பொது - அச்சம் தவிர்! - ரவை
கொரோனா தொற்று, எதை தந்ததோ, பறித்ததோ, மரணபயத்தை அதிகரித்துவிட்டது!
இதிலே என்ன ஒற்றுமை எனில், இருப்பவனும் அஞ்சுகிறான், இல்லாதவனும் அஞ்சுகிறான்!
இருப்பவன், தன்னிடம் உள்ளதை இழந்து நஷ்டப்பட பயப்படுகிறான்.
அவனுக்கொரு கேள்வி!
இதுவரையில், பல யுகங்களில், எவராவது ஒருவர் தன்னிடம் உள்ளதை,மரணத்தின்போது, கொண்டுபோயிருக்கிறாரோ, இல்லை, இல்லை, இல்லை!
தான் மட்டுமே இழப்பதாக ஏன் நினைத்து வருந்தவேண்டும்?
உலகத்தையே வென்று தன் குடைக்கீழ் கொண்டுவந்த மாவீரன் அலெக்ஸாண்டரைப்பற்றி ஒரு கதை உண்டு!
தான் இறந்ததும், தன் உடலை புதைக்கும்போது, தன் இரு கைகளை மட்டும் வெளியே தெரியும்படி புதைக்கச் சொன்னானாம். ஏன் தெரியுமா?
உலகத்தையே கட்டி ஆண்டும் கொண்டு செல்வது, ஒன்றும் இல்லை என்பதை உலகுக்கு தெரிவிக்கவே!
உண்மைதானே! நாம் எதையும் கொண்டு வரவுமில்லை, எதையும் கொண்டு செல்லப்போவதும் இல்லை, பின் ஏது இழப்பு?
எப்படி வந்தோமோ, அப்படி செல்கிறோம்!
அதனால், இருப்பவனின் மரணபயம் தவறு! பயப்பட ஒன்றுமில்லை!
சொல்லப் போனால், இழக்க வேண்டியதை இழந்து அவன் விடுதலை பெற்று சுதந்திர மனிதனாகிறான்.
சரி, இல்லாதவன் ஏன் அஞ்சுகிறான்? அவன் என்ன சுகத்தை இங்கு கண்டான், போகிறபோது, அவற்றை இழந்துவிடுவோமோ என அஞ்சுவதற்கு?
அவனுக்கு, மரணம், தருகிறது, விடுதலை! பசி, பட்டினியிலிருந்து!
இவை யாவும் அவர்களுக்கு தெரியாதவை அல்ல; தெரிந்தும் இனமறியா பயம்!
ஏனெனில், மரணம் அடைந்ததும், தனக்கு என்ன ஆகப்போகிறது என்பது
தெரியாத காரணத்தால், ஒரு அச்சம்! அதையே, இனமறியா பயம் என்கிறோம்!
இந்த மர்மத்தைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்க விரும்பி விஞான அறிவிலும் ஆன்மீக ஞானத்திலும் முதிர்ச்சி பெற்றவர்கள் சொல்வதை அறிய முனைந்த போது, என் கண்ணில் பட்டது ஒரு கட்டுரை!
டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே மாதம் ஒன்பதாம் தேதி இதழில் ஒரு கட்டுரை வெளி வந்திருந்தது.
அந்தக் கட்டுரையின் ஆசிரியர், திரு டாஜி கமலேஷ் படேல்!
அவர் எழுதியுள்ளதை சுருக்கமாகத் தருகிறேன்:
யோகா, விஞானம் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற ராமசந்திரா என்பவர், தனது
புத்தகம், "நிரந்தர சத்தியம்" என்பதில், விவரமாக கூறுவது, 'காலம் நம்மை உருவாக்குகிறது, அதே காலமே அழிக்கிறது. இது தவிர்க்க முடியாத விதி' எனச் சொல்லி, மரணத்தின் போக்கை படிப்படியாக விவரிக்கிறார்.
மனிதனின் உடலுக்குள் இருக்கிற ஆன்மா, தான் உள்ள இடத்திலிருந்து
மேலே எழுகிறது!
ஐம்பூதங்களில் ஒன்றான நிலம், விலகுகிறது!
( மூலாதாரத்திலிருந்து விலகுகிறது), விலகியதும், அடுத்தது, நீர் பிரிவை அடைகிறது. (சுவாதிஷ்டாஸ்தானம்)
அதாவது நிலம் தண்ணீர் பகுதியில் கரைகிறது.
இதை எப்படி தெரிந்து கொள்வது? மரணம் அடைந்தவரின் உடல் சில்லிட்டுவிடும். தொட்டுப் பார்த்து அறியலாம்.
பிறகு, அங்கிருந்தும் விலகி அக்னி பகுதி அடைகிறது. ( நாபி சக்கரம்) இதை எப்படி அறிவது? அடி வயிற்றில் சூடு வரும்.
பிறகு இருதயப் பகுதியில் காற்றாகிறது (அனாஹதா அல்லது ஹிருதய சக்கரம்) அப்போது உடல் நடுங்கும்.
அங்கிருந்து தொண்டை பகுதிக்கு சென்று ஈதர் ஆகிறது. தொண்டையில் ஒரு சத்தம் வரும்.
இப்போது, பஞ்ச பூதங்களும் கரைந்துவிடுகிறது.
தொண்டையில் சத்தம் வந்ததும், என்ன நடக்கிறது?
தனிநபரிடம் இருந்த பிரும்மத்த்துவம் முற்றிலும் கரைந்து, எங்கிருந்து வந்ததோ அந்த விராட் பகுதி யுடன் கலந்துவிடுகிறது.
அந்த வினாடியில் கண்கள் பார்வை இழக்கின்றன. நம் ஆன்மா, கண், காது, வாய்வழியாக, வெளியேறி மூலத்துடன், வந்த இடத்துடன், கலக்கிறது.
ஆன்மா விடுதலை அடையுமானால், தலையின் பின்புறம் உள்ள பிரும்மரந்திரா எனும் பகுதி மூலமாக வெளியேறும்.
அதனால்தான் அந்தக் காலத்தில் ஆண்களும் 'குடுமி' வளர்த்தனர்.
சரி, விடுதலை பெறாத மற்ற ஆன்மாக்கள் அதனதன் கர்மாக்களின்படி, வெவ்வேறு நிலைகளில், நிற்கும்.
உறவின்மீதும் செல்வத்தின்மீதும் பற்று அதிகம் உள்ளவர்கள் மீண்டும் மனிதப் பிறவி எடுப்போம்.
இந்த சுழற்சி, நம் ஆசைகள் முற்றிலும் கரைகிற வரையில் திரும்பத் திரும்ப, நடக்கும்.
விடுதலை அடைந்த ஆன்மாக்களும், விரும்பினால், மனிதப்பிறவி
எடுக்கும்.
மரணத்தின்போது நடப்பது இதுதான்.
நரகத்தில்,கொதிக்கும் எண்ணெய் வாணலியில் வதைபட்டு வலியில் துடிப்போமோ என்று அஞ்சற்க!
பிறக்கும்போதே, இறப்பும் கூட வருகிறது. ஒரு கம்பின் இரு முனைகள் போல! ஒரு முனை பிறப்பு, மறுமுனை இறப்பு!
ஒரு முனையுள்ள கம்பு உண்டா?
அதனால், இயல்பாகிற நடக்கிற ஒரு சம்பவத்துக்காக நாம் ஏன் பயப்படவேண்டும்?
நடைமுறையிலே, ஒவ்வொரு நாளும் நாம் பிறக்கிறோம், அன்றே இறக்கிறோம்......மீண்டும் மறுநாள் பிறக்கிறோம்....
அதனால், அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை!
'காலா! என் அருகே வாடா- உனை நான் புல்லென மதிக்கிறேன், என் காலால் உதைக்கிறேன்.....' என்றான் பாரதி!
காலம் கழிந்தால், மீண்டும் வராது, அதனால் ஒவ்வொரு வினாடியும் மகிழ்வுடன் வாழ்வோம்!