உழவர் திருநாளில் உழவர்க்கு முதல் வணக்கம்!
நாளெல்லாம் உழைத்து
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி
உயிர் காக்கும் பயிர் வளர்த்த
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
காடு மேட்டை கலப்பைக் கொண்டு உழுது
வறண்ட பூமியை வளமாக்கி
விதை விதைத்து பயிர் வளர்த்த
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
சேற்றிலும் சகதியிலும்
கல்லிலும் முள்ளிலும்
தன் கால்தடம் பதித்து
இரவு பகல் பாராமல்
உண்மையாக உழைக்கும்
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
வயலுக்கு வாய்க்கால் வெட்டி
பயிரின் வளர்ச்சிக்கு உரம் தூவி
வரப்பு மேட்டில் வேலியாய் காத்திருக்கும்
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
களை எடுத்து பயிரின் நிலை உயர்த்தி
முத்திட்ட நெல்மணியை சுமந்திட்ட பயிரை
கண் விழித்து காவல் காத்த
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
கதிர் முற்றி தலைகுனிந்த நெற்பயிரை அறுவடை செய்து
களத்து மேட்டில் கட்டடித்து
மலை போல குவிந்திருக்கும் நெல்மணியை பார்த்து மகிழும்
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !
மற்றவரும் மகிழ்ந்திட செங்கரும்பை பயிரிட்டு
வாய் மணக்க நாவினிக்க
தை திருநாளில் ஊருக்கே வழங்கிய
எங்கள் உழவனுக்கு முதல் வணக்கம் !