என் இனிய ரசனை - சரண்யா
என்றும் உன் அழகான புன்னகையில்
என் மனம் மயங்கும் ரசனை!
இளவெயிலில் மின்னும் இலையின்
மேலுள்ள பனித்துளி ரசனை!
கூட்டமாய்ப் பூத்துக் குலுங்கி
மணம் பரப்பும் மலர்கள் ரசனை!
காதலிக்கும் பெண்களின் முகத்தில்
படரும் மென்மையான வெட்கம் ரசனை!
காதல் சொல்லத் தயங்கும்
ஆடவரின் பண்பும் ஒரு ரசனை!
சகோதர சகோதரிகளின் செல்லக் கோபங்களும்,
அன்போடு இழைந்த சண்டைகளும் ரசனை!
நட்புப் பட்டாளம் இணைந்து சிரித்துப்
பகிர்தலும், புரிதலும் ரசனை!
சோவெனப் பெய்யும் மழையில்
ஹோவென ஒலிக்கும் குரலும் ரசனை!
பறவைகளின் ரீங்காரத்தில் துயிலெழும்
இளங்காலைப் பொழுதின் ரசனை!
பௌர்ணமி நாளில் தெரியும் வானின்
முழு நிலவில் தெரியும் பிரகாசம் ரசனை!
அமாவாசையின் காரிருளின் சின்ன
விளக்கொளியில் தெரியும் அனைத்தும் ரசனை!
செல்லக் குழந்தையின் அழுகையும்,
குட்டிக் கண்களில் மனம் கவரும் விந்தையும்,
மழலை கொஞ்சி உதிர்க்கும் இளம் புன்னகையும்,
கிள்ளை மொழியில் மிழற்றும் பேச்சுக்களும்,
செய்கைகளும், இனிமையான கள்ளத்தனமும்
தனி ரசனையோ ரசனை!
ரசிக்கத் தெரிந்தால் அனைத்தும் ரசனை!
ரசிக மனம் படைத்த அனைவரிடமும் உள்ள
அழகிய பண்பும்,அன்பும் ரசனை !!!