என் அம்மாவிற்கு.... - ப்ரியா
அலையடிக்கும் கடலாட்டம்
மனசில் எழுந்த எண்ணமெல்லாம்
சும்மா தான் கிறுக்கி வைச்சு
கவிஞன் என்னும் பெயரேடுத்தேன்..
காதலும் தான் கசிந்து உருகி
கல்யாண பந்தல் தாண்டி
பிள்ளை வரமும் பெற்றெடுத்து
பட்ட துயரம் பறைசாற்றி
காக்க வந்த கடவுளையும்
கச்சிதமா புகழ் பாடி
எட்டி மிதிக்கும் எமனை கூட
விட்டு வைக்கவில்லை என் எழுத்து....
காதல்,தனிமை,சுகம், சோகம்
பெண்ணியம்,பிடிவாதம்,போராட்டம்,பிள்ளை பேறு
எத்தனையோ எழுதிவிட்டேன்
உன் பெருமை பாட மறந்திட்டேன்...
மறந்திட்டேன் என நினைத்து
மறுகையில் தான் தெரியுதடி
கிறுக்கிய வரிகள் எல்லாம்
என்னவளுக்கு இணையில்லை...
எழுதும் தகுதி வந்த பின்பு
என் திறமையும் தான் உணர்ந்து பின்பு
இதோ தொடங்கிட்டேன்
உணர்ச்சி வெள்ளம் பொங்குதடி..!!
தலை சுத்தி கிறுகிறுக்க
அடி வயிற்றில் வலி பிடுங்க
குடலே வெளியே வருமோன்னு
பயத்தில் நீ வாந்தி எடுக்க
செய்தி கேட்ட பெருமையில் தான்
எங்க அப்பன் முகம் மினுமினுக்க...
தானாக எழுந்த பயம் மீறி
பூரிச்சு நின்னுருப்ப.....
மாமியாரும் மலைமலையாய்
தந்த வேலையெல்லாம்
முக சுருக்கம் இல்லாம
முன்னே நின்னு செஞ்சிருப்ப...
சீர் கொண்டு வரலன்னா என்ன
தேர் போல பிள்ளை வரும்ன்னு
அடுத்தவர் சொல் கேளாம
வைராக்கியமா நின்னுருப்ப..
அலுங்காம குலுங்காம இருந்து
பிள்ளையை பாத்துக்காம
ஓடியாடி உழைச்சிருப்ப..
என் தங்கம் எனை ஏமாத்தாம
வந்திறங்கும் பூமியிலன்னு
கனவும் தான் கண்டிருப்ப...
நள்ளிரவில் வலி எடுக்க
நாக்க கடிச்சு பொறுத்துருப்ப...
நானும் தான் வெளியில் வர
கண் மூடி சாஞ்சுருப்ப..
கண் விழிச்சு பார்கையில்
கருப்பட்டி போல் கிடந்த என்னை
என்ன நினைச்சு கையில் எடுத்துருப்ப
இப்போ கூட நான் அறியேன்.....
பிள்ளை எனை தவிக்க விட்டு
புகுந்த வீட்டு பெருமைக்காக
வேலைக்கு போன...
சண்டையும் தான் வந்து அப்போ
தனிக்குடித்தனம் நீயும் போக..
போனது தான் போனியே
என்னையுமா விட்டுட்டு போவ.....
மொழி தெரியா வயசிலயும்
உலகம் அறிய பருவத்திலயும்
உன்னை விட்டு இருந்திட்டேன்
தனிமையில் தான் பழகிட்டேன்...
நான் வளர்ந்து வீடு வர
உன் பொறுப்பு இப்போ என் கையில்...
பிறந்து வீடு பெருமைக்காக
வேலை தேடிக்கிட்டு வெளியே வர...
அம்மான்னு கொஞ்சி விளையாடும்
ஆசையெல்லாம் மண்ணோடு போச்சுதடி..
மதி மரத்து போச்சுதடி....
கண்ணில் தண்ணி முட்டி நிக்க
கருவோடு நீ தந்த வைராக்கியம் தடுக்குதடி...!!
தலை நிமிர்ந்து நான் நிற்க
நீ செஞ்ச தியாகம் எல்லாம் புரியுதடி....!!