ஏன் நடைபயிற்சி சிறந்தது?
உடற்பயிற்சிகளிலும் லேட்டஸ்ட் ட்ரென்ட் நிறைய இருக்கிறது. உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (High-intensity interval training), டிரையத்லோன் (triathlons), பவர் லிஃப்டிங் இப்படி எத்தனையோ.
ஆனால் தொடர்ந்து தினமும் வேகமான நடைபயிற்சி செய்வது நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த வழி என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
தனியாக நடைப்பயிற்சி என்று இல்லாமல், வேலைக்கு நடந்துச் செல்வது, கடைகளுக்குப் போக வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது என்று எந்த காரணத்திற்காக என்றாலும் நடப்பது மனிதர்களுக்கு மிகவும் சிறந்தது.
பெரியவர்கள்:
இங்கிலாந்தில் நடைப்பெற்ற ஒரு ஆய்வின் படி, தொடர்ந்து தினமும் மெதுவாக அல்லது வேகமாக நடைப்பயிற்சி செய்பவர்கள், அப்படி நடைப்பயிற்சி செய்யாதவ்ர்களுடன் ஒப்பிடும் போது இறப்பது 20 சதவிகிதம் குறைவு. அதே போல இருதய நோயால் அவர்கள் இறக்கும் அபாயமும் 24 சதவிகிதம் குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைப்பெற்ற இன்னொரு ஆய்வில், வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியில் ஈடுபடுவர்களின் இறப்பு சதவிகிதம் 20% குறைவு என்றும் சொல்லப் பட்டுள்ளது.
எனவே நடைபயிற்சி ஆரோக்கியத்தில் சிறந்த மேம்பாடுகளை ஏற்படுத்துகிறது.
இளம் வயதினர்:
நாம் அனைவரும் ஒரு நாளைக்கு 30 - 45 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்தாலே சிறந்த ஆரோக்கிய நலன்களை அடையலாம். நம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் இதை தவறாமல் செய்தால், நமக்கு வேண்டியே ஒரே உடற்பயிற்சியாக இது மாறி விடலாம்.
மனதிற்கும் நன்மை
நடைபயிற்சி செய்வது உடலுக்கு மட்டும் நல்லதல்ல, மனதிற்கும் தான். வீட்டை விட்டு வெளியே வந்து நடக்கும் போது புது மனிதர்களை சந்திக்கலாம், இயற்கையை ரசிக்கலாம். இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுப்படலாம்!
நல்ல தூக்கத்தை பெறவும் இது உதவுகிறது.