ஆஹா..ஆஹா..என்ன ருசி..என்ன ருசி என்ற சொல் அவர்களை அறியாமல் அவர்கள் வாயிலிருந்து வெளிவந்தது.
கொஞ்சமும் பிரேமை இல்லாது போட்டிக்காகவே பட்சணங்களைத் தாங்கள் செய்ததால் தான் அவை கண்ணனால் நிராகரிக்கப் பட்டன என்பதை புரிந்து கொண்ட ருக்மணியும் பாமாவும் தலை குனிந்தனர்.
கையில் பருத்தித் துண்டோடு வந்து நின்ற கிழவனை தடுத்து நிறுத்தினான் வாயில் காப்போன்.உள்ளே என்ன நடந்ததென்று வாயில் காப்போனுக்குத் தெரியவில்லை போலும்.போ..போ...இந்த மட்டமான துண்டையெல்லாம் கண்ணன் போட்டுக்க மாட்டாரு...அவரு பட்டுப் பீதாம்பரதாரின்னு ஒனக்குத் தெரியாதா?என்னண்ட வேணுன்னா குடு..நான் கைகால் துடைச்சுக்க வெச்சுப்பேன் இல்லாட்டிக் கொண்டுடுட்டுப் போயிடு..என்று கிழவனின் மனம் புண் படப் பேசினான் வாயில் காப்போன்.
அப்போது திடீரென கடுங் குளிர்காற்று வீச ஆரம்பித்தது.குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்.தாங்க முடியாத குளிர்.அங்கே இருந்த அனைவரும் ஐயோ குளிர் தாங்க முடிய வில்லையே..குளிர் தாங்க முடியவில்லையே எனக் கத்த ஆரம்பித்தனர்.
கண்ணனின் உடல் கிடு கிடுவென நடுங்க ஆரம்பித்தது.உடலே குளிரால் ஆடியது.
எல்லோரும் அதையும் இதையும் எடுத்துப் போர்த்திக் கொள்ள ஆரம்பித்தனர்.
கண்ணனைக் காண வந்திருந்த பாண்டவர்களும் குளிரால் நடுங்கினர்.அவர்கள் கண்ணனுக்கு பிறந்த நாள் பரிசாகப் போர்த்த மிக அழகான மிக மிக விலையுயர்ந்த அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டுவந்திருந்தனர்.பலருக்கும் நடுவில் கண்ணனுக்கு அதைப்போர்த்தித் தங்களின் செல்வாக்கைப் பறை சாற்றிக்கொள்ள விரும்பி இருந்தனர்.
அதற்கான நேரம் இதுவே என எண்ணி..கண்ணா..நாங்கள் உமக்காக மிக விலையுயர்ந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டு வந்துள்ளோம்.இதைப் போல் பார்ப்பதே அரிது.இக்கடுங்குளிரையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதது.
அதனை இதோ உனக்குப் போர்த்துகிறோம்.நீ குளிரிலிருந்து விடுபடுவாய் எனச் சொல்லிக்கொண்டே அப்பொன்னாடையைக் கண்ணனுக்குப் போர்த்தினர்.ம்ஹூம் ..குளிர் அடங்காமல் கண்ணன் நடுங்கிக்கொண்டிருந்தான்.அனைவருமே குளிரால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தனர்.
அப்போது கண்ணன் குடுகுடுவென வாசல் பக்கம் ஓடினான்.கையில் பருத்தித் துண்டுடன் இதைக்கண்ணனுக்குப் போர்த்த முடியவில்லையே என்ற வருத்தத்துடன் நின்றுகொண்டிருந்த ஏழைக்கிழவனிடம் ஐயா..குளிர் தாங்கமுடியவில்லை உங்கள் கையிலிருக்கும் துண்டை என் மீது போர்த்திவிடுங்கள்..குளிர் நிற்கிறதா பார்க்கிறேன் என்றான் மாயக் கண்ணன்.
கிழவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.கண்ணா..கண்ணா என்றபடியே கையிலிருந்த வெகு சாதாரணமான பருத்தி துண்டை கண்ணனுக்குப் போர்த்திவிட்டான்.என்ன ஆச்சரியம்?அடுத்த கணம் கண்ணனின் குளிர் அடங்கியது.குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த அவன் உடல் சாதாரண நிலைக்கு வந்தது.அங்கு குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் குளிரிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வந்தனர்.பாண்டவர்களும் குளிர் நீங்கிவிட்டதை உணர்ந்தனர்.
கண்ணன் பாண்டவர்களை அர்த்தத்தோடு பார்த்தான்.தாங்கள் கொண்டு வந்த விலையுயர்ந்த பொன்னாடைதான் சிறந்தது என எண்ணி அதைப் பலபேர் அறிய கண்ணனுக்குப் போர்த்தி தங்கள் பகட்டைப் பறைசாற்றிக்கொள்ள விரும்பியது எத்தனை பெரிய தவறு என உணர்ந்த பாண்டவர்கள் தலை குனிந்தனர்.
கண்ணன் விரும்புவது உண்மையான பக்தியோடு ஒரு உத்தரணி ஜலம்...ஒரு துளசி தளம் தந்தால் போதும் அவனுக்கு....
ஆடை,அணிகலன்,ஆடம்பரங்கள்...ஆண்டவன் விரும்புவதில்லை....