பெண்மை - கவிதை போட்டி - 12 - மீனா
ஆதிகாலந்தொட்டே
அநீதியின் வேர்கள் எம்மை பின்தொடர்கின்றன
அகலிகையை கல் ஆக்கிய வேர்
சீதையை சிறை பிடித்த வேர்
பாஞ்சலியை துகிலுரித்த வேர்
ஆம் அநீதியின் வேர்கள் எம்மை பின்தொடர்கின்றன
பால்ய விவாகம் செய்வித்த வேர்
கல்வி கண் மறுத்த வேர்
சதி என்று உடன்கட்டை ஏற்றிய வேர்
அந்தபுரம் அமைத்து தாசி ஆக்கிய வேர்
ஆம் அநீதியின் வேர்கள் எம்மை பின்தொடர்கின்றன
கள்ளிப்பாலில் கதை முடித்த வேர்
கருவறையில் கொள்ளி வைத்த வேர்
கல்யாண சந்தையில் காசு பார்த்த வேர்
மூளி என்று முடக்கிவைத்த வேர்
மலடி என்று மட்டம் தட்டிய வேர்
ஆம் அநீதியின் வேர்கள் எம்மை பின்தொடர்கின்றன
மலை வாழ் பெண்ணின் மானம் பறிக்கும் வேர்
முறையிடும் பெண்ணின் மூக்கறுக்கும் வேர்
மூன்று வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த வேர்
மாதவள் உடலை 5 காமுகர்கள் வேட்டையாடிய வேர்
மனம் மறுக்கும் பெண்ணின் முகம் சிதைக்கும் வேர்
ஆம் அநீதியின் வேர்கள் எம்மை பின்தொடர்கின்றன
அநீதியின் வேர் அறுக்க
ஆயிரம் கனவான்கள் தோன்றினாலும்
பார்த்தீனிய செடி போல்
பார்த்த இடம் எல்லாம் பரவியது அவ்வேர்
ஆண்களையும் ஈன்று புறந்தருதல்
அவள் கடன் அறிவீரோ ?
பெண்மையை பெருமை என்று போற்ற வேண்டாம்
அடிமை ஆக்கி மிதிக்க வேண்டாம்
சக மனுசி என்று கைகுலுக்கி வாழ்வதில்
பெருமை கொள்கிறது எங்கள் பெண்மை