ஜலமும்...(துளசி)தளமும்... போதுமே... - தங்கமணி சுவாமினாதன்
மதுராவில் கண்ணனின் பிறந்த நாள் வர இன்னும் சில நாட்களே இருக்க ருக்மணியும் சத்யபாமாவும் பிறந்த நாள் பரிசாக கணணனுக்கு என்ன கொடுத்து அசத்தலாம்?என யோசித்தனர்.அப்படிக் கொடுக்கும் பரிசு ருக்மணி கொடுப்பதைவிட மதிப்புக் கூடுதலாய்...கண்ணனின் மனதைக் கவர்வதாய்,அவன் மிகவும் விரும்பக்கூடியதாய் இருக்கவேண்டுமென சத்யபாமாவும்..சதயபாமாவின் பரிசைவிட தனதே பிரமாதமாய் இருக்க வேண்டுமென ருக்மணியும் ஒருவர் எண்ணுவதை மற்றவர்அறியாமல் யோசித்தனர்.
இது ஒரு புறம் இருக்க ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் ஐவரும் கண்ணனின் பிறந்த நாளில் கலந்து கொள்ள வேண்டும் அப்படியே தாங்கள் செய்யவிருக்கும் யாகத்தில் கலந்து கொள்ள கண்ணனுக்கு அழைப்பு விடுக்க வேண்டு என முடிவு செய்தனர்.பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த பரிசினை அளிக்க விரும்பினர்.
அந்த வயதான கிழவி முறுக்கு சுட்டு அதனைத் தெருத் தெருவாகச் சென்று விற்று அதில் கிடைக்கும் வருவாயில் ஜீவனம் நடத்துபவள்..கண்ணா.. கண்ணா என்று அவன் நாமத்தையே சதா ஜெபித்துக்கொண்டு இருப்பவள்.முறுக்கு சுடும் போது முதல் முறுக்கை கண்ணா இது உனக்காக என்று சொல்லி எடுத்துவைத்து அதனை பசுவிற்குக் கொடுப்பது அவள் வழக்கம்.கண்ணனின் பிறந்த நாளன்று இம்முறைக் கண்ணனைக் காணவேண்டும் என்று விரும்பியது அவள் மனம்.ஆனாலும் நம்மைப் போன்ற ஏழைகளால் கண்ணனின் அரண்மைக்குச் செல்வதெப்படி..
அவனைக் காண்பதெப்படி இதெல்லாம் வீண் ஆசை என்று தோன்றியதுஅவளுக்கு கண்ணனுக்கு அவன் பிறந்த நாளில் முறுக்கு சுட்டுக்கொடுத்தால் எப்படி இருக்கும்? அவன் விரும்பிச் சாப்பிடுவதைப் பார்க்க ஆவலாய் உள்ளதே என நினைத்தாள் அக்கிழவி.
அந்தக்கிழவன் மிகவும் ஏழை.கட்டத் துணிகூட கிடையாது.கிழிந்த ஆடையே அணிந்திருப்பான்.அவனுக்கு கண்ணன் மீது மிகுந்த் பிரேமை.இறப்பதற்குள் ஒரு முறையாவது கண்ணனைக் காணவேண்டுமென்பது அவனது தீராத ஆசை.
அப்படிக் கண்ணனைக் காணும் போது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்பியது அவன் மனம்.மிகவும் சிரமப்பட்டு கூலிவேலை செய்து கிடைத்த வருவாயில் பருத்தியாலான துண்டு ஒன்றைவாங்கினான் அக்கிழவன்.
இத்துண்டை கண்ணனின் பிறந்த நாளன்று கண்ணனுக்குக் கொடுக்க கண்ணன் இதனை தன் மீது போர்த்திக்கொண்டால் அதைக் காண எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்?இதெல்லாம் நடக்கக் கூடியதா?ஏழையாகிய தம்மை கன்ணனின் அரண்மனைக்குள் அனுமதிப்பதே நடவாத காரியம்..இதில் எங்கே துண்டை அவனுக்கு அணிவிப்பது என எண்ணி வருந்தினான் அக்கிழவன்.
அன்று கண்ணனின் பிறந்த நாள்.அரண்மனை வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.கண்ணனைக் காணவும் அவனுக்கு வாழ்த்துச் சொல்லவும் பெரும் தனவந்தர்கள் வரிசையாய்க் காத்திருந்தனர். கண்ணனை ஈர்க்க விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்திருந்தனர்.தங்களின் வசதியைப் பிறர்க்குக் காட்டுவதையே பெரிதும் விரும்பினர்.
கண்ணன் பீதாம்பரதாரியாக ஆசனத்தில் வந்தமர்ந்தான்.ருக்மணியும் சத்ய பாமாவும் தங்கள் கைகளாலேயே தயாரித்த விதவிதமான பட்சணங்களைக் கண்ணனுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஊட்டி விட்டனர்.அப்படி ஒவ்வொரு முறையும் அவர்கள் கண்ணனின் வாயில் ஊட்டிவிடும் போதெல்லாம் கண்ணனும் அங்கே கூடியிருந்தவர்களும் உவ்வே..உவ்வே எனச் செய்வதும் வாந்தி வருவதைப் போன்ற உணர்வினையும் அடைந்தனர்.ருக்மணிக்கும் பாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.தாங்கள் செய்த பட்சணங்களை வாயில் போட்டுப் பார்த்தனர்.மணக்க மணக்க மிகுந்த ருசியோடு இருந்தன அவைகள்.
கண்ணனும் மற்றவர்களும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என அவர்களுக்குப் புரியவில்லை.
கையில் முறுக்குக் கூடையோடு ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தாள் அந்த வயதான கிழவி.உள்ளே சென்று கண்ணனுக்கு முறுக்கைக்கொடுக்க அனுமதிக்கும் படி கெஞ்சியும் வாயில் காப்போன் மறுத்து விட்டான்.கண்ணா..கண்ணா.. உனக்காக ஆசை ஆசையாய் முறுக்கு செய்து கொண்டுவந்தேனே உன்னிடம் தர முடியாமல் போய்விடும் போலிருக்கிறதே?இந்த ஏழையின் ஆசை நிறைவேறாதா?இம்முறுக்கை ருசிக்கும் உன் முகத்தைக்கான விரும்பினேனே..
என் ஆசை நிராசையாகிவிடுமோ என எண்ணியவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.சரி இனி கண்ணனைக் காணும் பாக்கியம் தனக்குக் கிட்டாது என எண்ணியவளாகத் திரும்பிப்போக எத்தனித்தவளை..பாட்டீ..பாட்டீ..எனக்கென கொண்டுவந்த முறுக்கைக் கொடுக்காமல் எங்கே செல்கிறீர்?என்ற குரலைக் கேட்டுத் திருபியவளுக்கு அங்கே சிரித்த முகத்தோடும் நீட்டிய கரத்தோடும் கண்ணன் நிற்பதைக் கண்டு தாங்க முடியாத சந்தோஷம்.அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.கண்ணா..கண்ணா....என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.வெகு சுவாதீனமாய் கூடையிலிருந்து முறுக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான் கண்ணன்.முறுக்கின் ருசி அவன் முகத்தில் தெரிந்தது.அவன் அனுபவித்த அந்த அற்புத ருசி அங்கிருந்த அனைவராலும் உணரப்பட்டது.. அறியப்பட்டது.