தொடர் - நலமறிய ஆவல்..!! - 08 - பனங்கற்கண்டு - வசுமதி
உச்சி வெயில் மண்டையை பிளக்க நம் சுட்டிப்பெண் தாத்தாப் பாட்டியுடன் வளவளத்தபடியே நுங்கை வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தது..
“தாத்தா.. அந்த பெரிய நுங்கை வெட்டிக் கொடுங்க..”
“குட்டிமா.. அது ரொம்ப பழுத்தது டா.. சாப்டா வயிறு கட்டிக்கும்..”
“அப்போ இந்த பழம் வேஸ்ட்டா..??”,என்று கேட்டாள் கண்ணை சுறுக்கியபடியே..
“இந்த பழம் வேஸ்ட் ஆகாது டா..”,என்ற தாத்தாவை புரியாமல் பார்த்த குட்டி,”எப்படி தாத்தா..??”
“இந்த பழத்தில் விதைகள் கிடைக்கும் குட்டிமா.. இந்த விதைகளை எடுத்து கொஞ்சம் பெரிய குழி தோண்டி அதுக்குள்ள இதை எல்லாத்தையும் போட்டு மண் போட்டு மூடி அதுக்குமேல் சாணத்தை போட்டு வெச்சிருவோம்..அப்புறம் ஒரு மாசம் விட்டு அந்த குழிய தூண்டுனா பனங்கிழங்கு கிடைக்கும்..”,என்றார் குட்டிக்கு புரியும் வகையில்..
“ஓ.. புரிஞ்சுது தாத்தா எனக்கு நுங்கு வண்டி செஞ்சு கொடுங்க..”
தாத்தா நுங்குவண்டி செய்யட்டும்.. நாம் அதற்குள் பனங்கிழங்கை பார்த்துவிட்டு வருவோம்..
பனங்கிழங்கை நீரில் இட்டு அவித்து உண்ணலாம்... சிலர் நெருப்பில் வாட்டிச் சுட்டுத் உண்பதும் உண்டு..
கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை.
இந்த ஒடியலை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம்.. அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும்.. புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம்..
ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன.. ஒடியலுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.. பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்..
இப்பொழுது இந்த ஒடியல் தமிழகத்தில் தயாரிக்கப் படுவதில்லை என்பது வருத்தத்துக்குறிய விஷயம்..
மாலை மங்கும் நேரம்..
“குட்டிமா.. இந்தாடா..”,என்றபடி பாட்டி குட்டியின் கையில் குட்டி மக்கை ஒப்படைத்தார்..
“பாட்டி..என்னதிது..??”
“பனங்கற்கண்டு பால்..”
“நம்ம பாத்தோமே.. அந்த பிக் ட்ரீ.. அதிலிருந்து கெடச்சுதா..??”
“ஆமாடா குடி..உடம்புக்கு ரொம்ப நல்லது..”,என்று அவளது தலையை லேசாக கலைத்து விட்டார்..
பனங்கற்கண்டு அல்லது கல்லாக்காரம்.. சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இது பனைநீர் அல்லது பதநீரைக் காய்ச்சிப் பெறப்படும் ஒரு பொருள்.. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன..
மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே.. ஆனாலும் அதை அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.. இயற்கையான இனிப்புப்பொருளான பனங்கற்கண்டு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது..
அன்றாடம் நாம் காலையில் கண் விழிக்கும் கணம் முதல் இரவு கண்ணுறங்கும் வரை (உண்ணும்/அருந்தும்) காபி, டீ அல்லது ஜூஸ், பிஸ்கட், சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் என இனிப்பு சார்ந்த எல்லாவகை உணவுப்பண்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது சர்க்கரையே..
இன்றைக்கு பெருவாரியான மக்கள் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருவதற்குக் காரணம் இந்தச் சர்க்கரையே.. ஆகவே சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டைப் பயன்படுத்துவோம்.. இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட நோயின் பிடியிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இதைப் பயன்படுத்துவோம்.. அதேநேரத்தில் பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றையும் பயன்படுத்தலாம்..
நமது முன்னோர் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சியே பயன்படுத்தி வந்தார்கள்.. இதனால் அவர்கள் தம் குரல்வளம் மாறாமல் இருந்ததோடு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல், காய்ச்சலின்போது வரக்கூடிய உடல் சூடு போன்றவற்றைத் தணிக்கும்.. குறிப்பாக இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து, தேய்ந்து வாடி ஒட்டிப்போன குழிவிழுந்த கன்னத்துடன் காட்சியளிக்கும் குழந்தைகளின் உடல்நிலையைச் சீராக்கி நல்ல சக்தியைத் தரும்..
இதன் பலனை அறிந்துகொண்டு குழந்தைப்பருவம் முதலே பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கக் கொடுத்து வர வேண்டியது தாய்மாரின் இன்றைய தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படி பாலுடன் சேர்த்துக் கொடுப்பதால் வெப்பத்தைத் தணிக்கும். சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களில் அவதிப்படுவோருக்கும் இதை அடிக்கடி கொடுத்து வந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் வெப்பம் தணியும்..