கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 40 - நான் காத்திருக்கிறேனடா???...!!! - மீரா ராம்
இரவின் மடியில் நித்திரை கொள்ள விழைந்து
கண் மூடிடுகையில் ஏனோ உன் நினைவு…
எனக்குள்ளேயே புன்னகைத்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தேன்…
முழங்கால்களை மடித்து பிடித்துக்கொண்டு அதில் கன்னம் வைத்தவள்
காலையில் நடந்த நிகழ்வினை எண்ணிப்பார்க்கிறேன்…
என் அருகாமையை நீ விரும்ப
நானோ பயத்தோடு ஒன்றி நிற்க
கோபமும் சற்றே எரிச்சலும் உன்னை சூழ
அது பொறுக்காது நானும் தவித்திடுகையில்
என் நிலை கண்டு நீயோ துடித்திட்டாய்…
பரவாயில்லடா… உன்னைப் பார்த்ததே போதும்….
நீயும் சொல்லி சிரிக்கையில் உன் மனம் என் கண்முன்னே விரியும்…
பல மணி நேரம் என்னோடு நீ செலவிட நினைக்கிறாய்…
என் கை கோர்த்து சாலையில் நடக்க விரும்புகிறாய்…
இரு சக்கர வாகனத்தில் என்னையும் உன்னுடன் கூட்டிச்செல்ல விழைகிறாய்…
என்னை சீண்டி விட்டு திட்டு வாங்க திட்டம் போடுகிறாய்…
கோபம் கொண்டு நான் நிற்கையில் சமாதான உடன்படிக்கை செய்கிறாய்…
முடியாவிடில் கெஞ்சுகிறாய்… பின் கொஞ்சுகிறாய்…
அதனைக் கண்டு நான் சிரிக்கையில் நீ ரசிக்கிறாய்…
நீ ரசிப்பதை நான் அறிகையில் புன்முறுவல் பூக்கிறாய்…
சிணுங்கியபடி நான் திரும்பிடுகையில் விரலால் உன் சிகை கோதி புன்னகைக்கிறாய்…
விட்டு செல்லும் நேரம் வருகையில் வார்த்தை வராது மௌனிக்கிறாய்…
நான் செல்வதையே ஏக்கத்துடன் பார்த்துக்கொள்கிறாய்…
கை அசைத்து விடை கொடுத்தாலும் வீடு வரை என்னை பின் தொடர்ந்து வந்து காக்கிறாய்…
என் சந்தோஷத்தில் அகம் மலருகிறாய்…
நான் அழுகையில் உன் தோள் கொடுத்து தாங்க முயலுகிறாய்…
விரல் கோர்த்து என்னை தேற்ற துடிக்கிறாய்…
நொடிப்பொழுதில் அனைத்தும் கண்ணுக்குள் தோன்றி மறைய,
என் முன்னாடி சிரித்த முகத்துடன் நிற்கிறாய் நீ
நான் வரமாட்டேன் என தெரிந்தும்…
எப்படியடா?... உன்னால் என்னை இப்படி காதலிக்க முடிகிறது…
என் மேல் உனக்கு வந்த கோபம் கூட நிலைக்காதா?...
நானும் கேட்டிடுகையில் புன்னகை மட்டுமே எனக்கு பதிலாய்….
நேரமாச்சு வீட்டுக்கு கிளம்பு… என அவசரப்படுத்தி என்னை அனுப்பிடுவாய்…
என் பின்னேயே நிழலென நீயும் வருகிறாய்…
வாசல் வரை வந்துவிட்ட பின்னாடி நான் எட்டிப் பார்க்கையில்
தெருவின் ஓரத்தில் நீ ஏதும் அறியா பிள்ளை போல்
முகத்தினையும் வைத்துக்கொண்டு நின்றிட,
பார்த்த மாத்திரத்தில் புன்னகை எனக்குள் உதிக்க,
கைஅசைத்து உன்னை அழைத்திட்டேன்…
சட்டென்று நிமிர்ந்த நீயும், என்னைப் பார்த்திட,
கண் ஜாடையில் என்னை உள்ளேப் போக சொல்லி நீயும் வற்புறுத்த,
நானோ நின்று உன்னையே ரசித்திட,
போறீயா இல்லையா?... என நீ என்னை மிரட்டிட,
நான் உன்னை காதலிக்கிறேன்… என சைகையில் நான் உன்னைப் பார்த்து காதலுடன் கூறிட
வெட்கமா, இல்லை ஆனந்தமா என
இனம் பிரித்திட முடியாத புன்னகை உன் முகத்தில்…
நானும்… என உன் அதரங்கள் சொல்லும் முன்பே உன் விழிகள் சொல்லிட,
அதை என் இமைகளில் நிரப்பியவளாய்
இதழ்களில் புன்னகைக்கீற்றுடன் நான் உள்ளே நுழைய,
நீயோ மெல்ல விசிலடித்து நடந்தபடி சென்றாய்
விரல்களை உன் சிகையில் பிணைத்தபடி…
அன்றைய நாளின் நினைவுகள் என்னை அந்த இரவு வேளையிலும் தாக்கிட,
தலையணைக்கடியில் ஒளித்து வைத்திருந்த உன் புகைப்படத்தை
கையிலெடுத்து அதனைப் பார்த்து ரசித்தேன் மனதார…
நேரில் உன்னிடம் சொல்ல முடியாத ஆயிரத்தினையும்
புகைப்படத்தில் இருக்கும் உன்னோடு சொல்லிடுவேன்…
கரங்களில் புகைப்படமாய் தவழும் என் மன்னவா?..
என்று நான் உன் கரம் பற்றுவேன் மனைவியாக?...
அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேனடா கண்ணா… காத்திருக்கிறேன்…
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…
நன்றி…
மீண்டும் அடுத்த வாரம் இக்கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…
பூ மலரும்…
{kunena_discuss:1088}