கவிதை - பெண்ணே! - ஜான்சி
பெண்ணே!
அச்சம் அழகு தரும் என்பர் நம்பாதே
சுய நம்பிக்கை வேண்டுமடி உனக்கு
அடக்கம் பெண்மையெனச் சொல்வர் பணியாதே
பிறர் விருப்பம் தன் தலை சுமக்க நீ என்ன சுமை தாங்கியா?
நாணம் பெருமை தரும் என்பர் கேளாதே
உன் பெண்மை சீண்ட வரும் ஆணிடம் என்ன நாணம் வேண்டிக் கிடக்கு?
மடம் பெண்ணின் ஓர் குணம் என்பர்; வேண்டாம்
அறிவுப் பொலிவு தானே தேவையடி உனக்கு
அடக்கி ஆள்வதற்கு
நளினமான சொற்களை
தெரிவு செய்து சூடியுள்ளான் நமக்கு
உடல் பசியே பிரதானம்
கொஞ்சும் மொழி பேசுவதும்
கெஞ்சி உனைப் பாடுவதும்
தன் தாகம் தீர்த்திட அன்றி - இங்கு
உன் உள்ளம் யார் அறிவார்?
பெண் என்றால் இவர்களுக்கு
கொஞ்சும் முக அழகும்
விஞ்சும் மார்பழகும்
இல்லா இடையழகும்
மிஞ்சும் பின்னழகும்
மிஞ்சும் பின்னழகும்
கூந்தல் ஜடையழகும் தானடி!
உள்ளம் தேவையில்லை
உணர்வும் தேவையில்லை
அவர்தம் உணர்ச்சிக்கு அடிப்பணிய தேவையானது
அச்சமும், மடமும், நாணமும், பயிர்ப்புமே.
{kunena_discuss:779}