கூறப் படுவது விஜயதசமி அன்றே. அதையும் ஒரு பண்டிகையாகவேக் கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்நாளில் இராவண உருவம் செய்து அதை அம்பில் தீ வைத்து எரிக்கிறார்கள்.
கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுர வதத்திற்குப் பின் தீபாவளிக் கொண்டாடுகிறோம்.
மூன்று பண்டிகைகளின் ஒற்றுமை ஒளியை மையமாகக் கொண்டது.
நம் மனத்தில் உள்ள அறியாமை என்னும் இருள் நீங்க, இறை அருள் என்னும் ஒளியால் மட்டுமே சாத்தியம். இந்த விஷயத்தை உணர்த்துவதற்காகவே மூன்று பண்டிகைகளிலும் தீபம் முக்கிய இடம் பெறுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் புரட்டாசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு மஹாலய பட்சம் அமாவசை அன்று செய்கிறோம். வருடத்தில் பதினைந்து நாட்கள் நம் மூதாதையர்கள் பூமிக்கு வந்து தன் குலத்தைக் காப்பதாக நம்பிக்கை. அப்படி வரும் மூதாதையர்கள் மீண்டும் பித்ருலோகம் செல்வது ஐப்பசி அமாவசை அன்றுதான். அவர்களுக்கு வழிகாட்டவே தீபங்கள் ஏற்றுவதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.
வடஇந்தியர்களைப் பொருத்த்தவரை தீபாவளி என்பது மகாலக்ஷ்மியைப் போற்றும் நாள். அவர்கள் வீடுகளில் லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். அந்த திருவேங்கடனுக்கேக் கடன் கொடுத்தவர் குபேரன். தங்கள் வீட்டில் செல்வங்கள் நிறைந்து இருக்க குபேர பூஜையும் செய்கிறார்கள். வேறு சில சம்பிரதயாங்களும் ஒவ்வொரு பகுதியிலும் நடக்கிறது.