07. ராதா கிருஷ்ணன் காதல் - அருந்ததியின் நண்பன் ஆகிய கண்ணன் - புவனேஸ்வரி
அடைமழையில் நடுங்கியது கானகம்
அனல் பறக்க கொதித்தது அருந்ததியின் அகம் !
ராதையின் தோழியவள் வந்தாள்
கண்ணனின் பாதை நோக்கி சென்றாள் !
அனைத்தும் அறிந்தான் மாதவன்
அவள் வழியில் தேடி சென்றான் மாயவன் !
பேசும் மான் ஒன்று வழி மறைக்க
நின்றாள் பெண்ணவள் அதை தடுக்க !
மானே வழிவிடு !
மாட்டேன் என்னோடு போர்தொடு !
மானிடன் ஆகிய பெண் நான் ,lஎப்படி தொடுப்பேன் உன்னுடன் போர் ?
மானிடன் ஆகிய பெண் நீ, தொடுக்கலாமோ எங்கள் கண்ணனுடன் போர் ?
கேட்கவேண்டியதை என்னிடம் கேள் !
கூற வேண்டிய பதில் யாம் உரைப்போம் !
கூறியதே வாய்பேசும் அதிசய மான்
தோன்றியதே அருந்ததிக்கு இனி பிடிவாதம் வீண் !
எங்கே உன் கண்ணன் ?
பெண்ணிவளை எதிர்கொள்ள துணிவில்லையோ ?
எங்கே உன் இதயம் நான் காணவேண்டும்
மானின்முன் மனம் காட்ட துணிவில்லையோ ?
அல்லது நீதான் இதயம் அற்றவளா ?
தேவையில்லா குதர்க்கம் !
எதற்கு செய்கிறாய் தர்க்கம் !
உடலில் உறைந்திருக்கும் இதயத்தை உன் கண்களில்
காட்டிட நான் கண்ணனை போல மாயவள் இல்லை!
அதுவே எனது பதிலும்
எங்கும் உறைந்திருக்கும் யதுனந்தனை
உன் கண்ணில் காட்டுவதும் சாத்தியமில்லை !
எங்கும் உறைந்திருப்பவன்
என் சகிக்கு காதல் பிணி தந்தவன் ஆவான் !
எங்கும் உறைந்திருப்பவன்
உன் சகிக்கு மெய் அன்பின் சத்தியம் உரைப்பவன் ஆவான் !
அப்படி என்ன சத்தியம்
சொல்லிடு என்னிடம் நீயும் !
அன்பு கொண்ட நெஞ்சம் மட்டுமே அறிய முடிந்த சத்தியம்
கோபம் வியாபிக்கும் உன் உள்ளத்தில் நிற்காது என் சத்தியம் !
துறக்கிறேன் கோபம் , மறக்கிறேன் என் வன்மம்
கூறு நீ நிச்சயம் , அருந்ததிக்கு அன்பின் எதார்த்தம் !
அருந்ததி நீ குணத்தால் பரிசுத்தம்
அதனாலேயே உனக்கு வேண்டாம் கோபமெனும் அபத்தம்
கூறுகிறேன் கேள் அன்பெனும் சகாப்தம் !
மண்டியிட்டாள் அருந்ததி மானின் முன்
தொடங்கியது மான், அதன் விளக்கம் !
கேளாய் அருந்ததி !
அன்பெனும் அதிசயம் பஞ்ச பூதங்களுக்கு கட்டுப்பட்டது !
அன்பு காற்று என்றால் ,
அது உருவமற்று இருக்கும் !
அன்பு தீ என்றால்
அது விரக தாபம் மூட்டும் !