த்ரேதா யுகம், துவாபர யுகங்களில் ராமராகவும், கிருஷ்ணராகவும் அவதரித்து மக்களைக் காத்த மகாவிஷ்ணு இந்தக் கலியுகத்தில் திருவேங்கடமுடையானாக திருமலை திருப்பதியில் நின்று அருள் பாலிக்கிறான்.
அப்பேற்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமானின் அருள் போற்றும் பாடல் ஸ்ரீநிவாசத் திருவேங்கடமுடையான். பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய இந்தப் பாடல் ஹம்சாநந்தி ராகத்தில் பாடபட்டுளது.
ஸ்ரீ என்றால் மகாலக்ஷ்மி . நிவாஸ் என்றால் வாசம் செய்யும் இடம் என்றுப் பொருள். மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடம் அந்த மகாவிஷ்ணுவின் இதயம். அவனின் அருள் பெற மகாலக்ஷ்மியின் பெயர் கூறி, சங்கு, சக்கரதாரியான உன்னைத் தவிர எனக்கு அபயம் அளிப்பவர் யார் என்று பாடல் தொடரும்.
நிறைய பேர் பாடிக் கேட்டு இருக்கும் இந்தப் பாடலை இணையத்தில் தேடியபோது திருமதி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் பாடல் அதிகம் பகிரப் பட்டு இருந்தது. அவரின் குரல் மிகவும் மெல்லிய, குழைவான குரல். ஜெகன்னாதா என்ற ஆலாபனை ஆகா அருமை. இந்தக் குரலில் அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வந்திட மாட்டானோ அந்த திருமலை மாயவன்.
இந்த தீபாவளித் திருநாளில் நம் மன இருளை அகற்ற அந்த ஏழுமலையானின் திருவடி பற்றுவோம் இந்தப் பாடலோடு.
சில்சி வாசகர்கள், டீம், சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.
பாடல் வரிகளும், பாடல் லிங்கும் இதோ.
பல்லவி
ஸ்ரீநிவாச திருவேங்கட முடையாய்
ஜெயகோவிந்த முகுந்தா அனந்தா
அனுபல்லவி
தீனஷரண்யன் எனும்பெயர் கொண்டாய்
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்
சரணம்
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜகன்னாதா சங்கு சக்ர தரணே
திருவடிக்கபயம் அபயம் (உன்) ஜயா
மீண்டும் சந்திப்போம்.