பொது - காலம் மாறி விட்டதா? இல்லை அம்மாக்கள் மாறி விட்டார்களா?
சமீபத்தில் கதாநாயகன் பெண் வேடத்தில் வருவதாக ரெமோ படம் வந்திருந்தது. அதில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் பெண் வேடம் அணிந்து கதாநாயகியை ஏமாற்றுவது நாயகனுடைய அம்மாக்கு தெரிய வரும். அப்போது அவர் சொல்வார்,
“நீ தப்பே செய்யலைடா. அந்த பொண்ணு மேல வச்சிருக்க அன்பினால தான பொய் சொன்ன, அதில் தப்பே இல்லை.”
இந்த படத்தை பார்த்து பல நாட்கள் ஆகி விட்ட போதும் மனதுக்குள் ஒரு கேள்வி ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த திரைப்பட அம்மா சொன்னது சரி தானா???
காதல் என்றால் இரண்டு மனம் சம்மந்தப் பட்டது தானே???
இரண்டு பேர் ஒரே போல அன்பு செலுத்தினால் வருவது தானே காதல்!
பிறகு ஒருவருக்கு பிடித்ததற்காக அவர் மற்றவரிடம் எந்த பொய் வேண்டுமென்றாலும் சொல்லலாம், செய்யலாம் என்றால் அது எப்படி நிஜ காதல் ஆகும்?
பொய்யில் தொடங்கும் எந்த விஷயமாவது நிலைத்திருந்து பார்த்திருக்கிறீர்களா?
அப்படி பொய் சொல்லி ஏமாற்றி காதலை உருவாக்கி விட்டு, அந்த பெண் உண்மையை அறிந்துக் கொண்டு கோபப் படும் போது, என்னை விட அதெல்லாம் தான் உஅனக்கு பெரிதா? என்று அந்த பெண்ணையே எமோஷனல் ப்ளாக்மெயில் செய்வது எல்லாம் எந்த விதத்தில் நியாயம்?
நேரடி தொடர்பு இல்லை என்றாலும், இந்த காட்சி நினை வரும் போதெல்லாம், சிறு குழந்தைகளுக்கு சொல்லும் ‘பென்சில் திருடி வரும் மகனின் கதை’ தான் நினைவுக்கு வருகிறது.
குழந்தைகள் தவறு செய்தால் திருத்துவதும், இது தவறு என்று சுட்டிக் காட்டுவதும் பெற்றவரின் கடமை தானே?
ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு பாசம் என்ற பெயரில் இன்னொரு பெண்ணிடம் பொய் சொல்லி ஏமாற்றுவது சரி என்று சொல்லும் அம்மாவை எப்படி எடுத்துக் கொள்வது?
திரைப்படம் என்பது நிஜ சமுதாயத்தின் பிரதிபலிப்பு தானா??
100% ஆம் என்று சொல்லி விட முடியாது.
ஜனரஞ்சகமான படங்கள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிசிற்காக எடுக்கப் படுகின்றன. இதை அந்த துறையில் இருப்பவர்களின் பார்வையில் இருந்து பார்த்தால் தவறு என்றும் சொல்லி விட முடியாது.
திரைப்பட துறையை நம்பி பல நூறு குடும்பங்கள இருக்கின்றன.
படம் நன்றாக வசூல் செய்தால் மட்டுமே அவர்களுக்கு வாழ்வாதாரம் உண்டு.
ஆனால் அதற்காக ‘அம்மா’வையும் இந்த அளவிற்கு இறக்கி காட்ட வேண்டுமா?
சில வருடங்களுக்கு முன் வந்த புது நெல்லு புது நாத்து படத்தில் வரும் காட்சி நினைவுக்கு வருகிறது.
கணவனை ஏமாற்றி சாகடித்து விடும் பண்ணையாரின் மகளை காதலிப்பதாக ஏமாற்றி தன்னுடைய மகன் எல்லை மீறி நடந்துக் கொண்டான் என்று தெரிந்துக் கொள்ளும் அம்மா, அவனை திட்டி நீ செய்தது தவறு என்று எடுத்து சொல்வது.
அதுவும் ஜனரஞ்சக படம் தான். சமுதாய புரட்சிக்காக எடுத்த படம் எல்லாம் இல்லை.
ஆனாலும் ‘அம்மா’ என வரும் போது, ஒரு நேர்மையான உருவம் தான் கண் முன் வருகிறது.
நிஜத்தில் நமக்கு தெரிந்த அம்மாவிற்கு சரிசமமாக இருக்கும் சினிமா அம்மாவின் உருவம்!
இன்றைய சினிமா அம்மாக்கள் மாறி போனதன் காரணம் என்ன?
காலம் மாறி போய் விட்டதா? இல்லை நிஜமாகவே அம்மாக்கள் மாறி போய் விட்டார்களா!
புரியாத புதிர் தான்!
{kunena_discuss:747}