ஆசை தான்… – மீரா ராம்
அலைபாயும் கேசத்தை கலைத்து சொல்லிட ஆசை…
நெற்றியில் செல்லமாய் முட்டி சொல்லிடவும் ஆசை…
விழியோடு விழி சேர்த்து சொல்லிட ஆசை…
மூக்கோடு மூக்கை உரசி சொல்லிடவும் ஆசை…
கன்னத்தோடு கன்னம் வைத்து சொல்லிட ஆசை…
காதோரம் லேசாய் மூச்சுபட சொல்லிடவும் ஆசை…
அதரங்களை அழகாய் வருடி சொல்லிட ஆசை…
கழுத்தினில் முகம்தன்னை மறைத்து சொல்லிடவும் ஆசை…
தோள் மீது தலை சாய்த்து சொல்லிட ஆசை…
மாரில் புதைந்து கொண்டு சொல்லிடவும் ஆசை…
செல்போனில் குறுஞ்செய்தியாய் சொல்லிட ஆசை…
போன் செய்து ஆர்ப்பரித்து சொல்லிடவும் ஆசை…
சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸாய் சொல்லிட ஆசை…
அணிந்திருக்கும் சட்டை பிடித்து சொல்லிடவும் ஆசை…
சரியாக பன்னிரண்டு மணி அளவில் சொல்லிட ஆசை…
உன்னருகே இருந்து முதல்ஆளாய் சொல்லிடவும் ஆசை…
கோவிலில் உன் பக்கத்தில் இருந்து சொல்லிட ஆசை…
சாலையில் சற்று விலகி நடந்து சொல்லிடவும் ஆசை…
பைக்கில் குறைந்த இடைவெளியில் சொல்லிட ஆசை…
பேருந்தின் நீண்ட பயணத்தில் சொல்லிடவும் ஆசை…
மலர்கள் பறித்து கோர்த்து சொல்லிட ஆசை…
மனதை சேர்த்து பரிசளித்து சொல்லிடவும் ஆசை…
அழகு முகம் தன்னை கைகளில் ஏந்தி சொல்லிட ஆசை…
வெட்கம் தன்னை முகமெங்கும் பூசி சொல்லிடவும் ஆசை…
பாதம் நடந்த பாதையில் கால் வைத்து சொல்லிட ஆசை…
பரிதவிக்கும் பேதையின் பயம் மறைத்து சொல்லிடவும் ஆசை…
அடைமழையில் முழுதும் நனைந்தபடி சொல்லிட ஆசை…
முத்தமழையில் முழுதும் மூழ்கடித்து சொல்லிடவும் ஆசை…
யாருமறியா வேளையில் கண்ணடித்து சொல்லிட ஆசை….
கவிதை போல வார்த்தைகள் இணைத்து சொல்லிடவும் ஆசை…
வாழ்வனைத்தும் கூட இருந்து சொல்லிட ஆசை…
வாழ்வேது நீயின்றி என மனமுருகி சொல்லிடவும் ஆசை…
பிரியமானவளாய் நான் இருந்து சொல்லிட ஆசை…
பிரியமானவனாய் நீ இருப்பதை நினைவுகூறி சொல்லிடவும் ஆசை…
விநோதமானவளாய் விண்ணைத்தாண்டி சொல்லிட ஆசை…
விநோதமானவனாய் என்னைத்தூண்டி விட்டதை சொல்லிடவும் ஆசை…
சிநேகம் கொண்ட உந்தன் அன்பில் கரைந்தவளாய் சொல்லிட ஆசை…
சிநேகிதனே நீ தான் இவளுக்கென்றென சொல்லிடவும் ஆசை…
ஆசை தான்…
மூச்சு முட்டும் அளவிற்கு கோடி ஆசை நெஞ்சில் உண்டு…
இருந்தும் அதை வார்த்தை கொண்டு நிரப்பிட முடியுமா???
அறியேன்…
இருந்தும் அடிமனதின் ஆசையை உதாசீனம் செய்ய
விழையவில்லை என் மனம்…
எத்தனை வழி உண்டோ அத்தனை வழிகளிலும்
உன்னிடம் நான் சொல்லிட ஆசைதான்…
எனினும் நெஞ்சின் ஆழத்தில் உறங்காது
நின்றாடும் வரிகளை இப்போது சொல்கிறேன்…
கைகளோடு கைகள் கோர்த்து ஓரிரு நொடிகள் கண் பார்த்து…
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…” என….
{kunena_discuss:779}