கவிதை - பெண்ணாய்ப் பேதலிக்கிறேன் - சரண்யா
மாதரென்றும், மங்கையெரென்றும், அன்னையென்றும்
மங்கல குலத்தவரென்றும், இளம் சிறார்களென்றும் பாரவில்லை
வெறும் சுகம் தரும் பிண்டங்களாய்க் காணும்
இழி நெஞ்சங்கொண்ட வன் பாதகரே!!!
தாயின் கருவறையில் இருந்த நீ கோவில்
கருவறை என்றும் பாராமல் சீரழித்தாய்
கண்ணீரும், அழுகுரலும் உன் செவிகளில் விழவில்லை
வலியினில் கதறி மனதினில் துவண்டு போராடித் தோற்று
உயிர் மூச்சடங்கும் வரை உன் வெறி அடங்கவில்லை
உன்னை வெட்டித் துண்டு பிண்டங்களாக்கிக் கழுகிற்கு
இரையிட்டாலும் என் மாதரின் ஆத்திரம் அடங்குவதில்லை
பள்ளிகளிலே பள்ளியறையாக்கும் ஆசிரியரெனும்
பெயரில் வதை செய்யும் குணக் கேடர்கள்
பயணங்களிலும், பணி புரிகையிலும் பலியாகும்
என் குலப் பெண்களின் அவலம் மட்டுமே ஒலிக்கிறது!
பெண்ணியம் பேசுகிறேன், பெண்மை பேசுகிறேன் என்றொரு
கூட்டமும் சுற்றுகிறது! இவர்கள் எந்தப் பெண்ணைக்
காக்கின்றனர்? இங்கு பெண்ணியலும் வன்னியலாக வாழுகின்றது!
பூவையர்கள் இன்று கோரர்களின் கைகளில் கசக்கப் படுகிறார்கள்
சமூகமோ கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது, வெறும் கேளிக்கைப்
பொருளாய் என் மாதரின் மானம் அவலமாகின்றது!
பார்வைகள் அனைத்தும் வக்கிரப் பார்வைகள்,
பெண்களை வசை பாடும் ஆடவர்கள், ஆடைகளில்
இருந்தாலும் தோலுரித்துப் பார்க்கும் பார்வைகளின் பிடியினில்!
காதலென்றும், நம்பிக்கையென்றும், தோழமையென்றும், சுற்றமென்றும்
எண்ணிப் பழகி கடைசியில் மதி இழந்து உயிருடன் உணர்விழக்கச்
செய்து நடமாடும் பிணமாகின்றனர் என் குல வைரங்கள்!
என்று மாறும் இந்த நிலை? யார் பொருப்பு இந்த அவல நிலைக்கு?
என்றேனும் மன்னிக்க முடியுமா? இல்லை மறக்கத் தான் முடியுமா?
ஆனாலும் மறைத்து விடுவார்கள்!!! கண்ணீர் கொண்ட மனதில்
வெந்நீர் ஊற்றி மட்டுமே அணைக்கின்றனர்!!!